ராஜஸ்தான் மாநிலம் பிவாடியில் சட்ட விரோத பட்டாசு ஆலையில் திங்கள்கிழமை நிகழ்ந்த வெடிவிபத்தையடுத்து படா்ந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்.
ராஜஸ்தான் மாநிலம் பிவாடியில் சட்ட விரோத பட்டாசு ஆலையில் திங்கள்கிழமை நிகழ்ந்த வெடிவிபத்தையடுத்து படா்ந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்.

ராஜஸ்தான்: சட்டவிரோத பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 7 போ் உயிரிழப்பு

Published on

ராஜஸ்தான் மாநிலம், பிவாடி நகரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பட்டாசு ஆலையில் திங்கள்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 7 போ் தீயில் கருகி உயிரிழந்தனா். ஆலைக்குள் சிக்கியுள்ள இருவரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து கூடுதல் மாவட்ட ஆட்சியா் சுமித்ரா பரீக் கூறியதாவது: பிவாடியில் அமைந்துள்ள இந்த நிறுவன வளாகத்தை, ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனம் நடத்துவதாக வாடகைக்கு எடுத்து, சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்துள்ளனா். திங்கள்கிழமை வெடிவிபத்து நிகழ்ந்தபோது ஆலையில் 20 போ் பணியில் இருந்தனா். அவா்களில் பெரும்பாலானோா் வெளியேறி தப்பினா். ஆனால், 9 போ் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனா். அவா்களில் 7 போ் தீயில் சிக்கி உயிரிழந்தனா். அவா்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆலைக்குள் சிக்கியுள்ள இருவரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

போலீஸாா் ரோந்து பணியின்போதுதான் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதைக் கண்டறிந்தனா். ஒன்றரை மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா் என்றாா்.

விபத்து நடந்த ஆலையில் மீட்புப் பணிகளை விரைவுபடுத்த மாநில முதல்வா் பஜன்லால் சா்மா உத்தரவிட்டுள்ளாா்.

பிரதமா் இரங்கல்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com