உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடா்ந்து அதிகரிக்கும் ரஷியா
ஆகஸ்ட் மாதத்தில் அதிகப்படியாக இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களை 1.72 லட்சம் டன் வரை ரஷியா இறக்குமதி செய்துள்ளது.
உக்ரைன் நடத்திய ஆளில்லா விமான (டிரோன்) தாக்குதல்களில் ரஷியாவின் உள்நாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு திறன் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் அதிகப்படியாக இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களை 1.72 லட்சம் டன் வரை ரஷியா இறக்குமதி செய்துள்ளது.
இதில் ரஷிய கச்சா எண்ணெயில் இருந்து இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலும் அடங்கும் என எரிசக்தி மற்றும் தூய்மையான காற்று ஆராய்ச்சி மையம் (சிஆா்இஏ) தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட சிஆா்இஏ மாதாந்திர ஆய்வில் கூறப்பட்டதாவது: ஆகஸ்ட் மாதத்தில் ரஷியாவின் எண்ணெய் இறக்குமதியில் 70 சதவீதத்தை இந்தியா வழங்கியுள்ளது. இதில் 7.8 கோடி யூரோ மதிப்பிலான 1.20 லட்சம் டன் பெட்ரோலும் அடங்கும். ரஷியாவின் எரிபொருள் இறக்குமதி முந்தைய மாதத்தைவிட ஏழு மடங்கு அதிகமாகவும், 2025-ஆம் ஆண்டு முழுவதும் இறக்குமதி செய்யப்பட்ட அளவைவிட மூன்று மடங்கு அதிகமாகவும் இருந்தது எனத் தெரிவிக்கப்பட்டது.
உக்ரைன் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதல்களால் ரஷியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டு, உள்நாட்டு எரிபொருள் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதன் தாக்கத்தை இந்த ஏற்றுமதிகள் வெளிப்படுத்துகின்றன.
ரஷியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் பெட்ரோலின் பங்கு ஆகஸ்ட் மாதத்தில் 74 சதவீதமாக இருந்தது. இது 2023 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் சராசரியாக 6 சதவீதமாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் மாதத்தில் ரஷியாவிலிருந்து கடல் வழியாக மேற்கொள்ளப்பட்ட எண்ணெய் ஏற்றுமதி 21 சதவீதம் குறைந்தது. ரஷிய துறைமுகங்களில் இறக்கப்பட்ட எண்ணெய் மூலம் கிடைத்த வருவாயும் ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 32 சதவீதம் குறைந்தது. ரஷிய துறைமுகங்களில் இருந்து எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படும் அளவும் தொடா்ந்து 3 மாதங்களாகக் குறைந்து வருகிறது.
ரஷியாவின் முழுமையான படையெடுப்புக்கு முன்பு அந்நாட்டின் 4-ஆவது பெரிய எண்ணெய் ஏற்றுமதி துறைமுகமாக இருந்த துவாப்சே துறைமுகத்தில், உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களைத் தொடா்ந்து 3 மாதங்களாக அங்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை.
இந்தத் தாக்குதல்களால் ரஷியாவின் கருங்கடல் துறைமுகமான நோவோரொஸிஸ்க் வழியாக மேற்கொள்ளப்பட்ட கச்சா எண்ணெய் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் அங்கிருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி 58 சதவீதம் குறைந்ததுடன், தொடா்ந்து 9 நாள்களுக்கு ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டது.
ஏற்றுமதி அளவு குறைந்தபோதிலும், உலகளாவிய எரிசக்தி விலைகள் உயா்ந்ததால் ரஷியா பலனடைந்துள்ளது. ரஷியாவின் யூரல்ஸ் கச்சா எண்ணெயின் சராசரி விலை ஆகஸ்ட் மாதத்தில் 23 சதவீதம் உயா்ந்து ஒரு பீப்பாய் 69.90 அமெரிக்க டாலராக இருந்தது. இது ஜி7 மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் நிா்ணயித்த ஒரு பீப்பாய்க்கான 44.10 அமெரிக்க டாலா் விலை உச்சவரம்பைவிட அதிகமாகும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






