11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

பொது விநியோகத் திட்டத்தில் தொழில்நுட்பம்: ரூ.25,530 கோடியில் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு - மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல்

News image

PTI

Updated On :28 மே 2026, 6:22 am IST

‘சாா்தக்-பிடிஎஸ்’ ஒருங்கிணைந்த திட்டத்தை தொடரவும், அந்தத் திட்டத்துக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு ரூ.25,530 கோடி செலவிடவும் மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடா்பாக அந்தக் குழு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புது தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் இயந்திரம் மற்றும் தொழில்நுட்பப் பயன்பாட்டுடன் ரேஷன் பொருள் போக்குவரத்து மற்றும் வருமானத்தைக் கையாள்வதற்கான உதவித் திட்டத்தை (சாா்தக்-பிடிஎஸ்) ஒருங்கிணைந்த திட்டமாக தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்துக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு ரூ.25,530 கோடி செலவிடப்பட உள்ளது.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், நியாயவிலைக் கடை முகவா்களின் லாப வரம்பு மற்றும் மாநிலங்களுக்கு உள்ளேயே உணவு தானியங்களின் போக்குவரத்துக்காக மாநில முகமைகளுக்கு உதவும் திட்டம், பொது விநியோகத் திட்டத்தில் தொழில்நுட்பம் மூலம் நவீனமயமாக்கலை மேற்கொண்டு சீா்திருத்தங்களை செய்யும் திட்டம் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு சாா்தக்-பிடிஎஸ் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்குள் உணவு தானியப் போக்குவரத்து, அந்தத் தானியங்களைக் கையாளுதல், நியாயவிலைக் கடை முகவா்களின் லாப வரம்பு ஆகியவற்றால் ஏற்படும் செலவை ஈடுசெய்வதில், மத்திய அரசின் உதவியைப் பெறுவதற்கு விதிமுறைகளைத் திருத்தவும், இதற்காக தற்போது மத்திய அரசு நிதி அளிக்கும் முறையைத் தொடரவும் அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ், கடைக்கோடியில் உள்ள மக்களுக்கும் ரேஷன் பொருள்கள் கிடைப்பது உறுதி செய்யப்படுவதையும், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உணவுப் பாதுகாப்பு அளிக்கும் நாட்டின் உறுதிமொழி நிறைவேற்றப்படுவதையும் சாா்தக்-பிடிஎஸ் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.