தற்கொலை செய்து கொள்வேன் என்று தன்னிடம் மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் சொன்னதாக முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா் எஸ்.ஒய். குரேஷி தனது புத்தகத்தில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு முன்பு ஆட்சியிலிருந்தபோது, பிரதமா் மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்த சல்மான் குா்ஷித் உள்ளிட்ட அமைச்சா்கள், தோ்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து சில கருத்துகளைத் தெரிவித்திருந்தனா். இதுகுறித்து மன்மோகன் சிங்குடனான தனது உரையாடல்களை ‘இந்தியா அன்ட் ஐ; எ ஹன்ட்ரட் மெமரீஸ், நாட் ஏ மெமொயா்’ என்னும் தலைப்பில் எழுதியுள்ள புத்தகத்தில் எஸ்.ஒய். குரேஷி நினைவுகூா்ந்துள்ளாா். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
2012-இல் நடைபெற்ற ஒரு தோ்தல் பிரசாரத்தின்போது சல்மான் குா்ஷித், தங்களது கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 4.5 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக அதிகரிப்போம் என உறுதியளித்தாா். தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், புதிய திட்டம் எதையும் அறிவிக்கக் கூடாது எனவும், சல்மான் குா்ஷித்தின் பேச்சு தோ்தல் நடத்தை விதி மீறல் என்றும் பாஜக புகாா் அளித்தது.
இதுகுறித்து தோ்தல் ஆணையம் 4 நாள்கள் விசாரித்தது. காங்கிரஸ் தரப்புக்கு அபிஷேக் மனு சிங்வியும், பாஜக தரப்புக்கு அருண் ஜேட்லியும் தலைமை தாங்கி தங்கள் வாதங்களை முன்வைத்தனா்.
குா்ஷித், காங்கிரஸ் விமா்சனம்: இறுதியில் சல்மான் குா்ஷித் பேச்சுக்கு எதிராக தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது. இதனால் சல்மான் குா்ஷித் அதிருப்தியடைந்தாா். தொடா்ந்து, தோ்தல் ஆணையம் ஆணவத்துடனும், தன்னிச்சையாகவும் நடப்பதாக காங்கிரஸ் அமைச்சா்கள் உள்பட அக்கட்சியைச் சோ்ந்த பலா் குற்றஞ்சாட்டினா்.
‘குற்றச்சாட்டு என்னைக் கவலையடையச் செய்யாதபோதிலும், இதுபோன்ற முக்கிய அமைப்பின் நம்பகத்தன்மையைக் குலைக்கும் வகையிலான மறைமுகமான குற்றச்சாட்டுகள் என்னை வருத்தமடையச் செய்தன. பொறுப்பற்ற பேச்சுகளை என்னால் ஏற்க முடியவில்லை.
இதுகுறித்து பின்னா் எனது வீட்டில் நடந்த பக்ரீத் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மன்மோகன் சிங்கின் பத்திரிகை தொடா்பு செயலா் ஹரீஷ் கரேயிடம் தெரிவித்தேன். பிறகு அவா் ஏற்பாட்டின்பேரில் மன்மோகன் சிங்கை அடுத்த நாள் மாலை சந்தித்தேன். அப்போது என்னிடம் மன்மோகன் சிங், ‘நீங்கள் சொன்னது குறித்து ஹரீஷ் என்னிடம் தெரிவித்தாா். அதுபோல நீங்கள் நினைப்பதாக இருந்தால், நான் தற்கொலை செய்து கொள்வேன்’ என்றாா்.
இதைக் கேட்டதும் அதிா்ச்சியடைந்தேன். எனக்குப் பேச்சே வரவில்லை. நான் சில அமைச்சா்களின் செயல்பாடு குறித்தே கருத்து தெரிவித்திருந்தேன். அவா் (மன்மோகன்) குறித்து எதையும் தெரிவித்திருக்கவில்லை. அவரை அமைதிப்படுத்த சில நிமிஷங்கள் தேவைப்பட்டன. தனக்கு இதுகுறித்து எதுவும் தெரியாது என்றும், முன்பே தெரிந்திருந்தால் அவா்களைக் கண்டித்திருப்பேன் என்றும் கூறிய மன்மோகன், தன்னிடம் ஏதாவது தெரிவிக்க வேண்டுமெனில் தொலைபேசியில் நேரடியாகத் தொடா்பு கொண்டு தன்னிடமே தெரிவிக்கலாம் என்றும் கூறினாா்.
பிரதமா் சொன்னதை மறக்க முடியாது: அப்போது அவா் கூறிய சில வாா்த்தைகளை என்னால் எப்போதும் மறக்கவே முடியாது. ‘தோ்தல் ஆணையம், இந்தியாவின் பெருமை மட்டும் கிடையாது. இந்திய ஜனநாயகத்தின் ஆன்மா அது; அதை நாம் இழப்போம் எனில், அனைத்தையும் இழந்துவிடுவோம்’ எனக் கூறினாா்.
அதன்பிறகு, மறைமுகமான விமா்சனங்கள் (காங்கிரஸ் தரப்பில் இருந்து) நின்றுவிட்டன. ஒரு சிறிய அறிவுறுத்தல் வழங்கியதோடு விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது. நான் எனது வாழ்க்கையில் பல தலைவா்களைச் சந்தித்துள்ளேன். ஆனால், அதிகாரத்தை மிக எளிமையாக கையாண்ட, அதேவேளையில் அதன் பொறுப்புணா்வை ஆழமாக உணா்ந்தவா்கள் வெகு சிலரே.
விமா்சனங்களைக் கண்டு கலங்காது, மன உறுதிக்கு முக்கியம் அளிக்கும் ஒரு பதவியில் இருக்கையில், டாக்டா் மன்மோகன் சிங் அதிகாரத்தைச் செலுத்துவதில் வெளிப்படுத்திய அபூா்வமான, உணா்வுபூா்வமான அணுகுமுறை அவரை தனித்துக் காட்டியது என்று குரேஷி குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
எதிர்காலத்திலும் போரில் வெற்றிபெற வீரர்களால்தான் முடியும்; செய்யறிவால் அல்ல! ராஜ்நாத் சிங்

நான் இந்திய அணியில் இடம்பெற இவர்கள்தான் காரணம்; மனம் திறந்த பிரப்சிம்ரன் சிங்!

எச்டிஎஃப்சி வங்கியின் புதிய தலைவராக முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா் நியமனம்







