/

மே 1 முதல் நடைமுறைக்கு வந்த முக்கிய மாற்றங்கள்! ஓடிபி, பிஎஃப், பான் வரை!

டிஜிட்டல் பணப்பரிமாற்றத்துக்கு ஓடிபி முதல் பிஎஃப், பான் வரை மே 1 முதல் நடைமுறைக்கு வந்த முக்கிய மாற்றங்கள் பற்றி..

News image

இன்று முதல் நடைமுறை - File photo

Updated On :1 மே 2026, 9:55 am

மே 1ஆம் தேதி முதல் பல்வேறு நடைமுறைகளில் முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வந்திருக்கின்றன. இவற்றை மக்கள் அறிந்துகொள்வது மிகவும் முக்கியம்.

டிஜிட்டல் பணப்பரிமாற்றம், ரொக்கம் டெபாசிட், பிஎஃப் கணக்கு போன்றவற்றில் பல புதிய மாற்றங்கள் மே 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

பெரும்பாலும் மக்களுக்கு பயனுள்ள வகையில்தான் இந்த மாற்றங்கள் அமைந்திருந்தாலும், அதுபற்றி தெரியாமல் இருந்தால் சிக்கல்தான்.

1. மெட்ரோ ரயில் அட்டை - சென்னை மெட்ரோ ரயில்களில் மே 1-ஆம் தேதி முதல் சிங்காரச் சென்னை அட்டையை பயன்படுத்தி மட்டுமே பயணிக்க முடியும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கனவே அறிவித்துவிட்டது. எனவே, பழைய பயண அட்டையைப் பயன்படுத்தி வருபவா்கள், அதில் வரவு வைத்துள்ள தொகையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கைப்பேசி செயலி வாயிலாக பெறப்படும் ‘கியூ ஆா் ஸ்டோா்டு வேல்யூ பாஸ் (எஸ்விபி)’ அல்லது தேசியப் பொது போக்குவரத்து அட்டைக்கு மாற்றிக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. சிலிண்டர் விலை- முதலில் வணிக சிலிண்டர்களின் விலைகளில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மே 1 முதல் வணிக சிலிண்டர் விலை ரூ.993 அளவுக்கு உயர்த்தப்பட்டு ஒரே ஒரு சிலிண்டர் ரூ.3,237-க்கு விற்பனையாகும்.

இதனால் உணவுப் பொருள்களின் விலையேற்றம் அடுத்தடுத்த நாள்களில் இருக்கலாம் என எதிர்பார்ப்பு.

3. டிஜிட்டல் பரிமாற்றம் - டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை பாதுகாப்பானதாக மாற்ற, யுபிஐ, நெட் பேங்கிங், கார்டு மூலம் பணப்பரிமாற்றம் செய்யும்போதும் இனி ஓடிபி உறுதி செய்யும் முறை அறிமுகமாகிறது.

4. பிஎஃப் பணம் - தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஈபிஎஃப்ஓ 3.0 என்ற புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. வங்கிப் பரிவர்த்தனை போல கணக்கு வைத்திருப்பவரின் யுனிவர்சல் கணக்கு எண் பயன்படுத்தி மிக விரைவாக பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதி அறிமுகமாகியிருக்கிறது.

5. பான் அட்டை - ரூ.10 லட்சத்துக்கும் மேல் வைப்பு அல்லது பணம் எடுக்கும்போது பான் எண் அளிக்க வேண்டும் என்பது மே 1 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, இனி வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ.10 லட்சத்தை எடுக்கவோ, வங்கிக் கணக்கில் ரூ.10 லட்சம் வரவு வைக்கவோ பான் எண் அவசியம்.

6. ஆன்லைன் விளையாட்டு - ஆன்லைன் விளையாட்டகளில் சூதாட்டம் தொடர்பான விளையாட்டுகளுக்கு பதிவு அவசியம் என்ற விதி மே 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இ-ஸ்போர்ட்ஸ் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு கட்டாய பதிவு அவசியம்.

Summary

About the major changes that came into effect from May 1st, from OTP to PF and PAN for digital money transfers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.