

மணிப்பூர் முதல்வராக யும்நாம் கெம்சந்த் சிங் இன்று (பிப். 4) மாலை பதவியேற்றார்.
கடந்த ஓராண்டாக மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி நீடித்து வந்த நிலையில், பாஜக இன்று ஆட்சி அமைத்துள்ளது.
மணிப்பூர் வரலாற்றில் முதல்முறையாக குகி இனத்தைச் சேர்ந்த நெம்சா கிப்கென் என்ற பெண் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். மற்றொரு துணை முதல்வராக, நாகா மக்கள் முன்னணியைச் சேர்ந்த லோசி டிகோ பொறுப்பேற்றுள்ளார்.
தலைநகர் இம்பாலில் மணிப்பூர் ஆளுநர் அஜய் பல்லா இவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பாஜக மூத்த தலைவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதன்மூலம் மணிப்பூரில் நீடித்துவந்த குடியரசுத் தலைவர் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. குடியரசுத் தலைவர் ஆட்சியை திரும்பப் பெறுவதாக உள்துறை அமைச்சகமும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மணிப்பூரில் குகி - மைதேயி என இரு இன மக்களிடையே நீடித்து வந்த மோதல் வன்முறையாக மாறியது. தொடர்ந்து நீடித்த வன்முறையால் இரண்டு ஆண்டுகளில் இருதரப்பிலும் பல உயிர்பலிகள், பொருள் இழப்புகள் ஏற்பட்டன. நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்ததால், பிரேன் சிங் தனது முதல்வர் பதவியை 2025 பிப். 9 ஆம் தேதி ராஜிநாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சி அமலில் உள்ளது. முதலில் 6 மாதங்கள் குடியரசுத்தலைவர் ஆட்சி இருந்த நிலையில், மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், ஆட்சி அமைக்க ஆளுநரிடம் பாஜக உரிமை கோரியது.
தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மணிப்பூர் பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் நேற்று நடைபெற்றது. பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவராக யும்நாம் கெம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இன்று முதல்வராக அவர் பொறுப்பேற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.