

ஹரியாணாவில் மருத்துவமனை, வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹரியாணா மாநிலம், யமுனா நகர் பகுதியில் முகத்தை மூடிய நிலையில் மூன்று இளைஞர்கள் தனியார் மருத்துவமனைக்குள் சனிக்கிழமை இரவு நுழைந்தனர். தொடர்ந்து அவர்கள், வரவேற்புப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். பிறகு அவர்கள் வணிக வளாகத்திற்கும் வெளியேயும் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பி ஓடிவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்ததும், போலீஸார் பல சோதனைச் சாவடிகளை அமைத்து குற்றம்சாட்டப்பட்டவர்களைத் தேடத் தொடங்கினர். இந்த நிலையில் யமுனாநகரின் கசன்பூர் பகுதிக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை காலை இருச்சக்கர வாகனத்தில் சென்றபோது அவர்களைத் தடுத்து போலீஸார் சுற்றி வளைத்தனர். அப்போது போலீஸார் மீதும் அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பதிலடித் தாக்குதலில், இரண்டு இளைஞர்கள் காயமடைந்தனர். மூன்றாவது இளைஞர் இருசக்கர வாகத்தில் இருந்து தவறி விழுந்ததில் காயமடைந்தார். அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். மக்களிடம் பயத்தை ஏற்படுத்த குற்றம்சாட்டப்பட்டவர்கள் விரும்பினர் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், மிரட்டி ஏதேனும் பணம் பறித்தார்களா என்கிற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.