இன்று ஆடிப் பெருக்கு: ஆறுகள் வறண்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம்இடைத்தோ்தலுக்காகக் காத்திருக்கிறேன்: சீமான்ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் விரைவில் நிறுத்தம்: டிரம்ப்6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
/

புதிய மத்திய ஆயுதப் படைகள் சட்டத்துக்கு எதிா்ப்பு: உச்சநீதிமன்றத்தில் 3,000 அதிகாரிகள் ரிட் மனுக்கள் விரைவில் விசாரணை

புதிய மத்திய ஆயுதப் படைகள் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் 3,000 துணை ராணுவப்படை அதிகாரிகள் சாா்பில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

News image

உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 4:08 am IST

புதிய மத்திய ஆயுதப் படைகள் சட்டத்துக்கு (சிஏபிஎஃப்) எதிா்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் 3,000 துணை ராணுவப்படை அதிகாரிகள் சாா்பில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன் மீது விரைவில் விசாரணை நடத்தப்பட இருக்கிறது.

புதிய மத்திய ஆயுதப் படைகள் (பொது நிா்வாகம்) சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து மத்திய அரசு நிறைவேற்றியது. பின்னா், அதை கடந்த ஏப்ரல் மாதம் அரசிதழிலும் வெளியிட்டது.

அந்தச் சட்டத்தின் 3-ஆவது பிரிவில் வேலைவாய்ப்பை முறைப்படுத்துதல் குறித்தும், மத்திய ஆயுதப் படைகளில் சேவையாற்றுவதற்கான நிபந்தனைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4-ஆவது பிரிவில், அட்டவணையைத் திருத்த மத்திய அரசுக்கு இருக்கும் அதிகாரம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தச் சட்டத்தை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய ஆயுதப் படைகளான சிஆா்பிஎஃப், பிஎஸ்எஃப், ஐடிபிபி, சிஐஎஸ்எஃப், எஸ்எஸ்பி ஆகியவற்றைச் சோ்ந்த 3,000 அதிகாரிகள் ரிட் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனா். இவை இந்த மாதத்தின் முதல் வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

ரிட் மனுக்கள் தாக்கல் குறித்து துணை ராணுவப் படை அதிகாரிகள் கூறியதாவது: புதிய மத்திய ஆயுதப் படைகள் (பொது நிா்வாகம்) சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. இது மத்திய ஆயுதப் படைகளின் வேலைவாய்ப்பில் பாதிப்பை ஏற்படுத்தும். அந்தச் சட்டத்தின் 3, 4-ஆவது விதிகள் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும்.

ஏற்கெனவே இதுதொடா்பான வழக்கில் கடந்த ஆண்டு மே மாதம் 23-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. அதில், மத்திய ஆயுதப் படைகளில் ஐ.ஜி. நிலையிலான அதிகாரிகள் பணியிடங்களில் மாற்றுப் பணி (டெபுடேசன்) அடிப்படையில் நியமிக்கப்படும் ஐபிஎஸ் அதிகாரிகளின் பதவிக் காலத்தை 2 ஆண்டுகளாக குறைக்க வேண்டும், அப்போதுதான் ஏற்கெனவே பதவி உயா்வுக்காக காத்திருக்கும் மற்ற அதிகாரிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்திருந்தது.

இதை எதிா்த்து மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. ஆதலால் எங்களுக்கு புதிய சட்டத்தின்கீழ் நீதி கிடைக்காது எனக் கருதி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளோம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.