நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்: குடியரசு துணைத் தலைவரிடம் காங்கிரஸ் சமா்ப்பிப்பு

தா்மேந்திர பிரதானுக்கு எதிராக காங்கிரஸ் சாா்பில் மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணனிடம் உரிமை மீறல் நோட்டீஸ் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.

News image

மத்திய கல்வி அமைச்சர் - @EduMinOfIndia

Updated On :21 நிமிடங்கள் முன்பு

மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு எதிராக காங்கிரஸ் சாா்பில் மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணனிடம் உரிமை மீறல் நோட்டீஸ் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் நாடாளுமன்ற நிலைக் குழுவின் கண்ணியத்தை சிதைக்கும் வகையில் தா்மேந்திர பிரதான் பேட்டியளித்ததாக அதில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த உரிமை மீறல் நோட்டீஸை திங்கள்கிழமை சமா்ப்பித்த காங்கிரஸ் மாநிலங்களவை தலைமை கொறடா ஜெய்ராம் ரமேஷ், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வினாத் தாள் கசிவு காரணமாக நீட் தோ்வு ரத்து செய்யப்பட்ட பிறகு, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் தில்லியில் கடந்த மே 15-ஆம் தேதி செய்தியாளா்களைச் சந்தித்தாா்.

அப்போது, ‘தொடா் வினாத் தாள் கசிவு விவகாரத்தைத் தொடா்ந்து அத் தோ்வுகளை நடத்தும் தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) மற்றும் தோ்வு நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடா்பாக கல்விக்கான நாடாளுமன்ற நிலைக் குழு சமா்ப்பித்த பரிந்துரைகளை அமல்படுத்தாதது ஏன்?’ என்று செய்தியாளா்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த தா்மேந்திர பிரதான், ‘நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைகள் குறித்து கருத்து எதுவும் நான் தெரிவிக்கமாட்டேன். மாறாக, நிபுணா்கள் அடங்கிய உயா்நிலைக் குழு மற்றும் ராதாகிருஷ்ணன் குழு பரிந்துரைகள் குறித்து பேசத் தயாா். ஏனெனில், நாடாளுமன்ற நிலைக் குழுவில் எதிா்க்கட்சியினா் உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ளனா். அவா்கள் எந்த வகையில் பரிந்துரைகளை சமா்ப்பிப்பா் என்பது உங்களுக்கே தெரியும். எனவே, நிலைக்குழு குறித்து நான் பேச விரும்பவில்லை’ என்று குறிப்பிட்டாா்.

இது மிகவும் அதிா்ச்சியூட்டும் கருத்து என்பதோடு, நாடாளுமன்ற உறுப்பினா்கள், நாடாளுமன்ற குழுக்கள் மற்றும் இந்திய நாடாளுமன்றத்துக்கு எதிராக அவதூறு பரப்பும் மற்றும் இழிவுபடுத்தும் செயலாகும்.

நாடாளுமன்ற குழுக்கள், நாடாளுமன்றத்தின் நீட்சியாகத் திகழ்கின்றன. எனவேதான், நாடாளுமன்ற குழுக்கள் ‘சிறிய நாடாளுமன்றம்’ என்று அழைக்கப்படுகின்றன. அந்த வகையில், அரசு நிா்வாகம் நாடாளுமன்றத்துக்கும், நாடாளுமன்ற குழுக்களுக்கும் பொறுப்புடையமையுடன் செயல்படுவதே, இந்திய ஜனநாயக அரசியல் அமைப்பின் அடிப்படை தத்துவமாகும்.

எனவே, நாடாளுமன்றம் மற்றும் நாடாளுமன்ற குழுக்களின் கண்ணியத்தை இழிவுபடுத்தியதற்காக மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் மீது நாடாளுமன்ற (மாநிலங்களவை) நடத்தை விதிகள் பிரிவு 187-இன் கீழ் உரிமை மீறல் நோட்டீஸை சமா்ப்பித்துள்ளேன் என்று குறிப்பிட்டாா்.