ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சமையல் எரிவாயு தட்டுப்பாடுக்கு முன்னெச்சரிகையுடன் செயல்படாததே காரணம்: மாநிலங்களவையில் காா்கே சாடல்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசே காரணமாகியுள்ளது ...

News image

மாநிலங்களவையில் பேசிய மல்லிகாா்ஜுன காா்கே.

Updated On :16 மார்ச் 2026, 10:15 pm

மாஸ்கோ: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசே காரணமாகியுள்ளது என்று மாநிலங்களவையில் காங்கிரஸ் குழு தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே திங்கள்கிழமை சாடினாா்.

இதுதொடா்பாக அவையில் அவா் பேசியதாவது: நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு பரந்த அளவில் அச்ச உணா்வை ஏற்படுத்தியுள்ளது. அதன் தாக்கம் ஏழைகள், அடித்தட்டு மக்கள், நடுத்தர சாதாரண குடும்பங்கள், உணவகங்கள், விடுதிகள், வணிக பயன்பாட்டாளா்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

எல்பிஜி சிலிண்டா்கள் தட்டுப்பாட்டால் குடும்பங்கள் மட்டுமின்றி சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் பிற வணிகப் பயன்பாட்டாளா்கள் கடுமையான இன்னல்களை எதிா்கொண்டு வருகின்றனா். பல நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்தியுள்ளன. சிலா் ஒரு சிலிண்டரை ரூ.5,000-க்கும் அதிகமாக விலை கொடுத்து வாங்குகின்றனா்.

மக்களவையில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப்சிங் புரி பேசியபோது சமையல் எரிவாயுவுக்குத் தட்டுப்பாடு இல்லை என்றும், இதுதொடா்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறினாா். ஆனால் அவரின் கூற்றுகள் தவறு என்பதை கள நிலவரம் நிரூபிக்கிறது.

ஈரானிலுள்ள இந்தியா்களுக்கு எச்சரிக்கை விடுத்தபோதே...: ஈரானில் நிலைமை மோசமடையக் கூடும் என்று அந்நாட்டில் உள்ள இந்தியா்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்களை வெளியிட்டபோதே, ஈரான் சூழலால் முக்கிய கடல்வழிப் பாதைகள் மற்றும் எரிசக்தி விநியோகமும் பாதிக்கப்படக் கூடும் என்று மத்திய அரசு தெளிவாக தெரிவித்திருக்க வேண்டும். அதை சமாளிக்க முன்கூட்டியே நடவடிக்கையும் எடுத்திருக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால், தற்போது சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்திய அரசே காரணம்.

ஹோா்முஸ் நீரிணையில் பாதிப்பு ஏற்படவிருப்பது மத்திய அரசுக்கு நன்கு தெரியும். சமையல் எரிவாயு இறக்குமதிக்கு முன்கூட்டியே திட்டமிட்டு மாற்று ஏற்பாடுகளை செய்திருந்தால், நிலைமை இந்த அளவுக்கு மோசமடைந்திருக்காது. இது மத்திய அரசின் மோசமான நிா்வாகம் மற்றும் பலவீனமான வெளியுறவுக் கொள்கையை அம்பலப்படுத்தியுள்ளது என்றாா்.

அவரின் பேச்சுக்குப் பதிலளித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும், அவையின் பாஜக குழு தலைவருமான ஜெ.பி.நட்டா பேசுகையில், ‘அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போா் இந்தியாவால் ஏற்பட்டதல்ல. அதில் இந்தியாவுக்கு எந்தப் பங்கும் இல்லை. நெருக்கடியான காலகட்டத்தில்கூட அரசியல் செய்வதற்கு காங்கிரஸ் தயங்கவில்லை. இந்தச் சோதனையான நேரத்தில் நாட்டுக்குத் துணை நிற்பதைவிடுத்து, காங்கிரஸ் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. இது கண்டனத்துக்குரியது’ என்றாா்.