எரிபொருள் தட்டுப்பாடு விவகாரத்தில் மாநில அரசும் மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநிலங்களவை உறுப்பினரும், மநீம கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வெள்ளிக்கிழமை விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த விடியோவில் அவர் பேசியதாவது:
என் அன்பு நாட்டு மக்களே, ஈரான் போரின் தாக்கத்தால் ஆழ்ந்த கவலை கொண்ட ஓர் இந்தியனாக இன்று உங்களிடம் பேசுகிறேன். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, 60க்கும் மேற்பட்ட நாடுகள் ஏற்கெனவே எரிசக்தி சேமிப்பு விதிகளை அமல்படுத்தியுள்ளன. வரவிருக்கும் கடினமான காலங்களுக்குத் தயாராகுமாறு சிங்கப்பூர் பிரதமர், தன் மக்களைக் கேட்டுக்கொண்டதை சமீபத்தில் அறிந்தோம். நாம் ஒரு மிகப் பெரிய நாடு, மேலும் எரிசக்தியைச் சேமிக்குமாறு நம்மிடம் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். இது போன்ற சூழல்களில், கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு தேசத்தின் மீதான நமது பொறுப்புகள் அதிகரிக்க வேண்டும்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியது போல, அரசாங்கங்கள் வரும், போகும். ஆனால் நாடு நிலைத்திருக்கும். ஒரு நடுநிலையாளராக, எனது அரசியல் கூட்டணிகளைப் பொருட்படுத்தாமல் செய்யப்படும் நல்ல பணிகளையும் நான் வரவேற்க வேண்டும். பிரதமரின் பத்தாண்டு கால ஆட்சியில் இந்தியாவின் சூரிய மற்றும் காற்றாலை ஆற்றல் திறன் அதிகரித்துள்ளது. நிலக்கரி, மற்றும் அணுசக்தி ஆகியவற்றில் சமீபத்தில் செய்யப்பட்ட முதலீடுகள் எனக்கு ஊக்கமளிக்கின்றன.
அதே வேளையில், மக்களிடமிருந்து மட்டும் தியாகத்தை எதிர்பார்க்க முடியாது. அரசாங்கங்களும் இந்தப் பொறுப்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். எனவே, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுத்து தேசிய மாநாட்டைக் கூட்டுமாறு பிரதமரை நான் கேட்டுக்கொள்கிறேன். எளிய மக்களைப் பாதுகாக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு, இரண்டு விஷயங்களை உடனடியாகச் செய்ய வேண்டும்.
முதலில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரி (VAT) போன்ற மாநில வரிகள் குறைக்கப்பட வேண்டும். இரண்டாவதாக, அதிகமான மக்கள் தனியார் வாகனப்பயன்பாட்டிலிருந்து மாறுவதற்காக ரயில், மெட்ரோ மற்றும் பேருந்துக் கட்டணங்கள் ஆகியவை குறைக்கப்பட வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.










