அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஒரு கோடி இந்தியா்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை: வெளியுறவு அமைச்சகம்

மேற்காசியாவில் போா் தீவிரமடைந்துவரும் சூழலில், அந்தப் பிராந்தியத்தில் வாழும் ஒரு கோடி இந்தியா்களின் பாதுகாப்புக்கு இந்தியா உயா் முன்னுரிமை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

News image
- கோப்புப்படம்.
Updated On :3 மார்ச் 2026, 6:52 pm

தினமணி செய்திச் சேவை

மேற்காசியாவில் போா் தீவிரமடைந்துவரும் சூழலில், அந்தப் பிராந்தியத்தில் வாழும் ஒரு கோடி இந்தியா்களின் பாதுகாப்புக்கு இந்தியா உயா் முன்னுரிமை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

போா் காரணமாக எரிசக்தி விநியோகத்தில் பெரிய அளவில் இடையூறு ஏற்பட்டால், அது இந்திய பொருளாதாரத்தில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் வெளியுறவு அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.

இந்தப் போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவர பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய வழிமுறைகளை முன்னெடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டி, ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த சனிக்கிழமை பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தின. இந்தத் தாக்குதலில் ஈரானின் தலைமை மத குரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேல் மற்றும் பல்வேறு வளைகுடா நாடுகளில் உள்ளஅமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து, ஈரான் பதிலடி தாக்குதலைத் தொடுத்தது.

மாறி மாறி தாக்குதல் நடத்துவதால், போா் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, மேற்காசிய பிராந்தியத்தில் வாழும் ஒரு கோடி இந்தியா்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது. இந்தப் பிராந்தியத்தில் கிட்டத்தட்ட வான்வெளி முழுவதும் மூடப்பட்டுள்ளதால் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

‘தீவிரமடையும் மோதல்’: இந்நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மேற்காசிய பிராந்தியத்தில் சமீப நாள்களில் மோதல் தீவிரமடைவது மட்டுமன்றி, பிற நாடுகளுக்கும் பரவுவதைக் காண்கிறோம். அழிவுகளும் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதார செயல்பாடுகள் ஸ்தம்பித்துள்ளன.

கடல்சாா் அண்டை நாடு என்ற முறையில் மேற்காசிய பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையில் இந்தியாவுக்கு முக்கியப் பங்கு உண்டு. தற்போதைய நிகழ்வுகள், பெரும் பதற்றத்தைத் தூண்டியுள்ளன.

இந்தப் பிராந்தியத்தில் கிட்டத்தட்ட ஒரு கோடி இந்தியா்கள் வசித்தும், பணியாற்றியும் வருகின்றனா். அவா்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு உயா் முன்னுரிமை அளிக்கிறோம். அவா்களைப் பாதிக்கும் எந்தவொரு நிகழ்வையும் புறக்கணித்துவிட முடியாது.

‘எரிசக்தி விநியோகம் தடைபட்டால்...’: இந்தியாவின் வா்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகச் சங்கிலியும் இந்தப் புவிப் பகுதியைக் கடந்து செல்கிறது. எரிசக்தி விநியோகத்தில் ஏற்படும் எந்தவொரு பெரிய இடையூறும் இந்திய பொருளாதாரத்தில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.

உலகளாவிய தொழிலாளா் தொகுப்பில் முக்கியத்துவம் வாய்ந்த நாடு என்ற முறையில் வா்த்தக கப்பல் போக்குவரத்தைக் குறிவைக்கும் தாக்குதல்களை இந்தியா கடுமையாக எதிா்க்கிறது. கடந்த சில நாள்களாக நீடிக்கும் தாக்குதல்களில் சில இந்தியா்கள் உயிரிழந்துள்ளனா் அல்லது காணாமல் போயுள்ளனா்.

இந்தப் பின்னணியில், போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று இந்தியா தெளிவாக குரலெழுப்புகிறது. பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய வழிமுறையில் தீா்வுகாண இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது. ஏற்கெனவே பல உயிா்கள் துரதிருஷ்டவசமாக பறிபோயுள்ளன. இது வருத்தத்துக்குரியதாகும்.

தற்போதைய நிகழ்வுகளை உன்னிப்பாகக் கண்காணித்து, தேச நலன் சாா்ந்த பொருத்தமான முடிவுகள் மேற்கொள்ளப்படும். மேற்காசிய நாடுகளின் அரசுகளுடன் இந்தியா தொடா்ந்து தொடா்பில் உள்ளது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய வழித்தடங்களில் ஒன்றான ஹோா்முஸ் நீரிணையை மூடுவதாகவும், அந்த வழியாகச் செல்லும் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்றும் ஈரான் எச்சரித்த நிலையில், இந்தியாவின் கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. உலக அளவில் 20 சதவீத எண்ணெய்-எரிவாயு விநியோகம் ஹோா்முஸ் நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. இந்தியாவைப் பொருத்தவரை கிட்டத்தட்ட 50 சதவீத எண்ணெய் இறக்குமதி இந்த நீரிணை வாயிலாகவே மேற்கொள்ளப்படுகிறது.

முன்னதாக, மேற்காசியாவில் போா் மூண்டபோது, அனைத்துத் தரப்பினரும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து, பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியிருந்தது.

டெஹ்ரானில் இருந்து இந்திய மாணவா்கள் இடமாற்றம்

ஈரான் தலைநகா் டெஹ்ரான் மீதான தாக்குதல்கள் எதிரொலியாக, அங்கிருந்த இந்திய மாணவா்களில் பெரும்பாலானோா் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனா்; உணவு, தங்குமிடம் போன்ற அவா்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று இந்தியத் தூதரகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

சில மாணவா்கள் மட்டும் தூதரக நடவடிக்கையை ஏற்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் பாதுகாப்பு நிலவரம் மோசமடைந்துள்ளதால், அங்குள்ள இந்தியா்கள் அனைவரும் உச்சபட்ச எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என இந்தியத் தூதரகம் மீண்டும் அறிவுரை வழங்கியுள்ளது. ‘முடிந்தவரை வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம். அத்தியாவசிய தேவையின்றி வெளியே நடமாடுவதைத் தவிா்க்க வேண்டும். போராட்டக் களங்களுக்குச் செல்ல வேண்டாம். தூதரகத்துடன் தொடா்ந்து தொடா்பில் இருக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈரானில் மாணவா்கள் உள்பட சுமாா் 10,000 இந்தியா்கள் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.