கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!நேபாள வெள்ளம்! பலி 1,290 ஆக உயர்வு; 10-வது நாள்களாக மீட்புப் பணிகள் தீவிரம்!நேபாள வெள்ளம்! 9 நாள்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட இருவர்!ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புகுடியரசு துணைத் தலைவா் நாளை சென்னை வருகைஉக்ரைன் போரில் அமைதி உடன்பாடு எட்ட வாய்ப்பு: ரஷிய அதிபா்

27 ஆண்டு கால சட்டப்போராட்டம்... சாதுவிலிருந்து சிஆர்பிஎஃப் வீரர் ஆனவர்! ஒரு சைக்கிளால்...

27 ஆண்டு கால சட்டப்போராட்டத்துக்குப் பின் சாதுவிலிருந்து சிஆர்பிஎஃப் வீரர் ஆனவரின் உண்மைக் கதை!

சிஆர்பிஎஃப் வீரர்

சிஆர்பிஎஃப் வீரர் - video grab

Published On :4 செப்டம்பர் 2026, 12:23 pm IST

சிஆர்பிஎஃப் வீரராக இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கிர்வர் சிங் டோமர், சுமார் 27 ஆண்டுகாலம் சட்டப்போராட்டம் நடத்தி மீண்டும் தன்னுடைய பணியை பெற்றுள்ளார்.

பணிவுடன் சுவாமியே சரணாகதி என வாழ்ந்து சாதுவாக இருந்து தற்போது மீண்டும் தன்னுடைய சீருடையை அணிந்துகொண்டு மிடுக்காக வலம் வருகிறார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த டோமர், கடந்த 1991ஆம் ஆண்டு சிஆர்பிஎஃப் வீரராக பணியில் சேர்ந்து வாழ்க்கையைத் தொடங்குகிறார். மூத்த அதிகாரியுடைய வாகனத்தின் மீது தன்னுடைய சைக்கிள் மோதிய காரணமாக எழுந்த வாக்குவாதம் முற்றி, அவர் மீது பணியில் இருந்த போது மது குடித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு 1999ஆம் ஆண்டு பணியிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.

தன்னுடைய வாழ்வின் விதி இதுதான் என விட்டுவிடாமல், இதனை எதிர்த்து துறை ரீதியாக மனு தாக்கல் செய்கிறார். அது தள்ளுபடியாக, அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடுகிறார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்குகிறது. அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் கூட, அதற்காக பணியிலிருந்தே நீக்குவது கடுங்குற்றம் என்று தீர்ப்பளிக்கிறது.

இதனை எதிர்த்து சிஆர்பிஎஃப் மேல்முறையீடு செய்து தடை வாங்குகிறது. சட்ட நடவடிக்கைகள் தொடர்கின்றன. இதற்குள் டோமரின் வாழ்வு திசை மாறுகிறது. தன்னுடைய சொந்த ஊரான மொரேனா திரும்பி, அங்குள் ஒரு மடத்தில் சாதுவாக தன்னை இணைத்துக் கொண்டு இறைபணியில் ஈடுபடுகிறார். ஒரு பக்கம் சிஆர்பிஎஃப் பணி அவரை உறங்கவிடவில்லை. சட்டப்போராட்டத்தையும் கைவிடவில்லை.

கடைசியாக, டோமர் மீதான குற்றங்களை நிரூபிக்க சிஆர்பிஎஃப் அதிகாரிகள் தவறும் நிலையில், அவரை பணியிலிருந்து நீக்கிய நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது.

1999ஆம் ஆண்டு அக்டோபரில் பணியிலிருந்து நீக்கப்பட்ட டோமர், 2026 ஆகஸ்ட் மாதம் பணியில் சேர அதாவது 27 ஆண்டுகள் சட்டப்போராட்டத்தின் பலனை பெறுகிறார்.

ஆகஸ்ட் 25ஆம் தேதி பெரிய தாடி, மீசையுடன் பிஜப்பூர் இறங்கிய டோமர், நேராக சலூன் கடைக்குச் சென்று சவரம் செய்துகொண்டு இத்தனை நாள்களும் கனவாக இருந்த சிஆர்பிஎஃப் சீருடையுடன் பணிக்குத் திரும்புகிறார்.

தான் பணியாற்றிபோது உடன் இருந்த பல வீரர்கள் தற்போது இங்கு இல்லை, ஆனால், என்னைப் பற்றி அறிந்த பலரும் என்னை மிகவும் கனிவாக வரவேற்பு உற்சாகப்படுத்தினர் என்கிறார் டோமர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.