ஊடுருவல் வெறும் தேர்தல் பிரச்னை மட்டுமல்ல மாநிலத்தின் அடையாளம்: பிரதமர் மோடி!
அஸ்ஸாமில் வாக்குச்சாவடி நிலை தொண்டர்களிடம் காணொலி வாயிலாகப் பிரதமர் மோடி உரை..

பிரதமர் மோடி
DPS

பிரதமர் மோடி
DPS
அஸ்ஸாமில் நடைபெறும் ஊடுருவல் என்பது வெறும் தேர்தல் பிரச்னை மட்டுமல்ல, மாநிலத்தின் அடையாளம் மற்றும் தேசியப் பாதுகாப்பு பற்றியது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அஸ்ஸாமில் உள்ள பாஜகவின் வாக்குச்சாவடி நிலை தொண்டர்களிடம் காணொலி வாயிலாகப் பிரதமர் மோடி உரையாற்றினார்.
மாநிலத்தில் நீண்ட காலமாக நிலையற்ற தன்மையைச் சந்தித்து வந்ததாகவும், ஆனால் கடந்த பத்தாண்டுகளில் நிலைமை மாறியுள்ளதாகவும், இதற்கு அமைதியை உறுதி செய்ய பாஜகவின் இரட்டை என்ஜின் அரசு மேற்கொண்ட தீவிர முயற்சிகளே காரணம். அஸ்ஸாமில் முந்தைய காங்கிரஸின் மோசமான ஆட்சியைக் குறித்து முதல்முறையாக வாக்களிப்பவர்களுக்கு நினைவூட்டுகிறேன். மிகச்சிறிய தவறு கூட மாநிலத்தை மீண்டும் பின்னோக்கித் தள்ளிவிடும், மூன்றாவது முறையாக வெற்றியை உறுதி செய்ய பாஜக உறுப்பினர்கள் கடுமையாக உழைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஊடுருவல் என்பது வெறும் தேர்தல் சாந்த பிரச்னை மட்டுமல்ல. அஸ்ஸாமின் அடையாளம், தேசியப் பாதுகாப்பைப் பாதுகாப்பது தொடர்பானது. ஊடுருவல்காரர்களால் சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பதைக் காங்கிரஸ் கட்சி அனுமதித்தது. ஊடுருவல்காரர்கள் எங்குக் குடியேறினாலும், அங்குள்ள சிறு வணிகங்களையும், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரங்களையும் ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு வழக்குகள் குறித்தும், அதனால் உள்ளூர் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும் பாஜக தொண்டர்கள் முழுமையாக அறிந்திருக்க வேண்டும்.
நில ஆக்கிரமிப்புகளைக் காங்கிரஸ் கட்சி அனுமதித்தது, ஆனால் பாஜகவோ மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து வருகிறது என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து, அரசு 12 அமைதி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. செய்தித் தலைப்புகளை உருவாக்குவதற்காகவும், மக்களைத் திசைதிருப்புவதற்காகவும் காங்கிரஸ் கட்சி எவ்வாறு காகிதத்தில் மட்டுமே ஒப்பந்தங்களைச் செய்து வந்தது என்பதை பாஜக தொண்டர்கள் மக்களுக்கு நினைவூட்ட வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சியில் அமைதி ஒப்பந்தங்கள் புறக்கணிக்கப்பட்டன, இளைஞர்கள் துன்பத்திற்கு ஆளாகி, அமைதியின்மையின் பக்கம் திசைதிருப்பப்பட்டனர். அஸ்ஸாமில் காங்கிரஸ் ஆட்சியின் போது, கிளர்ச்சியாளர்கள் மற்றும் மாணவர் அமைப்புகளுடனான எந்தவொரு ஒப்பந்தமும் பலனளிக்கவில்லை. காங்கிரஸ் கட்சி போடோ மக்களின் நோக்கத்திற்குத் துரோகம் இழைத்தது. பாஜக அமைதியை நிலைநாட்டவும், இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவுமே பணியாற்றியது. நாங்கள் அமைதி ஒப்பந்தங்களைக் களத்தில் உண்மையாகச் செயல்படுத்தி வருகிறோம்.
ஒரு காலத்தில் ஊரடங்கு உத்தரவுகளையும், குண்டு வெடிப்புச் சத்தங்களையும் எதிர்கொண்ட போடோலாந்து பகுதி, இன்று அமைதியுடனும் ஸ்திரத்தன்மையுடனும் திகழ்கிறது. அஸ்ஸாமில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றிபெற அனைவரும் கடுமையாக உழைத்து வருகின்றனர். அஸ்ஸாம் பாஜகவின் தொண்டர்களை நான் வரவேற்கிறேன். உங்களைப் போலவே நானும் ஒரு தொண்டன்தான். எனக்கு எத்தகைய பொறுப்பு வழங்கப்பட்டாலும், அந்த கடமையை நான் முழுமையாக நிறைவேற்றுகிறேன். இன்று உங்களுடன் உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.
நீங்கள் அனைவரும் மும்முரமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதையும், 'எனது வாக்குச்சாவடியே மிகவும் வலிமையானது என்ற உறுதியுடன் நீங்கள் அனைவரும் திகழ்கிறீர்கள் என்பதையும் நான் அறிவேன் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...