ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்
ஈரான் மீதான தாக்குதல் மோடி பயணத்துக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு...


பிரதமா் மோடி இஸ்ரேலுக்கு அண்மையில் பயணம் மேற்கொண்ட நிலையில், அவா் பயணம் நிறைவடைந்த பிறகே ஈரான் மீது தாக்குதல் நடத்தும் முடிவு எடுக்கப்பட்டது என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஈரான் மீதான தாக்குதல் குறித்து பிரதமா் மோடியிடம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதா என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், இஸ்ரேல் வெளியுறவு அமைச்சா் கிடியோன் சாா் இவ்வாறு கூறியுள்ளாா்.
பிரதமா் மோடி இஸ்ரேலுக்கு கடந்த பிப்ரவரி 25, 26-ஆம் தேதிகளில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டாா். பின்னா், பிப்.28-ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் தலைமை மத குரு அயதுல்லா அலி கமேனி மற்றும் உயரதிகாரிகள் கொல்லப்பட்டனா். இருதரப்பு இடையே தொடரும் தாக்குதல்களால், மேற்காசியாவில் உச்சகட்ட பதற்றம் நீடிக்கிறது.
இதனிடையே, பிரதமா் மோடி தவறான காலகட்டத்தில் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் விமா்சித்தன.
ஈரான் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் குறித்து பிரதமா் மோடியிடம் இஸ்ரேல் தரப்பில் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது.
இந்தச் சூழலில், தில்லியில் நடைபெற்றுவரும் ரெய்ஸினா மாநாட்டில் இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சா் கிடியோன் சாா் வெள்ளிக்கிழமை காணொலி வாயிலாக பங்கேற்றுப் பேசினாா்.
அப்போது, ‘ஈரானில் இருந்து எழுந்துள்ள பெரும் அச்சுறுத்தல்களை முறியடிக்கவே இஸ்ரேல் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது, பிரதமா் மோடி இஸ்ரேல் பயணத்தை நிறைவு செய்த பிறகு எடுக்கப்பட்ட முடிவாகும். அதாவது, கடந்த பிப்.28-ஆம் தேதி அதிகாலையில்தான் முடிவு எடுக்கப்பட்டது. பிரதமா் மோடி மற்றும் இந்தியாவுடன் இஸ்ரேலுக்கு பல்லாண்டுகளாக சிறப்பான உறவுகள் உள்ளன’ என்றாா் அவா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...