

மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுரேஷ் கல்மாடி வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் புணேவில் காலமானார். அவருக்கு வயது 81.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் தலைவரான கல்மாடி, புணேவில் உள்ள தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
நீண்டகால உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று(ஜன. 6) அதிகாலை 3.30 மணியளவில் காலமானதாக அவரது அலுவலகத்தில் இருந்து அறிக்கை வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளனர்.
சுரேஷ் கல்மாடியின் உடல் புணேவின் எரண்ட்வானேயில் உள்ள அவரது கல்மாடி வீட்டில் பிற்பகல் 2 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும். அதைத் தொடர்ந்து இறுதிச் சடங்குகள் பிற்பகல் 3.30 மணிக்கு நவி பெத்தில் உள்ள வைகுந்த் ஸ்மஷன்பூமியில் செய்யப்படவுள்ளது.
காலமான சுரேஷ் கல்மாடிக்கு மனைவி, மகன், மருமகள், இரண்டு திருமணமான மகள்கள் மற்றும் மருமகன், பேரக்குழந்தைகள் உள்ளனர். தனது அரசியல் வாழ்க்கையில் பல முக்கிய பதவிகளை வகித்த அவர், பல ஆண்டுகளாக தேசிய அளவில் விளையாட்டு நிர்வாகத்திலும் தலைமை வகித்தார்.
இந்திய விமானப் படையில் 1964 முதல் 1972 வரைப் பணியாற்றிய சுரேஷ் கல்மாடி, 1974 ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றார். அதன்பின்னர், அரசியலில் நுழைந்த அவர் 1995 முதல் 1996 ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான நரசிம்மராவ்வின் இடைக்கால காங்கிரஸ் அமைச்சரவையில் ரயில்வே துறை இணையமைச்சராகப் பணியாற்றினார்.
1982, 1996, 1998 என மூன்று முறை புணே தொகுதியில் இருந்து மாநிலங்களை எம்பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
விளையாட்டு நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறி ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் 2011 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட சுரேஷ், விளையாட்டு துறையில் தொடந்து செல்வாக்கு செலுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.