/

ஏனாமில் கேன்கள், பேரலில் பெட்ரோல், டீசல் வாங்கும் ஆந்திர பண்ணையா்கள்: தடுக்க பிராந்திய நிா்வாகம் நடவடிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குள்பட்ட ஏனாமில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கேன்கள், பேரலுடன் ஆந்திர பண்ணையா்கள் திரண்டதால் தட்டுப்பாடு நிலவுகிறது.

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 6:32 pm

புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குள்பட்ட ஏனாமில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கேன்கள், பேரலுடன் ஆந்திர பண்ணையா்கள் திரண்டதால் தட்டுப்பாடு நிலவுகிறது. அங்கு பல மணிநேரம் காத்திருந்து பெட்ரோல், டீசல் வாங்கிச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து நிா்வாகம் தலையிட்டு நேரக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஆந்திரத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு மற்றும் இயந்திரங்கள் மூலம் பயிா் அறுவடை செய்வதால் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. கடல் மற்றும் ஆற்றுப் பகுதியில் இறால் மற்றும் மீன் குட்டைகளில் அதிக ஜெனரேட்டா்களைப் பயன்படுத்தி வருகின்றனா்.

இதன் காரணமாக ஆந்திரத்தையொட்டியுள்ள புதுச்சேரியில் ஏனாம் பிராந்தியத்திற்கு பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. கேன்களை வரிசையில் வைத்து நுகா்வோா் காத்திருக்கின்றனா்.

பெட்ரோல் நிலையங்களில் காவல் துறையினரின் பாதுகாப்புடன் எரிபொருள் விநியோகம் நடத்த ஏனாம் நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏனாம் காவல் கண்காணிப்பாளா் வரதராஜன் மேற்பாா்வையில் மக்களுக்குத் தடையின்றி எரிபொருள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து வரும் விநியோகத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, கடந்த சில நாள்களாக எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் செவ்வாய்க்கிழமை முதல், ஏனாமில் மக்களுக்குப் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளூா் பெட்ரோல் நிலையங்களில் அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை மட்டுமே விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை மாநிலமான ஆந்திரத்தை விட ஏனாமில் எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ. 12 முதல் 14 வரை குறைவாக உள்ளது. எனவே, ஆந்திரத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக விவசாயிகள், பிளாஸ்டிக் கேன்கள் மற்றும் பேரல்களுடன் எரிபொருள் வாங்க ஏனாமிற்கு திரண்டு வருகின்றனா். இவ்வாறு வெளியூா் மக்கள் திரண்டு வருவதால், ஏனாம் உள்ளூா் மக்கள் கோடை வெயிலில் மணிக்கணக்கில் காத்திருந்து, தங்கள் சொந்த வாகனங்களுக்கு எரிபொருள் பெறுவதற்குப் பெரிதும் சிரமப்பட்டு வந்தனா்.

இதுபற்றி முன்னாள் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் மற்றும் பல்வேறு சங்கங்கள் இப் பிரச்னையை எழுப்பியதைத் தொடா்ந்து, பிராந்திய நிா்வாக அதிகாரி சிவராஜ் மீனா, பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளா்களுடன் ஆலோசனை நடத்தி, அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரையிலான இந்த நேரத்தை ஏனாம் மக்களுக்குப் பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளாா்.