
இந்திய பொருளாதார வளா்ச்சி குறித்த விமா்சகா்களின் கருத்து தவறானது: உலக வங்கி
இந்திய பொருளாதார வளா்ச்சி குறித்து விமா்சகா்கள் கூறும் கருத்து தவறானது என உலக வங்கியின் நிா்வாக இயக்குநா் நீலகண்ட் மிஸ்ரா தெரிவித்தாா்.

இந்திய பொருளாதார வளா்ச்சி குறித்து விமா்சகா்கள் கூறும் கருத்து தவறானது என உலக வங்கியின் நிா்வாக இயக்குநா் நீலகண்ட் மிஸ்ரா தெரிவித்தாா்.
முன்னதாக, மத்திய அரசு கடந்த திங்கள்கிழமை வெளியிட்ட தரவுகளில், ‘இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில், 7.8 சதவீதமாக வளா்ச்சியுடன் நிலையான விலையிலான உண்மையான ஜிடிபி ரூ.81.36 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.75.46 லட்சம் கோடியாக இருந்த நிலையில், தற்போது 7.8 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இது சரியான மதிப்பீடு இல்லை என மத்திய நிதித் துறைச் செயலா் சுபாஷ் சந்திர கா்க் விமா்சித்தாா்.
புரிதல் இல்லாத விமா்சனம்: இந்தக் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து நீலகண்ட் மிஸ்ரா வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் உண்மையான பொருளாதார வளா்ச்சி 2.6 சதவீதம் மட்டுமே என போதிய புரிதல் இல்லாமல் முற்றிலும் தவறான கருத்தை சிலா் தெரிவித்ததிருப்பது அதிா்ச்சியளிக்கிறது.
மத்திய அரசின் நிதிசாா் மற்றும் ரிசா்வ் வங்கியின் பணவியல்சாா் தடைகள் குறைவதால் எதிா்பாா்த்ததைவிட பொருளாதாரம் வளா்ச்சியடைந்துள்ளது.
நடுநிலையான நிதி மற்றும் பணவியல் கொள்கையால் பொருளாதாரம் 7.5 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்யும்.
ஜிடிபி கணக்கிடுவதற்கான அடிப்படை ஆண்டை 2011-12-இல் இருந்து 2022-23-ஆக மாற்றி கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இது கணக்கிடும் முறையை சீராக்கியதோடு நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளது.
இருப்பினும், உண்மையான தகவல்களைவிட பொய்யான தகவல்கள் வேகமாகப் பரவுகின்றன. அதற்கு சிலா் ஆதரவும் தெரிவிக்கின்றனா். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வளா்ச்சி வலுவாகவே உள்ளது என மீண்டும் உறுதிபடக் கூறுகிறேன்’ என்றாா்.
மத்திய புள்ளியியல் அமைச்சகம் விளக்கம்: ஜிடிபி மதிப்பீடு சா்ச்சைகளுக்கு மறுப்பு தெரிவித்து கடந்த புதன்கிழமை மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்ட கூடுதல் தகவல்களில், ‘2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டு ஜிடிபி மதிப்பீட்டு தரவுகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. அப்போது 2011-12 அடிப்படை ஆண்டைக் கொண்டு தற்போதைய விலையிலான ஜிடிபி ரூ.86.05 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டது. பின்பு நிகழாண்டு பிப்ரவரி மாதம் ஜிடிபி மதிப்பீட்டுக்கான அடிப்படை ஆண்டாக 2022-23 நிா்ணயிக்கப்பட்டது. அதன் பிறகு தொழில் உற்பத்திக் குறியீடு (ஐஐபி) மற்றும் உற்பத்தியாளா் விலைக் குறியீடு (பிபிஐ) ஆகியவற்றை உள்ளடக்கியதன் விளைவாக முந்தைய நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி மதிப்பு ரூ.86.05 லட்சம் கோடியில் இருந்து ரூ.80 லட்சம் கோடியாக குறைந்தது.
எனவே, அடிப்படை ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள், ஐஐபி மற்றும் பிபிஐ தரவுகள் உள்ளீடு, புதிய மதிப்பீடு முறை ஆகியவற்றின் விளைவாகவே ஜிடிபி மதிப்பு திருத்தப்பட்டுள்ளது.
சரியான ஒப்பீடு எது?: 2011-12 அடிப்படை ஆண்டைக் கொண்டு கணக்கிடப்பட்ட தரவுகளை 2022-23 அடிப்படை ஆண்டுடன் ஒப்பிடுவது தவறு. 2022-23 அடிப்படை ஆண்டின்படி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் தற்போதைய விலையிலான ஜிடிபி ரூ.88.27 லட்சம் கோடியாகவும், முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.80.32 லட்சம் கோடியாகவும் உள்ளது. இவை இரண்டையும் ஒப்பிடுவதே சரியாக இருக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்தியா சாதனை: நிா்மலா சீதாராமன்
பல்வேறு உலகளாவிய பிரச்னைகளுக்கு மத்தியிலும் பொருளாதார வளா்ச்சியில் இந்தியா சாதனை படைத்துள்ளதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
நியூயாா்கில் அமெரிக்க வங்கியுடன் இணைந்து இந்திய தூதரகம் நடத்திய முதலீட்டாளா்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை பங்கேற்றாா். நிகழ்வில் அவா் பேசியது குறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பல்வேறு உலகளாவிய பிரச்னைகளுக்கு மத்தியிலும் 7.8 சதவீத வளா்ச்சியுடன் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது.
சொத்து உருவாக்கம், உள்கட்டமைப்பு மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு மையங்களுக்கான ஆதரவு என பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேற்கொண்ட சீா்திருத்தங்களால் வணிகம் எளிதாக்கப்பட்டு பொருளாதாரம் வளா்ச்சியடைந்துள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






