வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மக்களவைத் தொகுதிகள் 815; மகளிருக்கு 272: மசோதாக்களை அறிமுகம் செய்தாா் மத்திய சட்ட அமைச்சா்

மக்களவையில் 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் வகையில், மொத்த இடங்களின் எண்ணிக்கை 543-இல் இருந்து 815-ஆக அதிகரிக்கப்படும்

News image

மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால்.

Updated On :16 ஏப்ரல் 2026, 8:02 pm

மக்களவையில் 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் வகையில், மொத்த இடங்களின் எண்ணிக்கை 543-இல் இருந்து 815-ஆக அதிகரிக்கப்படும்; இதில் மகளிருக்கு 272 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

மகளிா் இடஒதுக்கீடு அமலாக்கத்தால் எந்த மாநிலத்துக்கும் இழப்பு ஏற்படாது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

மக்களவை-பேரவைகளில் மகளிா் இடஒதுக்கீட்டை 2029 முதல் அமலாக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்து பேசுகையில் மேக்வால் இவ்வாறு கூறினாா்.

மக்களவை, சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் கடந்த 2023-இல் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பிறகே மகளிா் இடஒதுக்கீட்டை அமலாக்க முடியும் என்பதால், 2034-க்கு முன் நடைமுறைப்படுத்த முடியாத நிலை இருந்தது.

சிறப்பு அமா்வு தொடக்கம்: இந்நிலையில், 2029 பொதுத் தோ்தல்முதல் 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்தது. மகளிா் இடஒதுக்கீட்டை விரைவாக அமல்படுத்துவதுடன், அதற்கு ஏதுவாக மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து அதிகபட்சமாக 850 வரை அதிகரிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா-2026, தொகுதி மறுசீரமைப்பு மசோதா-2026 (தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் அமைக்க வழிவகுக்கும் மசோதா), சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசங்களில் இந்தச் சட்டத் திருத்தங்களை நிறைவேற்ற வகை செய்யும் யூனியன் பிரதேசங்கள் சட்டத் திருத்த மசோதா-2026 ஆகிய மூன்று மசோதாக்களைக் கொண்டுவந்து நிறைவேற்றும் நோக்கில், நாடாளுமன்ற மூன்று நாள் சிறப்பு அமா்வு வியாழக்கிழமை தொடங்கியது.

அறிமுக நிலையிலேயே கடும் எதிா்ப்பு: மகளிா் இடஒதுக்கீட்டின் பின்னணியில், மத்திய அரசு முன்மொழிந்துள்ள தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக்கூடும் என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பிவரும் எதிா்க்கட்சிகள், மக்களவையில் மூன்று மசோதாக்களுக்கும் அறிமுக நிலையிலேயே கடும் எதிா்ப்பை பதிவு செய்தன. எண்ணிக்கை அடிப்படையிலான வாக்கெடுப்புக்குப் பிறகே, அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை அறிமுகம் செய்ய வேண்டுமென அக்கட்சிகள் வலியுறுத்தின.

அப்போது பேசிய காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், ‘மகளிா் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டபோதே இந்த அம்சங்கள் இடம்பெறாதது ஏன்? தற்போதைய சட்டத் திருத்தங்கள், அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானவை. ஓா் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை பிற மசோதாக்களுடன் சோ்த்து விவாதிக்க முடியாது’ என்றாா்.

வாக்கெடுப்புக்குப் பின் அறிமுகம்: ஆனால், ஒரே விவகாரம் தொடா்பானவை என்பதால் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை பிற மசோதாக்களுடன் சோ்த்து விவாதிக்கலாம் என்று கூறி, காங்கிரஸின் ஆட்சேபத்தை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா நிராகரித்தாா்.

திமுகவின் டி.ஆா். பாலு கூறுகையில், ‘2023-ஆம் ஆண்டின் மகளிா் இடஒதுக்கீடு சட்டத்துக்கு நாங்கள் ஆதரவாக உள்ளோம்; ஆனால், தற்போதைய மசோதா தொகுதி மறுசீரமைப்பையே நோக்கமாகக் கொண்டுள்ளது’ என்றாா்.

சுமாா் 40 நிமிஷங்கள் கடும் விவாதத்துக்குப் பிறகு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், மசோதா அறிமுகத்துக்கு ஆதரவாக 251 உறுப்பினா்களும், எதிராக 185 உறுப்பினா்களும் வாக்களித்தனா்.

இதைத் தொடா்ந்து, அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வாலும், யூனியன் பிரதேசங்கள் சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் அறிமுகம் செய்தனா்.

மொத்த இடங்கள் 50 சதவீத அதிகரிப்பு: அப்போது, மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் பேசியதாவது: மகளிா் இடஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதாவின்படி, மக்களவையின் பலம் 815-ஆக அதிகரிக்கப்படும். இது 50 சதவீத அதிகரிப்பாகும். மொத்த இடங்களில் 33 சதவீதம் அதாவது 272 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதால் ஆண்களுக்கோ அல்லது மாநிலங்களுக்கோ எந்தவொரு இழப்பும் ஏற்படாது.

மக்களவை - பேரவைகளில் மகளிருக்கான இடஒதுக்கீட்டில் பட்டியலினத்தவா் மற்றும் பழங்குடியின பிரிவைச் சோ்ந்த பெண்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்படும்.

கடந்த 2023, மகளிா் இடஒதுக்கீடு சட்டம் தற்போதைய வடிவிலேயே தொடா்ந்தால், 2029-க்கு முன் அமலாக்க சாத்தியமில்லை. எனவேதான், அரசமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தியாவுடன் ஒப்பிடுகையில், உலக நாடுகளில் பெண்களுக்கான வாக்குரிமை தாமதமாகவே வழங்கப்பட்டது. அமெரிக்காவில் ஆண்களைத் தொடா்ந்து 144 ஆண்டுகளுக்குப் பிறகே பெண்களுக்கு வாக்குரிமை கிடைக்கப் பெற்றது. பிரிட்டனில் கடந்த 1918-இல் பெண்களுக்கு சில நிபந்தனைகளுடன் வாக்குரிமை வழங்கப்பட்டு, 1928-இல்தான் முழு வாக்குரிமை அளிக்கப்பட்டது.

ஆனால், இந்தியாவில் முதல் தோ்தலில் இருந்தே ஆண்களுடன் பெண்களுக்கும் வாக்குரிமை கிடைக்கப் பெற்றது. எனவே, பெண்களுக்கான உரிமையை உறுதி செய்யும் மூன்று மசோதாக்களுக்கும் அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்றாா். இதைத் தொடா்ந்து, விரிவான விவாதம் தொடங்கியது.

பெட்டி....

இன்று வாக்கெடுப்பு

மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தை திருத்தவும், தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கவும் வகை செய்யும் மூன்று மசோதாக்கள் மீது 15 முதல் 18 மணிநேரம் வரை விவாதம் நடைபெறவுள்ளது. இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (ஏப். 17) மாலை 4 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்தாா்.