

கிரேட்டர் நொய்டாவில் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கும்போது 6 வயது சிறுவன் பலியானதாக குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் டயக்னாஸ்டிக் மையத்தில் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கும் போது 6 வயது சிறுவன் பலியானதாக புகார் எழுந்துள்ளது. ஸ்கேன் மையம் அலட்சியமாக செயல்பட்டதாக சிறுவனின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர் என்று அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை ஸ்கேன் மையத்துக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் சம்பவம் குறித்து விசாரிக்க நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்று கௌதம் புத்த நகர் சுகாதாரத் துறையின் மருத்துவர் சந்தன் சோனி பிடிஐயிடம் தெரிவித்தார். இறப்புக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.
விசாரணை முடிந்த பிறகு தீர்மானிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார். பரிசோதனைக்கு முன்னதாக சிறுவன் ஆரோக்கியமாகவே இருந்ததாகவும், ஸ்கேன் மையத்தின் அலட்சியத்தால் சிறுவன் பலியானதாகவும் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சிறுவனின் தந்தை விக்கி, ஸ்கேன் மையத்திற்கு எதிராக பீட்டா-2 காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மருத்துவ விசாரணை அறிக்கை கிடைத்த பிறகு வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.
வியாழக்கிழமை துங்கர்பூர் கிராமத்தில் வசிக்கும் சிறுவன், எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க பை-3 பகுதியில் அமைந்துள்ள ஸ்கேன் மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.