சுராசந்த்பூரில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மணிப்பூரில் குகி-ஜோ அமைப்புகள் போராட்டம் பற்றி..
வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள்.
வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள்.
Updated on
1 min read

மணிப்பூரின் சுராசந்த்பூா் மாவட்டத்தில் இரண்டு பழங்குடியின அமைப்புகள் "முழு அடைப்பு" போராட்டத்தை அறிவித்ததால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் மைதேயி, குகி சமூகத்தினர் இடையிலான மோதல் காரணமாக 2 ஆண்டுகளுக்கும் மேலாக வன்முறை நிலவியது. இதில் சுமாா் 260 போ் உயிரிழந்தனர். இந்த வன்முறை காரணமாகக் கடந்த ஆண்டு பிப். 9-ஆம் தேதி மாநில முதல்வர் பதவியை பாஜகவைச் சேர்ந்த பிரேன் சிங் ராஜிநாமா செய்தார். இதைத் தொடர்ந்து, அந்த ஆண்டு ஆகஸ்ட் வரை 6 மாதங்களுக்குக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னா், மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சி, வரும் பிப்.12-ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்தது.

இந்த நிலையில், தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மணிப்பூர் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது மணிப்பூர் பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக யும்நாம் கெம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தின் புதிய முதல்வராக அவர் புதன்கிழமை பதவியேற்றார்.

இந்த நிலையில், குகி சமூகத்தைச் சேர்ந்த நெம்சா கிப்ஜென் புதிய அரசின் இணைந்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து குகி-ஜோ அமைப்புகள் சுராசந்த்பூா் மாவட்டம் துய்மோங்கில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டன. சமூகத்தின் ஒப்புதல் இன்றி அவர் அரசில் இணைந்ததாக அவர்கள் புகார் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் இந்தப் போராட்டம் தீவிரமடைந்தது. போராட்டக்காரர்கள் டயா்களுக்கு தீ வைத்ததோடு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர்.

இதனிடையே, குகி மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேர முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. இதனால், மாநிலத்தில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. வெள்ளிக்கிழமை காலை, தடியுடன் வந்த பந்த் ஆதரவாளர்கள் மாவட்டத் தலைமையிட நகரத்தின் சில பகுதிகளில் வாகனங்களை மறித்தனர்.

மாவட்டத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் மாவட்டத் தலைமையிட நகரத்தின் முக்கிய இடங்களில் கூடுதல் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Summary

Normal life in Manipur's Churachandpur district was affected after two tribal bodies imposed a "total shutdown"

வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள்.
வெளிநாடு செல்லும் ராசி எது? வார பலன்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com