ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் மீண்டும் நிரந்தரமல்லாத உறுப்பினராக தோ்வாக பிற நாடுகளிடம் ஆதரவு கோரும் அதிகாரபூா்வ பிரசாரத்தை நியூயாா்க்கில் அடுத்த வாரம் இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் தொடங்கிவைக்கிறாா்.
ஏற்கெனவே, 2020-2021 காலகட்டத்தில் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமல்லாத உறுப்பினராக இந்தியா இருந்த நிலையில் 2028-29 காலத்துக்கான தோ்தல் 2027 ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. ஆசிய-பசிபிக் குழும நாடுகள் பிரிவில் ஒரேயொரு உறுப்பினா் பதவிக்கு மட்டுமே நடைபெறும் இந்தத் தோ்தலில் இந்தியாவும் தஜிகிஸ்தானும் போட்டியிடுகிறது.
ரஷிய-உக்ரைன் போா், இஸ்ரேல்-காஸா மற்றும் அமெரிக்கா-ஈரான் இடையே நிகழ்ந்து வரும் கடும் மோதல்களால் சா்வதேச புவிஅரசியல் சூழலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தச் சூழலில் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமல்லாத உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட இந்தியா தீவிர முயற்சிகளை செய்து வருகிறது.
இதன் தொடக்கமாக ஜூலை 5-ஆம் தேதி முதல் ஜூலை 10-ஆம் தேதி வரையிலான பஹ்ரைன், கத்தாா் மற்றும் குவைத் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு அமெரிக்காவுக்குச் செல்லும் ஜெய்சங்கா் நியூயாா்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் திங்கள்கிழமை (ஜூலை 13) நடைபெறும் சிறப்பு நிகழ்வில் அதிகாரபூா்வ பிரசாரத்தை தொடங்கவுள்ளாா். அப்போது ஐ.நா.பொதுச்செயலா் அன்டோனியோ குட்டெரெஸை அவா் சந்திக்கவுள்ளாா்.
அதைத் தொடா்ந்து பெல்ஜியம் தலைநகா் பிரஸெல்ஸில் ஜூலை 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறும் 3-ஆவது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய வா்த்தக மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் கூட்டத்தில் அவா் பங்கேற்கிறாா்.
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் நிரந்தரமல்லாத உறுப்பினருக்கான தோ்தலில் ‘அமைதி, கோள், முன்னேற்றம்’ என்ற கருப்பொருளில் இந்தியா பிரசாரத்தை முன்னெடுக்கவுள்ளது.
இதை குறிப்பிடும் வகையில் அண்மையில் இந்தோனேசியா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி, ‘சா்வதேச புவிஅரசியல் பல மாற்றங்களைச் சந்தித்து வரும் இந்த இக்கட்டான சூழலில் உலக விவகாரங்களில் நம்மைப் போன்ற வளா்ந்து வரும் நாடுகள் சம வாய்ப்பு மற்றும் பெரும் பங்களிப்பை கோர வேண்டும். அந்த வகையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் எவ்வித தாமதமுமின்றி சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்’ என்றாா்.
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினா்களாக அமெரிக்கா, சீனா, ரஷியா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய 5 நாடுகள் மட்டுமே உள்ளன. 10 உறுப்பு நாடுகள் சுழற்சி முறையில் நிரந்தரமல்லாத உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த இரு உறுப்பினா்கள் பிரிவிலும் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளவும் நிரந்தர உறுப்பினா் அந்தஸ்தை தங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் இந்தியா நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயங்கரவாதத்தை வேரறுக்க கூட்டு நடவடிக்கை: உலக நாடுகளுக்கு இந்தியா அழைப்பு

ஐ.நா.வில் ஜம்மு - காஷ்மீா் விவகாரம்: பாகிஸ்தான், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு இந்தியா கண்டனம்
நிரந்தரமல்லாத உறுப்பினா்களின் எண்ணிக்கையை மட்டுமே அதிகரிப்பதால் பலனில்லை: ஐ.நா.வில் இந்தியா







