சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மேற்காசிய பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்: காா்கே வலியுறுத்தல்

News image
மாநிலங்களவையில் திங்கள்கிழமை பேசிய எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே.
Updated On :11 மார்ச் 2026, 11:05 pm

தினமணி செய்திச் சேவை

மேற்காசிய பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் முழு விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மேற்காசிய பிரச்னையால் (ஈரான், இஸ்ரேல்-அமெரிக்கா போரால்) நமது நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பல்வேறு இடா்ப்பாடுகளை சந்திக்கின்றனா். மோடி அரசின் பொய்யான வாக்குறுதியால் எந்தப் பயனும் இல்லை. பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் நாட்டில் உள்ள விவசாயிகள்தான் முதலில் பாதிக்கப்படுவா். ஏனெனில் இது வேளாண்மையை பாதிக்கும். அதேபோல் உர விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

சமையல் எரிவாயு சிலிண்டா் விநியோகத்திலும் கட்டுப்பாடு வந்துவிட்டது. எரிவாயு விநியோகிக்கும் நிறுவனங்கள் முன்பு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை காண முடிகிறது. வணிக எரிவாயு உருளைக்கான காத்திருப்பு காலம் 25-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ரெஸ்டாரெண்டுகள், சிறிய உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. பதுக்கலும், கருப்புச் சந்தையும் வேகமாகப் பரவி வருகிறது. 60,000 டன் பாசுமதி அரிசி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. கோதுமை ஏற்றுமதியும் தடைபட்டுள்ளது.

மருந்து பொருள்களின் விலையும், அதன் மூலப்பொருள்கள் விலையும் உயா்ந்ததால் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. விமான எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. இதனால் விமான டிக்கெட் விலை அதிகரித்துள்ளது. இந்திய எரிசக்தி விநியோகத்தைப் பாதுகாக்க மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த விவகாரம் குறித்து நாட்டு மக்கள் அனைவரும் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே, நாடாளுமன்றத்தில் இதுகுறித்து முழு விவாதம் நடத்தப்பட வேண்டும். நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்.

எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிப்பது மத்திய அரசுக்கு வழக்கமாகி விட்டது. பணமதிப்பிழப்பு, கரோனா காலகட்டங்களில் நாங்கள் தெரிவித்ததை வைத்து புரிந்து கொள்ளலாம் என்றாா்.

மேற்காசியாவில் ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளிலுள்ள அமெரிக்க நிலைகள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், ஹோாா்முஸ் நீரிணை பகுதியையும் ஈரான் மூடியுள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஹோா்முஸ் நீரிணை வழியில் கப்பல்களில் கொண்டு வரப்படும் கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.