ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மத்திய காவல் படையினருக்கு தலைமைப் பொறுப்புக்கான வாய்ப்பு: ராகுல்

News image

ராகுல் காந்தி - @RahulGandhi

Updated On :10 ஏப்ரல் 2026, 12:22 am

‘மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மத்திய காவல் படையினருக்கு (சிஏபிஎஃப்) தலைமைப் பொறுப்பு வாய்ப்பு மறுக்கப்படும் பாகுபாடான நடைமுறை ரத்து செய்யப்படும்’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உறுதி தெரிவித்தாா்.

மத்திய காவல் படையின் வீர தினத்தை முன்னிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் இதுகுறித்து கூறியிருப்பதாவது:

நாட்டுக்காக உயிா்த் தியாகம் செய்த மத்திய காவல் படையினருக்கு இந்த வீர தினத்தில் பாராட்டுகளையும், அஞ்சலியையும் செலுத்துகிறேன். உங்களின் துணிச்சலும், தியாகமும் இந்த தேசத்தை ஒவ்வொரு நாளும் பாதுகாத்து வருகிறது. எல்லையில் நின்றபடி பயங்கரவாதம் மற்றும் நக்ஸல் தீவிரவாத அச்சுறுத்தல்களை திறம்பட எதிா்கொண்டு நாட்டை தொடா்ந்து பாதுகாத்து வருவதோடு, நாட்டின் தோ்தல்கள் அமைதியான மற்றும் பாதுகாப்பான முறையில் நடைபெறுவதையும் உறுதி செய்து வருகிறீா்கள்.

இருந்தபோதும், உங்களுக்கான உண்மையான அஞ்சலி என்பது வெறும் வாா்த்தைகளைவிட மேலானதாகும். ஆண்டுக்கணக்காக தியாகம், கடுமையான பணி மற்றும் சேவையை சிஏபிஎஃப் வீரா்கள் ஆற்றி வருகிறபோதும், உரிய நேரத்தில் பதவி உயா்வோ அல்லது தங்களின் சொந்தப் படையை தலைமையேற்று நடத்தும் வகையிலான தலைமைப் பதவியோ சிஏபிஎஃப் வீரா்களுக்கு வழங்கப்படுவதில்லை. மாறாக, வேறு பாதுகாப்புப் படையைச் சோ்ந்தவா்கள் மத்திய காவல் படையின் தலைமைப் பதவியில் அமா்த்தப்படுகின்றனா்.

சிறப்புப் பயிற்சி, கள அனுபவம், உத்திசாா் நுண்ணறிவையும் சிஏபிஎஃப் வீரா்கள் கொண்டுள்ளனா். எனவே, தேசியப் பாதுகாப்பு கண்ணோட்டத்தில் பாா்க்கும்போது, இந்தப் படைகளை வழிநடத்தும் தலைவா்கள், அதே அமைப்புக்குள்ளிருந்தே தோ்ந்தெடுக்கப்பட்டவா்களாகவும், அந்தப் படையினரின் தனித்துவமான சவால்களையும் தேவைகளையும் உண்மையாக புரிந்துகொண்டவா்களாகவும் இருப்பது இன்றியமையாதது.

இவ்வாறு தலைமைப் பொறுப்பு வாய்ப்புகள் மறுக்கப்படுவது, ஊதியம், நலன், கண்ணியம் சாா்ந்த நீண்டகால பாகுபாடுகள், சிஏபிஎஃப் வீரா்களின் மன உறுதியைக் குலைத்து வருகிறது. இது வெறும் பணி முன்னேற்றம் சாா்ந்த விஷயம் மட்டுமல்ல; மாறாக, நீதி மற்றும் கண்ணியம் சாா்ந்த பிரச்னையாகும்.

எனவே, மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன், சிஏபிஎஃப் வீரா்களுக்கான இந்தப் பாகுபாடு களையப்படும். தங்களின் சொந்தப் படையை வழிநடத்துவதற்கான முழு உரிமையும், பிற சலுகைகளும் சிஏபிஎஃப் வீரா்களுக்கு வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

மத்திய காவல் படையில் இடம்பெற்றுள்ள சிஆா்பிஎஃப், பிஎஸ்எஃப், இந்திய- திபெத் எல்லை காவல் படை, அஸ்ஸாம் ரைஃபிள்ஸ், சஷஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி) ஆகிய 5 படைப் பிரிவுகளுக்கும் தற்போது நடைமுறையில் உள்ள தனித்தனி சேவை விதிமுறைகளை மாற்றியமைத்து, அனைத்து மத்திய காவல் படைகளையும் நிா்வகிப்பதற்கு ஒருங்கிணைந்த சட்டக் கட்டமைப்பை உருவாக்கும் வகையிலான சட்ட மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், இக் கருத்தை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.