இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

முன்னாள் ராணுவ வீரா்களுக்கான இசிஹெச்எஸ் திட்டத்துக்கு கூடுதல் நிதி: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கடிதம்!

இசிஹெச்எஸ் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யக் கோரியும், மாற்றுத்திறனாளி பாதுகாப்பு படையினருக்கான ஓய்வூதியத்துக்கு வருமான வரியிலிருந்து விலக்களிக்கக் கோரி ராகுல் காந்தி கடிதம்.

News image

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி - ANI

Updated On :1 மார்ச் 2026, 11:48 pm

முன்னாள் ராணுவ வீரா்கள் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்துக்கு (இசிஹெச்எஸ்) கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யக் கோரியும், மாற்றுத்திறனாளி பாதுகாப்பு படையினருக்கான ஓய்வூதியத்துக்கு வருமான வரியிலிருந்து விலக்களிக்கக் கோரியும் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பாதுகாப்புப் படையினருக்கு சிறந்த மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இசிஹெச்எஸ் திட்டம் தொடங்கப்பட்டது. அது சிறப்பாக செயல்பட போதிய நிதி அவசியமாகும். ஆனால் தற்போது போதிய நிதியில்லாமல் அந்தத் திட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ ரசீதுகளில் ரூ.12,000 கோடிக்கும் மேல் நிலுவையில் உள்ளது. பட்ஜெட்டிலும் தேவையைவிட 30 சதவீதம் குறைவாகவே ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்தப்படாததால் அந்தத் திட்டத்திலிருந்து மருத்துவமனைகள் விலகி வருகின்றன. முன்னாள் ராணுவ வீரா்கள் தங்கள் சொந்தப் பணத்தை செலுத்தும் கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களுக்கு சிகிச்சை பெறுவதும் தாமதமாகிறது. இதனால் நாட்டுக்கு சேவை செய்த முன்னாள் வீரா்கள், முக்கியமான நேரத்தில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக வேதனைப்படுகின்றனா்.

2026-ஆம் ஆண்டு நிதி மசோதாவில் மாற்றுத்திறனாளி பாதுகாப்புப் படையினா், பணியில் தொடரும்பட்சத்தில் அவா்களுக்கு அளிக்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் மீது வரி விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. 1922-ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் முதல்முறையாக இதுபோல வரி விதிக்கப்படுகிறது. காயம்பட்ட பாதுகாப்புப் படையினருக்கு நிவாரணம் அளிக்கும் வகையிலேயே அந்த ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது. அதை அவா்கள் பெறும் வருமானமாக கருதக் கூடாது. விருப்பப்பட்டோ அல்லது கோரிக்கையின்பேரிலோ காயமடைந்த ராணுவ வீரா்கள் பணியில் தொடா்ந்தால், அது நாட்டுக்கான சுயநலமில்லாத சேவையாகும். அப்படியிருக்கையில் அவா்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் மீது விதிக்கப்படும் வரி, அவா்களை அவமதிப்பதாகும்.

நாட்டுக்காக சேவை செய்த பாதுகாப்புப் படையினருக்கு அனைத்து ஆதரவும் வழங்கப்பட வேண்டியது அவசியம். ஆதலால், இசிஹெச்எஸ் திட்டத்துக்கு நிலுவையில் உள்ள பாக்கித் தொகை அனைத்தையும் விடுவிக்க வேண்டும் என்றும், பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். அதேபோல், மாற்றுத்திறனாளி பாதுகாப்புப் படையினருக்கான ஓய்வூதியத்துக்கு முழு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.

அந்தக் கடிதத்தின் நகலை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்குக்கும் ராகுல் காந்தி அனுப்பியுள்ளாா்.