

மணிப்பூர் முதல்வராக யும்நாம் கெம்சந்த் சிங் இன்று (பிப். 4) மாலை பதவியேற்றார்.
மணிப்பூர் வரலாற்றில் முதல்முறையாக குகி இனத்தைச் சேர்ந்த நெம்சா கிப்கென் என்ற பெண் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். மற்றொரு துணை முதல்வராக, நாகா மக்கள் முன்னணியைச் சேர்ந்த லோசி டிகோ பொறுப்பேற்றுள்ளார்.
கடந்த ஓராண்டாக மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி நீடித்து வந்த நிலையில், பாஜக இன்று ஆட்சி அமைத்துள்ளது.
பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, முதலில் நாகா மக்கள் முன்னணியைச் சேர்ந்த மற்றொரு நபரை துணை முதல்வராக நியமிக்க பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
தற்போது மணிப்பூர் வரலாற்றில் துணை முதல்வராக பொறுப்பேற்ற குகி இனத்தைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் நெம்சா கிப்கென்.
யார் இவர்?
நெம்சா கிப்கென் பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவராவார். 2012 முதல் காங்போக்பி சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள இவர், மாநில அமைச்சரவையில் பல பொறுப்பு வகித்துள்ளார்.
2017-2020 வரையிலான பிரேன் சிங் ஆட்சியில் சமூக நலத் துறை அமைச்சராக இருந்துள்ளார். வணிகம் மற்றும் தொழில் துறை, ஜவுளித் துறை அமைச்சர் பொறுப்புகளையும் வகித்துள்ளார்.
தனது தொகுதிக்குட்பட்ட குகி இன மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பலகட்ட முயற்சிகளை எடுத்துள்ளார். குகி இளைஞர்களின் எதிர்கால நலனுக்கான முன்னின்று பல செயல்பாடுகளை முன்னெடுத்துள்ளார். குகி தேசிய முன்னணி இயக்கத்தின் தலைவரான தங்போய் கிப்கென் இவரின் கணவராவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.