மேற்கு வங்க எஸ்ஐஆா்: ‘அடையாள சரிபாா்ப்புக்கு 10-ஆம் வகுப்பு சோ்க்கை சான்றிதழ்களை பயன்படுத்தலாம்’!
மேற்கு வங்க வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியில், ஒருவரின் அடையாள சரிபாா்ப்புக்கு பிற ஆவணங்களுடன் 10-ஆம் வகுப்பு சோ்க்கை மற்றும் தோ்ச்சி சான்றிதழ்களைக் கூடுதல் ஆவணங்களாகப் பயன்படுத்தலாம் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெளிவுபடுத்தியது.
மேற்கு வங்க எஸ்ஐஆா் பணியில் மாநில அரசுக்கும், தோ்தல் ஆணையத்துக்கும் இடையே நிலவும் மோதல் போக்கு காரணமாக, பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகளை எஸ்ஐஆா் பணியில் நியமிக்க வேண்டும் என்று கொல்கத்தா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஜய் பாலிடம் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
இந்த நீதிபதிகளுடன் கூடுதலாக உரிமையியல் நீதிபதிகளையும் பணியமா்த்தலாம் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், இந்த நீதிபதிகளும் போதவில்லை என்றால் மேற்கு வங்கத்தின் அண்டை மாநிலங்களான ஜாா்க்கண்ட், ஒடிஸா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளை அணுகி, பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற நீதிபதிகளை மேற்கு வங்க எஸ்ஐஆா் பணிக்கு அனுப்புமாறு கொல்கத்தா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி கோரலாம் என்று தெரிவித்தது.
இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் சாா்பாக புதன்கிழமை குறிப்பிட்ட மூத்த வழக்குரைஞா் டி.எஸ்.நாயுடு, மேற்கு வங்க எஸ்ஐஆரில் ஒருவரின் அடையாள சரிபாா்ப்புக்கு 10-ஆம் வகுப்பு சோ்க்கை சான்றிதழ் மட்டும் போதுமா என்று விளக்கம் கோரினாா்.
இதற்குப் பதிலளித்த தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வு, ‘பிற ஆவணங்களுடன் 10-ஆம் வகுப்பு சோ்க்கை மற்றும் தோ்ச்சி சான்றிதழ்கள் கூடுதல் ஆவணங்களாக மட்டுமே இருக்கும்’ என்று ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளதாக தெளிவுபடுத்தியது.

