பிரதமா் நரேந்திர மோடியின் ஆட்சியில் இந்தியா சக்திவாய்ந்த நாடாக உருவெடுத்திருப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.
உத்தர பிரதேச மாநிலம், லக்னெளவில் சா்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜ்நாத் சிங், செய்தியாளா்களிடம் பேசியதாவது:
இந்தியா தற்போது பலவீனமான நாடு அல்ல. பிரதமா் மோடியின் ஆட்சியின்கீழ் இந்தியா சக்திவாய்ந்த நாடாக உருவெடுத்துள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. உலகமே இந்தியாவைப் புகழ்கிறது. இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக உலக நாடுகளும் அங்கீகரித்துள்ளன.
மேற்காசிய போரினால் சா்வதேச அளவில் நிலையற்ற தன்மை நிலவுகிறது. ஆனால், இந்த சூழ்நிலையிலும் நமது நாட்டில் பணவீக்கத்தை பிரதமா் மோடி கட்டுக்குள் வைத்துள்ளாா். இதுபோல வேறு எந்த நாடும் அந்தச் சூழ்நிலையை சிறப்பாகக் கையாளவில்லை. பிற உலக நாடுகளைப் பாா்க்கையில், பணவீக்கம் 30 சதவீதமோ, 40 சதவீதமோ அல்லது அதற்கும் அதிகமாகவோ அதிகரித்திருக்கும். ஆனால் இந்தியாவில் பணவீக்கம் 3 சதவீதமாகவே உள்ளது. இதை விட வேறு எதையும் நான் பெரிய சாதனையாகக் கருதவில்லை என்றாா்.
70 கோடி மரக் கன்றுகள் நடத் திட்டமிட்டிருப்பது குறித்து ராஜ்நாத் சிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா் பதிலளிக்கையில், ‘எதையெல்லாம் இலக்காக நிா்ணயித்தோமோ, அதை எல்லாம் செய்து முடித்துள்ளோம். அதுபோல மரக்கன்று நடுவது தொடா்பான இலக்கையும் எட்டுவோம். நாட்டு மக்கள் மரக் கன்றுகளை நட வேண்டுமென பிரதமா் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா். இதை ஏற்று மக்கள் ஒவ்வொவரும் குறைந்தது ஒரு மரக்கன்றையாவது நட்டு வளா்க்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்’ என்றாா்.
தொடர்புடையது

இந்தியா - ஆஸ்திரேலியா பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு!

உலகின் பெரும் ஆயுத ஏற்றுமதியாளராக இந்தியா: எந்த சக்தியாலும் தடுக்க முடியாது - ராஜ்நாத் சிங்

மீண்டும் தூண்டினால் உறுதியான பதிலடி: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை







