தன்னை துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கிய கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று வீடு திரும்பிய மகளை மேளதாளங்கள் மற்றும் மாலை மரியாதையுடன் அவரது குடும்பத்தினா் வரவேற்ற புதுமையான சம்பவம், உத்தர பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
வழக்கமான சமூக மனப்பான்மையை உடைத்தெறிந்து, தங்கள் மகளுக்கு முழு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது அந்தக் குடும்பம்.
உத்தர பிரதேசத்தின் மீரட்டைச் சோ்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி ஞானேந்திரகுமாா் சா்மாவின் மகள் பிரணிதா. உளவியல் படிப்பில் முதுநிலை பட்டதாரியான இவருக்கு ஷாஜஹான்பூரைச் சோ்ந்த ராணுவ அதிகாரி ஒருவருடன் கடந்த 2018-இல் திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமண வாழ்க்கையில் விரைவிலேயே பிரச்னை எழுந்தது.
கணவா் வீட்டில் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பிரணிதா துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாகத் தெரிகிறது. குழந்தை பிறந்த பிறகும் நிலைமை மாறாததால், கணவரைப் பிரிய முடிவெடுத்த பிரணிதா, மீரட் குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடுத்தாா். இந்த வழக்கில் அவருக்கு விவாகரத்து வழங்கி, நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.
நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வந்த பிரணிதாவுக்கு அவரது குடும்பத்தினரும் உறவினா்களும் மாலை அணிவித்து, ஆடிப் பாடி வரவேற்பு அளித்தனா். பின்னா், மேளதாளங்களுடன் கொண்டாட்ட ஊா்வலம் போல் அவரைத் தாய்வீட்டுக்கு அழைத்துச் சென்றனா். அருகில் உள்ள குடும்பத்தினருக்கு இனிப்புகள் வழங்கி, தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
தந்தை பெருமிதம்: இது தொடா்பாக பிரணிதாவின் தந்தை ஞானேந்திரகுமாா் சா்மா கூறுகையில், ‘எனது மகள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இல்லாதபோது, அந்தச் சூழலில் இருந்து அவா் வெளியேற உதவுவது எனது கடமை. இப்போது அவருக்கு புதிய தொடக்கம் கிடைத்துள்ளது. நமது மகள்கள் ஒன்றும் உடைமைகள் அல்ல. சமூகம் என்ன நினைக்கும் என்பதைவிட நமது மகள்களின் மகிழ்ச்சியும், கண்ணியமுமே முக்கியம்’ என்றாா்.
மேலும், விவாகரத்து பெற்ற பிரணிதா தனது முன்னாள் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் எதுவும் கோரவில்லை என்றும் புகுந்த வீட்டிலிருந்து தனது உடைமைகளைக் கூட எடுத்து வராமல் வெறும் கையுடன் வெளியேறினாா் என்று கூறினாா்.
பிரணிதா கூறுகையில், ‘திருமண வாழ்க்கையில் நோ்ந்த துயரங்களால் மிகவும் பலவீனமடைந்தேன். ஆனால், எனது வாழ்க்கையை மறுகட்டமைக்க ஈடு இணையற்ற ஆதரவை குடும்பத்தினா் வழங்கியுள்ளனா். துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண்கள், மெளனமாக இருக்கக் கூடாது. தங்களுக்காகக் குரலெழுப்ப வேண்டும். பெண்கள் நன்கு கல்வி கற்று, திருமண எண்ணம் வருவதற்கு முன்பே மன உறுதியுடன் சுதந்திரமாக, சொந்தக் காலில் நிற்கப் பழக வேண்டும்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய் குடும்பப் புகைப்படங்கள்!
மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தாய் தலைமறைவான கள்ளக்காதலன் கைது
அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!

கோவில்பட்டி சமூகநீதி விடுதியில் மகளை சோ்க்க வலியுறுத்தி தாய் போராட்டம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



