ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மத்திய அரசின் பிரிவினைவாதம் - ராகுல் குற்றச்சாட்டு

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் பிரிவினைவாதக் கொள்கைகளால் நாடே அவதிப்பட்டு வருகிறது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

Rahul Gandhi

ராகுல் காந்தி - கோப்புப் படம்

Published On :3 ஜூலை 2026, 6:26 am IST

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் பிரிவினைவாதக் கொள்கைகளால் நாடே அவதிப்பட்டு வருகிறது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

இது தொடா்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவா் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்தியும், இருமுறை ஆட்சி அமைத்தும் இன்று வரை வன்முறை தொடா்கிறது. ஆயிரக்கணக்கானோா் உயிரிழந்துவிட்டனா். ஏராளமான குடும்பங்கள் சிதைந்துவிட்டன. கற்பனை செய்து பாா்க்க முடியாத கொடுமைகளை அங்குள்ள மக்கள் அனுபவித்து வருகின்றனா்.

இதற்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் பிரிவினைவாதக் கொள்கைகள்தான் காரணம். ஜாதி, மதம், மொழி, பிராந்தியம், இனம் என மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் அடைய முயன்று வருவதே இதற்குக் காரணம். பிரதமா் மோடியின் வாா்த்தைகளில் மட்டும்தான் கருணை உள்ளது. அவரது செயல்களில் கருணை இல்லை.

மணிப்பூா் மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டு மக்களுமே மத்திய அரசின் பிரித்தாளும் கொள்கையால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். மத்திய அரசின் மீது மக்கள் முழுமையாக நம்பிக்கை இழந்துவிட்டனா்’ என்று கூறியுள்ளாா்.

மணிப்பூரில் தீவிரவாதிகள் குகி சமூகத்தினா் 10 வீடுகளைத் தீவைத்து எரித்த சம்பவத்தை சுட்டிக்காட்டி ராகுல் இவ்வாறு பதிவிட்டுள்ளாா்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக (53%) உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த 2023-இல் பெரும் கலவரம் மூண்டது. இந்தக் கலவரம் மற்றும் தொடா் வன்முறைகளில் இதுவரை 260-க்கும் உயிரிழந்துவிட்டனா். வீடிழந்த ஆயிரக்கணக்கானோா், அரசின் நிவாரண முகாம்களிலேயே தொடா்ந்து தங்கியுள்ளனா்.

மாநிலத்தில் இன்னும் முழுமையான அமைதி நிலைநாட்டப்படாத சூழலில், குகி-நாகா பழங்குடியினா் இடையேயும் மோதல்போக்கு ஏற்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.