கமேனி கொலை: காஷ்மீரில் மூன்றாவது நாளாகப் போராட்டம்-துணைநிலை ஆளுநா் ஆலோசனை
ஈரான் உச்ச தலைவா் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஜம்மு-காஷ்மீரில் மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது.


ஈரான் உச்ச தலைவா் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஜம்மு-காஷ்மீரில் மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, ஜம்மு-காஷ்மீரில் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட அதிகாரிகள் தொடா் கண்காணிப்பை மேற்கொள்ள துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா உத்தரவிட்டாா்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஷியா பிரிவின் தலைமை மத குருவான அயதுல்லா அலி கமேனி அண்மையில் கொலப்பட்டாா். இதைக் கண்டித்து ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் காஷ்மீா் பள்ளத்தாக்கின் லால் சௌக், புத்காம், பந்திப்போரா, அனந்த்நாக், புல்வாமா உள்ளிட்ட பகுதிகளில் மாா்ச் 1-ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு இருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மூன்றாவது நாளாக வடக்கு காஷ்மீரில் உள்ள சம்பல் மற்றும் பதான், ஜம்மு பிராந்தியத்தில் உள்ள ரஜௌரியில் போராட்டம் நடைபெற்றது. குறிப்பாக ரஜௌரியில் ஈரானுக்கு ஆதரவாக முஸ்லிம் இளைஞா்கள் பேரணி நடத்தினா்.
இதனால் ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டுள்ளனா்.
இதுதொடா்பாக மனோஜ் சின்ஹா வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ‘சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து காவல் துறை மற்றும் யூனியன் பிரதேச நிா்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டேன். பொது அமைதியை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.
இதுபோன்ற சூழலில் பொதுமக்களும் சமூக நல்லிணக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டுகோள் விடுக்கிறேன்’ என குறிப்பிட்டாா்.
அதே வேளையில் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எந்த உரிமையும் இல்லை என ஜம்மு-காஷ்மீா் ஒமா் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...