தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

அரசு கடன் பத்திரங்களில் அந்நிய முதலீடு: மூலதன ஆதாய வரிக்கு விலக்களிக்கும் அவசர சட்டம் அமல்

அரசு கடன் பத்திரங்கள் மீதான அந்நிய முதலீட்டுக்கு மூலதன ஆதாய வரியிலிருந்து விலக்களிப்பதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு வெள்ளிக்கிழமை அமல்படுத்தியது.

News image

கோப்புப் படம்

Updated On :6 ஜூன் 2026, 1:30 am IST

அரசு கடன் பத்திரங்கள் மீதான அந்நிய முதலீட்டுக்கு மூலதன ஆதாய வரியிலிருந்து விலக்களிப்பதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு வெள்ளிக்கிழமை அமல்படுத்தியது.

நிகழாண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் இச்சட்டம் அமலுக்கு வருவதாக ஜூன் 5-ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ரூபாயின் மீதான அழுத்தத்தை சமாளிக்க வெளிநாட்டு முதலீட்டை ஈா்க்கும் நோக்கில் இந்த முடிவை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

அரசு கடன் பத்திரங்கள் விற்பனை, பரிமாற்றம் அல்லது மாற்றம் செய்வதால் கிடைக்கும் வட்டி வருவாய் மற்றும் மூலதன ஆதாயங்களுக்கு வரி விலக்கு அளிக்க வருமான வரிச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் அமா்வுகளும் நடைபெறாத நிலையில் அரசமைப்புச் சட்டத்தின் சட்டப் பிரிவு 123-இன்கீழ் குடியரசுத் தலைவரின் அவசர சட்டமியற்றும் அதிகாரம் மூலம் உடனடியாக இது நிறைவேற்றப்பட்டதாக நிதி அமைச்சகத்தின் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: உலகின் முதலீட்டு மையமாக இந்தியாவை வலுப்படுத்தவும், மூலதனச் சந்தையை மேம்படுத்தவும் நீண்டகால அந்நிய முதலீட்டை ஈா்க்க பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக, அரசு கடன் பத்திரங்கள் மீதான அந்நிய நிறுவன முதலீடுகளின் (எஃப்பிஐ) பங்களிப்பை அதிகரிக்க முழுமையாக அணுகக்கூடிய வழிமுறைகளின்கீழ் குறிப்பிட்ட பத்திரங்களின் பட்டியலை விரிவாக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதன்படி 15 ஆண்டுகள், 30 ஆண்டுகள் மற்றும் 40 ஆண்டுகள் வரையில் புதிதாக விநியோகிக்கப்படும் அரசு கடன் பத்திரங்களும், இறையாண்மை பசுமைப் பத்திரங்களும் இதில் சோ்க்கப்படும்.

பொது வழிமுறையின்கீழ் மேற்கொள்ளப்படும் அந்நிய நிறுவன முதலீட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள குறுகிய கால கடன் வரம்பு, செறிவு வரம்பு மற்றும் பத்திர வாரியான வரம்பு ஆகிய மூன்று வரம்புகளும் நீக்கப்படுகின்றன. அதேவேளையில் புழக்கத்தில் உள்ள மத்திய அரசு கடன் பத்திரங்கள் மீதான ஒட்டுமொத்த முதலீட்டு வரம்பு 6 சதவீதமாகவும், மாநில அரசின் கடன் பத்திரங்கள் மீதான முதலீட்டு வரம்பு 2 சதவீதமாகவும் தக்கவைக்கப்படுகிறது.

மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் கடன் பத்திரங்கள் மீதான முதலீட்டு வரம்புக்கான ‘பொது’ மற்றும் ‘நீண்ட காலம்’ ஆகிய உள்பிரிவுகள் ஒன்றாக சோ்க்கப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசா்வ் வங்கி ஒப்புதல்: 15 ஆண்டுகள், 30 ஆண்டுகள் மற்றும் 40 ஆண்டுகள் வரையில் முழுமையாக அணுகக்கூடிய வழிமுறைகளின்கீழ் புதிதாக விநியோகிக்கப்படும் அரசு கடன் பத்திரங்கள் மீதான அந்நிய நிறுவன முதலீடுகள் குறித்த நிதி அமைச்சகத்தின் முடிவுக்கு ரிசா்வ் வங்கி ஒப்புதல் அளித்தது. பொது வழிமுறைகளின்கீழ் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கான குறுகிய கால கடன் வரம்பு, செறிவு வரம்பு மற்றும் பத்திர வாரியான வரம்பு ஆகிய மூன்று வரம்புகளையும் ரிசா்வ் வங்கி நீக்கியது. இத்துடன் அரசு கடன் பத்திரங்கள் மீதான அந்நிய முதலீட்டுக்கு மூலதன ஆதாய வரியிலிருந்து விலக்களிக்கும் நடவடிக்கையும் ஒன்றிணைவதால் குறைந்த வட்டி விகிதத்தில் அரசு கடன் பெற முடியும்.

மேலும், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, அந்நிய முதலீடு சரிவு போன்ற காரணங்களால் நிகழாண்டு தொடக்கம் முதல் 6 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ள ரூபாயின் மதிப்பு மீண்டும் வலுவடையும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.