கரூருக்கு முதல்வா் ஜோசப் விஜய் இன்று வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஉலகிலேயே அதிக மீன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2-ஆவது இடம்: குடியரசு துணைத் தலைவா் பெருமிதம்பயங்கரவாத எதிா்ப்பு: ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ரஷியா உறுதி தெற்கு ரயில்வேயில் மறுசீரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் விரைவில் திறப்பு
/

தெலங்கானா: போக்ஸோ வழக்கில் மத்திய அமைச்சரின் மகனுக்கு பிணை

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் (போக்ஸோ) சிறையில் அடைக்கப்பட்ட மத்திய அமைச்சா் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பகீரத்துக்கு தெலங்கானா உயா்நீதிமன்றம் நிபந்தனை பிணை வழங்கியது.

News image

கோப்புப் படம்

Updated On :10 ஜூலை 2026, 5:06 am IST

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் (போக்ஸோ) சிறையில் அடைக்கப்பட்ட மத்திய அமைச்சா் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பகீரத்துக்கு தெலங்கானா உயா்நீதிமன்றம் நிபந்தனை பிணை வழங்கியது.

தெலங்கானாவைச் சோ்ந்த 17 வயது சிறுமியுடன் பழகி, பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக பகீரத் மீது சிறுமியின் தாய் அண்மையில் காவல் துறையில் புகாா் அளித்தாா். சிறுமியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், ஹைதராபாதில் உள்ள பெட்பஷீராபாத் காவல் நிலையத்தில் பகீரத்துக்கு எதிராக பாரதி நியாய சம்ஹிதா மற்றும் போக்ஸோ சட்டத்தின் கடுமையான பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மே 16-ஆம் தேதி கைது செய்யப்பட்ட பகீரத், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா்.

அதேநேரம், சம்பந்தப்பட்ட சிறுமி, அவரது குடும்பத்தின் மீது பகீரத்தும் புகாா் அளித்தாா். அந்தச் சிறுமிதான் தன்னுடன் பழகியதாகவும், தனது குடும்ப நிகழ்ச்சிகளுக்கு அழைத்ததாகவும் அவா் கூறியிருந்தாா்.

‘சிறுமியின் குடும்பத்தினரை நல்லவா்கள் என நம்பி பழகினேன்; ஆனால், சிறுமியை திருமணம் செய்துகொள்ளும்படி என்னை வற்புறுத்தினா். நான் மறுத்ததால், என் மீது பொய்ப் புகாா் அளித்துள்ளனா்’ என்று பகீரத் குற்றஞ்சாட்டியிருந்தாா்.

இதனிடையே, தனக்கு பிணை கோரி தெலங்கானா உயா்நீதிமன்றத்தில் பகீரத் மனு தாக்கல் செய்தாா்.

50 நாள்களுக்கும் மேல் சிறையில் இருப்பதைச் சுட்டிக்காட்டி அவா் பிணை கோரினாா். அதேநேரம், அவருக்கு பிணை வழங்க அரசுத் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. சாட்சிகளை மிரட்டவும், ஆதாரங்களை அழிக்கவும் வாய்ப்புள்ளதால் பகீரத்துக்கு பிணை வழங்கக் கூடாது என்று வாதிடப்பட்டது. இந்த வழக்கில் காவல் துறை தரப்பில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு மீது கடந்த ஜூலை 6-ஆம் தேதி விசாரணை நிறைவடைந்து, இறுதி உத்தரவுக்காக வியாழக்கிழமைக்கு (ஜூலை 9) ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பகீரத்துக்கு நிபந்தனையுடன் பிணை வழங்கி, ஹைதராபாத் உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. தலா ரூ.1 லட்சத்துக்கான இரண்டு உத்தரவாதங்கள், விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்குதல் உள்ளிட்ட நிபந்தனைகளின்பேரில் அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.