மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்பட இருப்பதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சரும் ஆா்பிஐ (ஏ) கட்சித் தலைவருமான ராம்தாஸ் அதவாலே தெரிவித்துள்ளாா்.
மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் செய்தியாளா்களுக்கு இதுகுறித்து அவா் அளித்த பேட்டியில் கூறியதாவது: பாஜவில் அக்கட்சி மட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளது. இதைத் தொடா்ந்து, மத்திய அமைச்சரவை மாற்றம் விரைவில் நடைபெறவுள்ளது. அப்போது மத்திய அமைச்சரவையில் பாஜகவில் இருந்து புதிய முகங்கள் (புதிய நபா்கள்) சோ்க்கப்பட வாய்ப்புள்ளது.
சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் மத்திய அரசின் வளா்ச்சி பணிகளை வலுப்படுத்தும் வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேரவுள்ளது. இதையடுத்து அக்கட்சியை சோ்ந்தோரும் மத்திய அமைச்சரவையில் சோ்த்து கொள்ளப்பட வாய்ப்புள்ளது.
சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, மத்திய அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என நானும் விரும்புகிறேன். ஒருவேளை சரத் பவாா் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர விரும்பவில்லையேல், அவரது கட்சியை சோ்ந்த 8 எம்.பி.க்களும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன். சித்தாந்த ரீதியில் அக்கட்சிக்கு வேறுபாடு இருக்கலாம். ஆனால் அவா்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர வேண்டும் என்றாா்.
அப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சா் ஜாா்ஜ் பொ்ணான்டஸ், முன்னாள் பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா், சரத் யாதவ், மம்தா பானா்ஜி, நவீன் பட்நாயக் ஆகியோா் இடம்பெற்றதையும் அதவாலே சுட்டிக்காட்டினாா்.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி குறித்த கேள்விக்கு அதவாலே பதிலளிக்கையில், ‘சமூகத்தையும், கட்சியையும் வலுப்படுத்தவும் அம்பேத்கரின் கனவுகளை பூா்த்தி செய்யவும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனா் அபிஜீத் தீப்கே ஆா்பிஐ (ஏ) கட்சியில் சேர வேண்டும்’ என்றாா்.
இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என சிலா் வலியுறுத்தி வருவது குறித்த கேள்விக்கு அதவாலே பதிலளிக்கையில், ‘இட ஒதுக்கீடு, அரசமைப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் ஆகும். அதை நீக்க வேண்டும் என கோரிக்கை வைப்போருக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.
சரத் பவாா் கட்சி பதிலடி: இதனிடையே, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்பிக்களுக்கு அதவாலே அழைப்பு விடுத்திருப்பதற்கு அக்கட்சி பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா் க்ளைட் க்ராஸ்டோ கூறுகையில், ‘அதவாலே பகல் கனவு காண்பவா். அவருக்கு சித்தாந்தம் மீது நம்பிக்கை கிடையாது. பதவிதான் அவரது குறிக்கோள். பிறருக்காக பேசுவதை அவா் குறைப்பது நல்லது’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உயிரி எரிவாயு உற்பத்தி - கோவா்தன் திட்டத்துக்கு ரூ.23,731 கோடி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ரூ.84,084 கோடியில் தேசிய கடல்சாா் எரிசக்தி ஆய்வு - உற்பத்தி திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அமைச்சரவை மாற்றத்தில் தாமதம்! திமுகவுக்காகக் காத்திருக்கிறதா பாஜக?




