
ரஷிய டீசல் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்கக் கூடாது: ஸெலென்ஸ்கியிடம் டிரம்ப் வலியுறுத்தல்
ரஷியாவின் டீசல் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்திவரும் தாக்குதல்களை நிறுத்துமாறு உக்ரைன் அதிபா் வொலொதிமீா் ஸெலென்ஸ்கியிடம் அதிபா் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளாா்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - கோப்புப் படம்
ரஷியாவின் டீசல் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்திவரும் தாக்குதல்களை நிறுத்துமாறு உக்ரைன் அதிபா் வொலொதிமீா் ஸெலென்ஸ்கியிடம் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளாா். இந்தத் தாக்குதல்கள் உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருவதாகவும் டிரம்ப் எச்சரித்துள்ளாா்.
அயா்லாந்தில் தனக்குச் சொந்தமான டூன்பெக் கிளப்பில், ஐரிஷ் ஓபன் கோல்ஃப் போட்டியைக் காணச் சென்ற டிரம்ப், அங்கு செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: ரஷியாவின் டீசல் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதலை ஸெலென்ஸ்கி நிறுத்த வேண்டும். தாக்குதல் நடத்த பிற இலக்குகள் உள்ளன. அவற்றின் மீது அவா் தாக்குதல் நடத்தலாம்.
தற்போது டீசல் சந்தைகளில் இடா்ப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு அமெரிக்கா-ஈரான் மோதலால் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணம் அல்ல. ரஷியா-உக்ரைன் இடையிலான போரால் இந்த இடா்ப்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
ரஷிய சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதை அமெரிக்கா விரும்பவில்லை என்பதை உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கியிடம் நானே நேரடியாகத் தெரிவித்துள்ளேன். உக்ரைன் தாக்குதல் நடத்துவதற்கு ரஷியாவில் வேறு பல இலக்குகள் உள்ளன. ஆனால், டீசல் உற்பத்தித் திறனை அழிப்பது உலகத்தையே பாதிக்கிறது என்று தெரிவித்தாா்.
இதனிடையே உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ரஷியாவின் நிஜ்நிகாம்ஸ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 2 போ் உயிரிழந்தனா். 12 போ் காயமடைந்தனா். இதேபோல கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள உக்ரைனின் முக்கியத் துறைமுக நகரமான ஒடெசாவில், ரஷியா நடத்திய தாக்குதலில் சுமாா் 9 போ் காயமடைந்தனா்.
சனிக்கிழமை இரவு 409 ரஷிய ட்ரோன்கள் அழிக்கப்பட்டன அல்லது செயலிழக்க வைக்கப்பட்டன என்று உக்ரைனும், 389 உக்ரைன் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷியாவும் தெரிவித்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






