/

மாணவர்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்! - ராகுல் காந்தி வலியுறுத்தல்!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டுமென ராகுல் காந்தி வலியுறுத்தல்...

News image

மாணவர்களுடன் ராகுல் காந்தி... - எக்ஸ்

Updated On :25 ஜூலை 2026, 1:55 pm IST

நீட் வினாத்தாள் விவகராத்தில் மாணவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டுமென மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக, தில்லியின் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சி தலைமையில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் பெருமளவில் கவனம் பெற்று அதிர்வலைகளை உருவாக்கி வருகின்றது.

இதையடுத்து, நீட் தேர்வுக்கு எதிராக நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் மாணவர் போராட்டங்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவளித்துள்ளன.

இந்த நிலையில், தில்லியில் உள்ள தனது இல்லத்தில் இன்று (ஜூலை 25) மாணவர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், இந்த முழு அமைப்புக்கும் தலைமை வகிக்கும் பிரதமர் மோடி மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமெனக் கூறியுள்ளார்.

செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:

“மாணவர்களிடம் விட்டுக்கொடுக்க முடியாத மூன்று முக்கிய நிபந்தனைகள் உள்ளன. அதில், திறனற்ற, ஊழல் மிகுந்த தர்மேந்திர பிரதான் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

அவரை வேறு துறைக்கு மாற்ற பேச்சுவார்த்தை நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு செய்வது மாணவர்களின் போராட்டத்துக்குப் போதுமானதாக அமையாது.

நான் மாணவர்களிடம் கவலையடைய வேண்டாமெனக் கூறியுள்ளேன். எத்தகைய சக்தியாலும் அவர்களை அங்கிருந்து (ஜந்தர் மந்தர்) அகற்ற முடியாது. இணையச் சேவையைத் துண்டிப்பதால் மாணவர்களை அங்கிருந்து அகற்ற முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்வது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Rahul Gandhi has urged PM Modi to apologize to students regarding the NEET question paper issue.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.