
மத்தியப் பிரதேச முதல்வர் பதவியை ராஜிநாமா செய்கிறேன்: அபிஜீத் திப்கே கிண்டல்!
சிஜேபி கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே ம.பி. முதல்வரை கிண்டலடிக்கும் வகையில், முதல்வர் பதவி ராஜிநாமா கடிதத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

அபிஜீத் தீப்கே - கோப்புப் படம்
கரப்பான்பூச்சி ஜனதா தளம் கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ்வை கிண்டலடிக்கும் வகையில், தன்னுடைய முதல்வர் பதவி ராஜிநாமா கடிதத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் தென்கிழக்கில் உள்ள பாலகாட் மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியில், ஜூலை 2026 முதல் உடல்நலப் பிரச்னைகளால் 30-க்கும் மேற்பட்ட பழங்குடியின குழந்தைகள் பலியாகினர்.
குழந்தைகள் பலியானது தொடர்பாக ஆவணங்களைச் சமர்ப்பிக்க மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
மத்திய அரசின் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த உயிரிழப்புகளுக்குக் குறிப்பிட்ட ஒரு நோயோ அல்லது கிருமியோ காரணமாக இருப்பதற்கான ஆதாரம் இல்லை எனக் கூறப்பட்டது. மாறாக, தட்டம்மை, மலேரியா, சுவாசக் கோளாறு, நீர்ச்சத்து குறைபாடு, ஊட்டச்சத்துக் குறைபாடு, ரத்த சோகை போன்ற பல்வேறு பாதிப்புகள் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
பலியான குழந்தைகளின் குடும்பத்தினரை சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே சந்தித்து, ”அவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிசெய்ய தாங்கள் முன்வருவோம்” எனத் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, சமூக ஊடகப் பிரபலங்கள் சிலர் அவரை கேலி செய்து பதிவிட்டிருந்தனர்.
முதல்வரை விமர்சிக்காமல் தன்னை விமர்சிக்கும் சமூக ஊடகவாசிகளையும், பழங்குடியினர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் உள்ள முதல்வரையும் கிண்டலடிக்கும் விதமாக முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வதாக திப்கே பதிவிட்டுள்ளார்.
முதல்வரின் உண்மையான ராஜிநாமா கடிதத்தைப் போன்றே தோற்றமளிக்கும் ஒரு போலிக் கடிதத்தைப் பகிர்ந்த திப்கே, “மத்தியப் பிரதேச முதல்வர் பதவியிலிருந்து விலகுகிறேன். மாநில மக்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பை வழங்கியதற்காகவும் அந்த வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்தாமல் நான் தோல்வியடைந்ததற்காகவும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என அந்தக் கடிதத்தில் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “பாலகாட் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட பழங்குடியினக் குழந்தைகள் பலியான பிறகு, இந்தப் பதவியில் தொடர்ந்து நீடிக்க எனது மனசாட்சி இடமளிக்கவில்லை. அவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையையும் ஆதரவையும் சரியான நேரத்தில் வழங்கத் தவறியதற்கு மாநில முதல்வராக நான் பொறுப்பேற்கிறேன். இதில், பல உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால், இதில் தோற்றுள்ள நிலையில் அந்தப் பொறுப்பிலிருந்து என்னால் தப்பிக்க முடியாது” என்றும் பதிவிட்டிருந்தார்.
பலியான குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அரசு முதலில் அறிவித்திருந்தது. பழங்குடியின மக்களின் போராட்டங்களுக்குப் பின் அது ரூ. 4 லட்சமாக உயர்த்தப்பட்டது.
இதனை விமர்சித்த திப்கே, “இது ஒரு சங்கடமான கேள்வியைக் கேட்கத் தூண்டுகிறது. ஒருவேளை அமைச்சர்கள் அல்லது எம்.எல்.ஏ-க்களின் குழந்தைகள் பலியானால் ரூ. 4 லட்சம் போதுமானது என்று நாம் கருதுவோமா? பழங்குடியினக் குழந்தைகளின் உயிர்களுக்கு அரசு எவ்வளவு குறைவான மதிப்பை நாம் வழங்கியுள்ளது என்பதை இது பிரதிபலிக்கிறது.
இதில், சுகாதாரத்துறை அதிகாரிகளை பொறுப்புக் கூற வைக்க நாம் தவறிவிட்டோம். அப்பாவி குழந்தைகளின் உயிரிழப்புகளுக்கு மிக உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
'விஸ்வகுரு' என்று அழைக்கப்படும் நமது பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் குடிநீர் இணைப்புத் திட்டம் மூலம் வீடுகளுக்குக் குடிநீர் வழங்குவதில் வெற்றி பெற்றுவிட்டதாக அறிவித்துள்ளார். ஆனால், பாலாகாட்டின் சில பகுதிகளில் இன்னும் பழங்குடியினக் குடும்பங்கள் குடிநீருக்கு ஆற்றையே நம்பியிருக்கின்றனர். இதனால், அவர்களது ஆரோக்கியம் ஆபத்துக்குள்ளாகிறது.
2003-ஆம் ஆண்டு முதல் மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி செய்கிறது. கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் கடந்தும், பல பழங்குடியினக் குடும்பங்களுக்குப் பாதுகாப்பான குடிநீர், போதுமான மருத்துவ வசதி மற்றும் தரமான கல்வி ஆகிய அடிப்படை வசதிகளைக் கூட உங்களால் தர முடியவில்லை என்பது மிகுந்த அவமானத்திற்குரியது" என்று அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Summary
Abhijit Dipke, founder of the CJP party, has shared a resignation letter for the post of Chief Minister on social media, mocking the Chief Minister of Madhya Pradesh.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






