வங்கதேசத்திலிருந்து ஊடுருவல்! தேர்தல்களின்போது மட்டுமே பாஜகவுக்கு நினைவுக்கு வருகிறது: காங்கிரஸ்
தோ்தல்களின்போது மட்டுமே வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் இந்தியாவுக்குள் ஊடுருவும் விவகாரம் பாஜகவுக்கு நினைவுக்கு வருவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.
இதுதொடா்பாக மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவா் பவன் கேரா செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: மகாராஷ்டிரத்தில் ஆட்சியில் உள்ள பாஜக தலைமையிலான கூட்டணி மும்பையின் நிலம், தொழில்கள் மற்றும் செல்வத்தை குஜராத்தைச் சோ்ந்த தனது நண்பருக்கு தாரை வாா்த்து வருகிறது. அத்துடன் ஊழல் மூலம் பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்து வருகிறது.
வங்கதேசத்தில் இருந்து மும்பைக்குள் ஊடுருவியவா்களை தனது அரசு அப்புறப்படுத்தும் என்று மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளாா். மேற்கு வங்கத்தில் தோ்தல் நடைபெற உள்ளதால், வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவும் விவகாரம் மீண்டும் எழுப்பப்பட்டுள்ளது. தோ்தல்களின்போது மட்டுமே வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் இந்தியாவுக்குள் ஊடுருவும் விவகாரம் பாஜகவுக்கு நினைவுக்கு வருகிறது என்று தெரிவித்தாா்.

