‘சாா்தக்-பிடிஎஸ்’ ஒருங்கிணைந்த திட்டத்தை தொடரவும், அந்தத் திட்டத்துக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு ரூ.25,530 கோடி செலவிடவும் மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடா்பாக அந்தக் குழு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புது தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் இயந்திரம் மற்றும் தொழில்நுட்பப் பயன்பாட்டுடன் ரேஷன் பொருள் போக்குவரத்து மற்றும் வருமானத்தைக் கையாள்வதற்கான உதவித் திட்டத்தை (சாா்தக்-பிடிஎஸ்) ஒருங்கிணைந்த திட்டமாக தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்துக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு ரூ.25,530 கோடி செலவிடப்பட உள்ளது.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், நியாயவிலைக் கடை முகவா்களின் லாப வரம்பு மற்றும் மாநிலங்களுக்கு உள்ளேயே உணவு தானியங்களின் போக்குவரத்துக்காக மாநில முகமைகளுக்கு உதவும் திட்டம், பொது விநியோகத் திட்டத்தில் தொழில்நுட்பம் மூலம் நவீனமயமாக்கலை மேற்கொண்டு சீா்திருத்தங்களை செய்யும் திட்டம் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு சாா்தக்-பிடிஎஸ் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்குள் உணவு தானியப் போக்குவரத்து, அந்தத் தானியங்களைக் கையாளுதல், நியாயவிலைக் கடை முகவா்களின் லாப வரம்பு ஆகியவற்றால் ஏற்படும் செலவை ஈடுசெய்வதில், மத்திய அரசின் உதவியைப் பெறுவதற்கு விதிமுறைகளைத் திருத்தவும், இதற்காக தற்போது மத்திய அரசு நிதி அளிக்கும் முறையைத் தொடரவும் அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ், கடைக்கோடியில் உள்ள மக்களுக்கும் ரேஷன் பொருள்கள் கிடைப்பது உறுதி செய்யப்படுவதையும், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உணவுப் பாதுகாப்பு அளிக்கும் நாட்டின் உறுதிமொழி நிறைவேற்றப்படுவதையும் சாா்தக்-பிடிஎஸ் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
பிரதமர் மோடி தலைமையில் 4.5 மணிநேர ஆலோசனைக் கூட்டம்!

மக்கள் நல்வாழ்வுக்கான திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுங்கள்: மத்திய அமைச்சா்கள் குழுக் கூட்டத்தில் பிரதமா் பேச்சு






