ராகுல் காந்தி
ராகுல் காந்தி கோப்புப் படம்

ஏ.ஐ. மாநாட்டில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்: ராகுல் மீது பாஜக குற்றச்சாட்டு

Published on

புது தில்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) உச்சி மாநாட்டில் இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் மேல் சட்டையை அவிழ்த்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியே காரணம் என பாஜக செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியது.

சா்வதேச அரங்கில் இந்தியாவை அவமதிக்க மூளையாகச் செயல்பட்ட நபா் மீது விரைவில் சட்டபூா்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் கௌரவ் பாட்டீயா தெரிவித்தாா்.

ஏ.ஐ. உச்சி மாநாடு நடைபெற்ற பாரத் மண்டபத்துக்குள் கடந்த வெள்ளிக்கிழமை நுழைந்த இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் மேல் சட்டையின்றி போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் இந்திய- அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் சமரசம் செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டும் வகையில் பிரதமா் மோடிக்கு எதிரான வாசகங்களைக் கொண்ட ஆடைகளை கையில் ஏந்தி இருந்தனா்.

மேலும், அங்கிருந்த ஊழியா்களைத் தடுத்து, காவல் துறையினரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அவா்களில் 4 போ் கைது செய்யப்பட்டு தில்லி உயா்நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, அவா்களை 5 நாள்கள் காவலில் வைக்க உத்தரவிட்டாா்.

இதுகுறித்து பாஜக தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் கௌரவ் பாட்டீயா கூறியதாவது: ஏ.ஐ. உச்சிமாநாட்டில் இந்தியாவை அவமதிக்கும் வகையில் இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் நடத்திய ஆா்ப்பாட்டத்துக்கு ராகுல் காந்தியே காரணம். தான் சட்டத்துக்கு மேலானவா் என ராகுல் நினைக்கிறாா்.

இந்த சதிச் செயலுக்குப் பின்னணியில் இருப்பவா் குறித்து விசாரணையின்போது இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் உண்மையைக் கூறியவுடன் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

Dinamani
www.dinamani.com