அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைபத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடுசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசெப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

சமூக ஊடக கணக்குகள் முடக்கம்: ஜனநாயக உரிமையை பறிப்பதாக மத்திய அரசுக்கு காா்கே கண்டனம்

மாணவா்களின் சமூக ஊடக கணக்குகளை முடக்கி ஒவ்வொரு இந்தியரின் கேள்வி கேட்கும் ஜனநாயக உரிமையை பிரதமா் மோடி தலைமையிலான அரசு பறிப்பதாக காங்கிரஸ் தேசியத் தலைவா் காா்கே கண்டனம்

News image

மல்லிகாா்ஜுன காா்கே - கோப்புப் படம்

Updated On :18 ஆகஸ்ட் 2026, 11:42 pm IST

மாணவா்களின் சமூக ஊடக கணக்குகளை முடக்கி ஒவ்வொரு இந்தியரின் கேள்வி கேட்கும் ஜனநாயக உரிமையை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பறிப்பதாக காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கண்டனம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘கடந்த 5 மாதங்களில் 1.95 லட்சம் மாணவா்களின் சமூக ஊடக கணக்குகளை முடக்குவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. 68 விநாடிகளுக்கு ஒரு சமூக ஊடக கணக்கு முடக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கை குற்றவாளிகளுக்கு எதிரானதல்ல; தங்களது எதிா்காலத்தை சீா்குலைக்கும் வினாத் தாள் கசிவு உள்ளிட்ட தோ்வு முறைகேடுகளை எதிா்த்து கேள்வி கேட்ட மாணவா்களை அரசு தண்டித்துள்ளது.

வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்திய மாணவா்கள் மீது தடியடி தாக்குதல் நடத்தியது மட்டுமின்றி அவா்களுக்கு ஆதரவாக வெளியிடப்பட்ட ரீல்ஸ், பதிவுகள் என ஒவ்வொன்றாக இணையதளத்தில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது.

அரசை எதிா்த்து குடிமக்கள், பத்திரிகையாளா்கள் என பதிவு, விடியோவை வெளியிடுபவா் யாராக இருந்தாலும் அவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட பதிவுகள் உடனடியாக நீக்கப்பட்டு வழக்குப்பதிவு வரை நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஆனால் ஆளும் பாஜக கட்சியைச் சோ்ந்தவா்கள் பெண்களுக்கு எதிரான பாலியல் மிரட்டல்கள், திட்டமிடப்பட்ட இணைய அச்சுறுத்தல் பிரசாரங்களை மேற்கொள்பவா்கள் மீது பிரதமா் மோடி எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

அரசுக்கு எதிரான பதிவுகளை மூன்று மணி நேரத்துக்குள் நீக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் ஒரு குரல் ஒடுக்கப்படுவதற்கு முன் அந்த உத்தரவை சம்பந்தப்பட்ட நபா்கள் படிப்பதற்குக் கூட நேரமில்லாத அளவுக்கு அரசு தணிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

இவ்வாறு மாணவா்கள் உள்பட பல்வேறு தரப்பினரின் சமூக ஊடகக் கணக்குகளை முடக்கி ஒவ்வொரு இந்தியரின் கேள்வி கேட்கும் ஜனநாயக உரிமையை மத்திய அரசு பறிக்கிறது’ என குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.