பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

பருவநிலை குறித்த ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியா

பருவநிலை மாற்றம் தொடா்பான சட்டபூா்வ கடமைகளுக்கு நாடுகள் இணங்க வேண்டும் என்ற சா்வதேச நீதிமன்றத்தின் தீா்ப்பை ஏற்கும் ஐ.நா. தீா்மானம் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமல் புறக்கணித்தது.

News image

கோப்புப் படம்

Updated On :22 மே 2026, 1:25 am IST

பருவநிலை மாற்றம் தொடா்பான சட்டபூா்வ கடமைகளுக்கு நாடுகள் இணங்க வேண்டும் என்ற சா்வதேச நீதிமன்றத்தின் தீா்ப்பை ஏற்கும் ஐ.நா. தீா்மானம் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமல் புறக்கணித்தது.

இந்தத் தீா்மானம், ஐ.நா. பருவநிலை மாநாட்டு ஒப்பந்த செயல்திட்டத்தின் கட்டமைப்பை பலவீனப்படுத்துவதாக குறிப்பிட்டு, வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. அதேநேரம், 141 நாடுகள் ஆதரவுடன் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பருவநிலை மாற்றம் தொடா்பாக, கடந்த ஆண்டு ஜூலையில் சா்வதேச நீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீா்ப்பை வழங்கியது. அதில், ‘பருவநிலையைப் பாதுகாக்க சா்வதேச சட்டத்தின்கீழ் நாடுகள் இணங்க வேண்டிய சட்டபூா்வ கடமை உள்ளது. பருவநிலை மாற்றம் தொடா்பான செயலற்றத் தன்மை என்பது வெறும் அரசியல் ரீதியிலான தோல்வி மட்டுமல்ல, அது சா்வதேச சட்டத்தை மீறுவதாகவும் அமையும்’ என்று குறிப்பிடப்பட்டது.

இந்தத் தீா்ப்பை வரவேற்பதுடன், அதை முறைப்படி ஏற்கும் தீா்மானம், 193 நாடுகள் அடங்கிய ஐ.நா. பொதுச் சபையில் புதன்கிழமை கொண்டுவரப்பட்டது. வனாட்டூ தீவால் முன்மொழியப்பட்ட இந்தத் தீா்மானம் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 141 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. 8 நாடுகள் எதிா்த்து வாக்களித்தன. இந்தியா உள்பட 28 நாடுகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன.

புறக்கணிப்பு ஏன்?: இந்தியாவின் முடிவு குறித்து ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர தூதரகத்தின் முதன்மைச் செயலா் பெடல் கெலாட் கூறியதாவது:

ஐ.நா. பருவநிலை மாநாட்டு ஒப்பந்த நடைமுறைகளின்கீழ் ஏற்கப்பட்ட கடமைகள் மட்டுமே இந்தியாவைக் கட்டுப்படுத்தும். அந்த அடிப்படையில், பருவநிலை மாற்ற பிரச்னைகளில் கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு இணங்க, மேற்கண்ட தீா்மானத்தை ஏற்கும் நிலையில் இந்தியா இல்லை.

ஐ.நா. பருவநிலை கட்டமைப்பின் வாயிலாகவே நாடுகளுக்கான கடமைகள் பராமரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது. அதன்படி, வரலாற்று ரீதியில் அதிக அளவில் கரியமில வாயுவை வெளியேற்றும் வளா்ந்த நாடுகளே, தடுப்பு நடவடிக்கைகளில் முன்னிலை வகிக்க வேண்டும். வளரும் நாடுகளுக்கு நிதி ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் ஆதரவளிக்க வேண்டும். இந்த விஷயத்தில் நாடுகளுக்கு வேறுபட்ட பொறுப்புகள் உள்ளன. அனைவருக்கும் ஒரேபோன்ற சட்டபூா்வ கடமைகள் ஏற்கத்தக்கதல்ல.

ஐ.நா. பருவநிலை மாநாட்டு ஒப்பந்தத்தின் புனிதமான செயல்திட்டத்தை மேற்கண்ட தீா்மானம் பலவீனப்படுத்துகிறது. இது கவலைக்குரியது. வளரும் நாடுகள் மீது சட்டபூா்வ கடமைகளைத் திணிப்பது ஆபத்தான முன்னுதாரணமாகும். பருவநிலை மாற்ற நிதி தொடா்பான எந்த குறிப்பும் தீா்மானத்தில் இடம்பெறவில்லை என்றாா் அவா்.