

ரயில் ஒன் செயலியில் அனைத்து ரயில்களிலும் முன்பதிவில்லாத பயணச்சீட்டுகளைப் பெறும் பயணிகளுக்கு 3 சதவீதம் தள்ளுபடி பெறும் திட்டம் இன்று(ஜன. 14) முதல் அமலுக்கு வந்தது.
பொதுமக்களிடையே எண்ம (டிஜிட்டல்) பயணச்சீட்டு முறையை ஊக்குவிக்கும் வகையில் ரயில் ஒன் செயலியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
அதில், முன்பதிவில்லாத பயணச் சீட்டுகள், முன்பதிவுள்ள பயணச் சீட்டுகள், நடைமேடை பயணச் சீட்டுகள் என அனைத்து வகை பயணச் சீட்டுகளையும் பெறும் வசதி உள்ளது. அத்துடன் ஐஆர்சிடிசி ரயில் கனக்ட், என்டிஇஎஸ், யுடிஎஸ் ஆன் மொபைல், ரயில் மதாத், ஃபுட் ஆன் டிராக் ஆகிய சேவைகளைப் பெறும் ஒருங்கிணைந்த செயலியாகவும் உள்ளது.
இந்த நிலையில், தற்போது ரயில் ஒன் சேவை மூலம் அனைத்து ரயில்களிலும் முன்பதிவில்லாத பயணக் கட்டணச் சீட்டை முன்னதாக பதிவு செய்து பெறுவோருக்கு 3 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது.
அதற்காக ரயில் ஒன் செயலி தளத்தில் யுபிஐ, டெபிட் கார்டுகள், நெட்பேங்கிங் போன்ற எண்ம (டிஜிட்டல்) கட்டண முறைகளைப் பயன்படுத்தி முன்பதிவு செய்தால் தள்ளுபடி சலுகையைப் பெறலாம். ஆர்-வால்ட் மூலம் முன்பதிவில்லாத பயணச் சீட்டுகளைப் பதிவு செய்யும் பணிகளுக்கு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 3 சதவீத போனஸ் கேஷ் பேக் சலுகை எந்தவித மாற்றமின்றி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்தத் தள்ளுபடி திட்டமானது இன்று முதல் அமலுக்கு வந்த நிலையில் ஜூலை 14- ஆம் தேதி வரையில் 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.