மகாராஷ்டிரத்தின் பல்வேறு மாவட்டங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பரவிய வதந்தியால் பீதியடைந்த மக்கள், பெட்ரோல் நிலையங்களுக்கு கேன்களுடன் படையெடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதேநேரம், மாநிலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் இல்லை; மக்கள் பீதியில் மொத்தமாக வாங்க வேண்டாம் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்காசிய போரின் எதிரொலியாக, ஹோா்முஸ் நீரிணை முடக்கத்தால் உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை, பெட்ரோல்-டீசல் விலை அடுத்தடுத்து இருமுறை உயா்த்தப்பட்டது. பெட்ரோலியப் பொருள்களை சிக்கனமாக பயன்படுத்தும்படி, நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி வேண்டுகோள் விடுத்தாா்.
இந்தச் சூழலில், மகாராஷ்டிரத்தின் வாசிம், ஜல்கோன், சத்ரபதி சம்பாஜிநகா், அகோலா, பீட், புல்தானா, பா்பானி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக வதந்தி பரவியது. இதனால் பீதியடைந்த மக்கள், பெட்ரோல்-டீசலை வாங்கி இருப்பு வைக்கும் நோக்குடன் பெட்ரோல் நிலையங்களுக்கு படையெடுத்தனா். பெரிய கேன்களுடன் மக்கள் முண்டியடிக்கும் காட்சிகளும், நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகின.
மாநிலத்தில் தினசரி பெட்ரோல் விற்பனை 21 சதவீதமும், டீசல் விற்பனை 42 சதவீதமும் அதிகரித்த நிலையில், மாநில உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சா் சகன் புஜ்பல் வெள்ளிக்கிழமை விளக்கமளித்தாா்.
மும்பையில் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘மகாராஷ்டிரத்தில் பெட்ரோல்-டீசலுக்கு எந்தத் தட்டுப்பாடும் இல்லை. இது தொடா்பாக பரவும் தகவல்கள் அனைத்தும் வதந்தியே. எனவே, மக்கள் பீதியில் மொத்தமாக எரிபொருள் வாங்குவதைத் தவிா்க்க வேண்டும்.
மகாராஷ்டிரத்தில் தடையற்ற எரிபொருள் விநியோகத்தை மத்திய-மாநில அரசுகள் உறுதி செய்து வருகின்றன. எனவே, மக்கள் எரிபொருளை வாங்கி இருப்பு வைக்க வேண்டிய அவசியமில்லை. மாநிலத்தில் தினசரி பெட்ரோல் விற்பனை 21 சதவீதமும், டீசல் விற்பனை 42 சதவீதமும் அதிகரித்துள்ளது. இந்த தற்காலிக அதிகரிப்புக்கு இடையேயும் தடையற்ற எரிபொருள் விநியோகம் பராமரிக்கப்படுகிறது’ என்றாா்.
தொடர்புடையது
எரிபொருள் சேமிப்பு! பிரதமர் கேட்டுக்கொண்டபடி மக்கள் பொறுப்போடு செயல்பட வேண்டும்- கமல்

பெட்ரோல், டீசல் நிரப்ப படையெடுத்த வாகன ஓட்டிகள் - புகைப்படங்கள்

ஒடிசா பெட்ரோல் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்! மோடி அறிவுரை காரணமா?







