

உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தில், கொரியன் கேமுக்கு அடிமையாகியிருந்த மூன்று சிறுமிகள் தங்கள் வீடு இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் 9-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.
வீட்டின் ஜன்னல் வழியாகக் குதித்ததில் படுகாயம் அடைந்த மூன்று சிறுமிகளும் சம்பவ இடத்தில் பலியாகியிருப்பதும் மூவரும் சகோதரிகள் என்பதும் தெரிய வந்துள்ளது.
பலியானவர்கள் நிஷிகா (16), பிரச்சி (14), பாக்கி (12) என்பதும், இவர்கள் கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு பள்ளிக்குச் செல்லாமல் இருந்துள்ளதும், மூத்த சகோதரி நிஷிகா நான்காவது வரை மட்டுமே பள்ளிக்குச் சென்று வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது கொலையா? தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்கள் மூவரும் நள்ளிரவு 2 மணிக்கு வீட்டின் நாற்காலி மீது ஒவ்வொருவராக ஏறி, மாடியிலிருந்து கீழே குதித்திருக்கிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த மூன்று பேரும், கொரியன் கேமிங் செயலிக்கு அடிமையாகியிருந்ததாகவும், அந்த கொரியன் கேமிங் ஆப் சொல்வதை இவர்கள் செய்ய வேண்டும் என்பது போல வடிவமைக்கப்பட்டிருக்கும் என்றும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இவர்களது தற்கொலைக் கடிதம் கிடைத்திருப்பதாகவும், இது பற்றி விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
காஸியாபாத் காவல்துறையினர் இது குறித்து கூறுகையில், பிப்.4ஆம் தேதி அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. மூன்று சிறுமிகள் மாடியிலிருந்து குதித்துவிட்டதாகத் தகவல் கிடைத்தது. அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
அவர்கள் இறப்பதற்கு முன்பு எழுதியிருக்கும் தற்கொலைக் கடிதத்தில், அவர்கள் கொரிய கலாசாரத்துக்கு மாறியிருந்தது தெரிய வருகிறது. கொரியன் கேமிங் செயலிகளுக்கும் அடிமையாகியிருக்கிறார்கள். குறிப்பாக எந்த செயலி என்பதை சொல்ல முடியவில்லை. ஒட்டுமொத்த குடும்பமும் சம்பவத்தின்போது வீட்டில்தான் இருந்திருக்கிறார்கள். அனைவரும் உறங்கிக் கொண்டிருந்ததால் யாருக்கும் என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று காவல்துறை கூறியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.