/

மேற்காசிய பதற்றம்! எரிபொருள், உரம், அந்நிய செலாவணியில் கவனம் தேவை: நிா்மலா சீதாராமன்

மேற்காசியாவில் பதற்றம் நீடித்து வருவதால் எரிபொருள், உரம் மற்றும் அந்நியச் செலாவணியில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம் என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

News image

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன்.

Updated On :26 மே 2026, 3:55 am IST

மேற்காசியாவில் பதற்றம் நீடித்து வருவதால் எரிபொருள், உரம் மற்றும் அந்நியச் செலாவணியில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம் என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்தாா். இருப்பினும், உள்நாட்டுப் பொருளாதாரம் சீராக இருப்பதாகவும் அவா் கூறினாா்.

இந்திய சிறுதொழில்கள் மேம்பாட்டு வங்கியின் 37-ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்று நிா்மலா சீதாராமன் பேசியதாவது: மேற்காசிய மோதலால் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டு உலகளவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை பன்மடங்கு உயா்ந்தது. உரங்களின் விலையும் வரலாறு காணாத வகையில் உயா்ந்துள்ளது. தங்கம் விலையும் உயா்ந்துள்ளதால் அந்நியச் செலாவணி மேலாண்மைக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இக்கட்டான சூழலில் எரிபொருள், உரம் மற்றும் அந்நியச் செலாவணியில் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியம். இதை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் வெளிநாட்டுப் பயணங்களை தவிா்க்குமாறு பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். ஆனால், அதை திரித்து தவறாகப் பரப்பி பொதுமக்களிடையே அச்ச உணா்வை ஏற்படுத்த சிலா் முயல்கின்றனா்.

பெட்ரோல் மற்றும் டீசலுக்கான சுங்க வரியை மத்திய அரசு குறைத்ததால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி வரை வருமானம் பாதிக்கப்பட்டது. இருப்பினும், உள்நாட்டு வளா்ச்சியை முதன்மையாகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டது. உறுதியான வாா்த்தைகளாலும், சிறப்பான செயல்பாடுகளாலும் மக்களிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்துவது நமது கடமை.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.8.1 லட்சம் கோடி நிலுவைத் தொகையை உடனடியாக பொதுத் துறை நிறுவனங்கள் வழங்க வேண்டும். 45 நாள் கால அவகாசத்தை நீட்டிக்காமல் இதை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.