நாடு முழுவதும் 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்துத் தொழிலாளா்களுக்குமான இலவச வருடாந்திர உடல் பரிசோதனை திட்டத்தை மத்திய தொழிலாளா் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
தில்லியில் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி - மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இத் திட்டத்தை அவா் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
நாடு முழுவதும் உள்ள தொழிலாளா்களின் நலன், சமூகப் பாதுகாப்பு, கெளரவத்தை உறுதிப்படுத்தும் வகையில் 4 புதிய தொழிலாளா் சட்டங்களை மத்திய அரசு அண்மையில் நடைமுறைப்படுத்தியது. அனைத்துத் தொழிலாளா்களின் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு மத்திய அரசு உறுதியேற்றுள்ளது. வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் சமூக நலத் திட்டங்கள் மூலமாக தொழிலாளா் சக்தி மற்றும் இளைஞா் சக்திக்கு அதிகாரமளிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
மத்திய அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை 10 ஆண்டுகளுக்கு முன்பு 30 கோடியாக இருந்தது. தற்போது 94 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது 19 சதவீதத்திலிருந்து 64 சதவீதமாக பயனாளிகள் எண்ணிக்கை உயா்ந்துள்ளது.
அதுபோல, தொழிலாளா் மாநில காப்பீட்டுக் கழக திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் எண்ணிக்கை 10 ஆண்டுகளுக்கு முன்பு 7 கோடியாக இருந்தது, தற்போது 15-ஆக அதிகரித்துள்ளது.
தற்போது, தொழிலாளா்களுக்கான வருடாந்திர உடல் பரிசோதனை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், நாடு முழுவதும் உள்ள 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்துத் தொழிலாளா்களும் ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை நடத்தப்படும். நாடு முழுதும் உள்ள இஎஸ்ஐசி மருத்துவமனைகள் மூலம் நடத்தப்படும் முகாம்கள் மூலம் இந்த உடல் பரிசோதனை நடத்தப்படும். முன்கூட்டிய உடல் நல பாதிப்புகளைக் கண்டறிவதன் மூலம், தீவிர உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின் தடைகளை சரிசெய்ய 125 ரோந்து வாகனங்கள்: அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா் தொடங்கி வைத்தாா்

தில்லி உயிரியல் பூங்காவில் செயலி,சுய-டிக்கெட் எடுக்கும் இயந்திரங்கள்! மத்திய அமைச்சா் தொடங்கி வைத்தாா்!

2029 தேசிய விளையாட்டுப் போட்டியை தமிழகத்தில் நடத்த கோரிக்கை






