19. காகிதம் கடந்து செல்

சேமிப்பு அல்லது நடப்புக் கணக்குடன் இணைந்த பற்று அட்டை, கடன் அட்டை அல்லாமல், வங்கிகளில் குறிப்பிட்ட பணத்தை இருப்பில் வைத்து அதற்குரிய அட்டைகள் மூலமாகவும் ரொக்கமில்லாப் பரிமாற்றம் செய்யலாம்.

பணம், தங்கம் முதலிய பொருட்களை நேரடியாக இருப்பில் வைத்திருந்து பாதுகாப்பது மிகவும் கடினமான செயல். நேரடியாக இவற்றை வைத்திருப்பதால் திருடு போகுதல், தொலைந்து போகுதல், கிழிந்தோ சிதைந்தோ போகுதல், தீ – வெள்ளம் – புயல் போன்ற இயற்கைப் பேரிடர்களால் அழிந்து போகுதல் ஆகிய அபாயங்கள் நேரிட வாய்ப்பு உண்டு. இவற்றைத் தவிர்க்க பணத்தை வங்கிக் கணக்குகளில் இருப்பு வைத்தல், வங்கி அட்டைகளைப் பயன்படுத்துதல், இணையவழி ரொக்கப் பரிவர்த்தனை, உலோகத் தங்கத்துக்குப் பதிலாக இ-கோல்டு எனப்படும் இணையவழித் தங்கம் அல்லது கோல்டு இ.டி.எஃப். எனப்படும் தங்கத்தின் மீதான பரஸ்பர நிதி முதலீடு ஆகியவை இடர்பாடு இல்லாத பயன் தருகின்றன.

இதேபோல, நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும்போது அதற்குரிய பங்குப் பத்திரங்களை காகிதச் சான்றிதழ்களாக வைத்திருக்கும் காலம் தற்போது மாறிவருகிறது. அதற்குப் பதிலாக, காகிதமற்ற இணையவழி இருப்பாக, அதாவது மின்னணு வடிவில் பங்குப் பத்திரங்களை இப்போது வைத்துக்கொள்ளலாம். இதற்கு, ஆங்கிலத்தில் டீ மெட்டீரியலிசேஷன் என்று பெயர். மெட்டீரியலிசேஷன் என்றால் பொருள் வடிவில் வைத்திருத்தல் என்று பொருள். டீ மெட்டீரியலிசேஷன் என்றால் பொருளற்ற வடிவில் வைத்திருத்தல் என்று பொருள். இந்த டீ மெட்டீரியலிசேஷனை சுருக்கமா டீ-மேட் என்று அழைப்பார்கள்.

பங்குப் பத்திரங்களின் பரிவர்த்தனையில் தற்போது இந்த டீ-மேட்டே கோலோச்சுகிறது. பங்குகள், கடன்பத்திரங்களை மட்டுமின்றி தங்கம் முதலிய பண்டகச் சந்தை விற்பனைப் பொருள்களையும் அதே வடிவிலோ, காகிதத்திலான பத்திர வடிவிலோ வைத்திருக்காமல், மின்னணு வடிவில் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு டீ-மேட் உதவுகிறது. இத்தகைய டீ-மேட் வடிவில் பங்குப் பத்திரங்களையும், இதர முதலீடுகளையும் வைத்திருப்பதே புத்திசாலித்தனம்.

கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையவர் கல்லா தவர். ((393)

‘கல்வி’யின் சிறப்பு குறித்து அதே தலைப்பிலான அதிகாரத்தின் கீழ் திருவள்ளுவர் கூறியிருப்பது, இந்த டீ-மேட்டுக்கும் பொருந்தும். கல்வி ஒருவருக்கு எதனையும் ஊடுருவிப் பார்க்கும் ஞானக் கண்ணைத் தருகிறது. ஆகையால், கற்றவர்களே கண்ணுடையவர் என்று போற்றத் தகுந்தவர். அவ்வாறு கல்வியறிவு இல்லாதவர்களுக்கு முகத்தில் இரண்டு கண்கள் இருக்கின்றபோதிலும், அது கண்ணாகக் கருதப்பட மாட்டாது, மாறாக முகத்தில் இரண்டு புண்களாகவே கருதப்படும் என்கிறார் திருவள்ளுவர். அதுபோல தற்காலத்தில், டீ-மேட் வைத்திருப்பவர்களே அறிவுக் கண்ணுடையவர்கள், அதுவின்றி சாதாரண வடிவில் பங்குப் பத்திரங்களை வைத்திருப்பவர்கள், முகத்திரண்டு புண்ணுடைய கல்லாதவர்களாகவே கருதப்படுவர்.

மின்னணு முறையில் பங்குப் பத்திரங்களை சேமித்துவைக்கும் முறை, இந்தியாவில் கடந்த 1996-ஆம் ஆண்டு அறிமுகமானது. பங்குப் பத்திர வைப்பகச் சட்டம் (டெபாசிட்டரி ஆக்ட்) என்ற சட்டத்தைக் கொண்டுவந்து இது நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்காக, அதே ஆண்டில் தேசியப் பங்குப் பத்திர வைப்பகம் என்ற நிறுவனம் (நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட்), மும்பையில் தொடங்கப்பட்டது. இதுதான் இந்தியாவின் முதலாவது மின்னணு பங்குப் பத்திர வைப்பகம். இதனைத் தொடர்ந்து, 1999-இல் இதே மும்பையில் மத்திய பங்குப் பத்திர வைப்பக சேவைகள் நிறுவனம் (சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் லிமிடெட் – சிடிஎஸ்எல்) என்ற இரண்டாவது மின்னணு பங்குப் பத்திர வைப்பகம் தொடங்கப்பட்டது.

என்எஸ்டிஎல், சிடிஎஸ்எல் ஆகிய 2 அமைப்புகளிலும் உறுப்பினர்களாக இருக்கும் வங்கிகள் மற்றும் பங்குத் தரகு நிறுவனங்கள், நாடு முழுவதிலுமாக வாடிக்கையாளர்களுக்கு மின்னணு பங்குப் பத்திர வைப்புச் சேவையை அளிக்கின்றன. இத்தகு நிறுவனங்களுக்கு பங்குப் பத்திர வைப்பகப் பங்கேற்பாளர்கள் (டெபாசிட்டரி பார்டிசிபன்ட்) என்று பெயர். ஆண்டுக்கு குறிப்பிட்ட பராமரிப்புத் தொகையை வசூலித்து, இத்தகயை சேவையை இந்நிறுவனங்கள், வாடிக்கையாளர்களான முதலீட்டாளர்களுக்குத் தருகின்றன. இதில் சேரும் வாடிக்கையாளர்களுக்கு தனியாக மின்னணு பங்கு வைப்புக் கணக்கு (டீ-மேட் அக்கவுன்ட்) தொடங்கப்படும். இதற்குரிய கடவுச் சொல்லும் தரப்படும். இதனைப் பயன்படுத்தி, எளிதில் பங்குகளை வாங்கலாம், விற்கலாம், பிறர் பெயருக்கு மாற்றலாம். இதற்குரிய இணையதளத்தில் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி, பங்குகளின் இருப்பு, அவற்றின் மதிப்பை எந்த நேரத்திலும் பார்வையிடலாம்.

டீ-மேட், அதாவது மின்னணு வடிவில் பங்குப் பத்திரங்களை வைத்திருப்பதில் மிக முக்கியமான நன்மை, இந்தப் பங்குப் பத்திரங்கள் திருட்டுப் போகாது, கிழிந்து போகவோ, நெருப்பு, தண்ணீர் போன்றவற்றால் சிதைந்து போகவோ நேராது. தொலைந்து போவதற்கும் வழியில்லை. போலிச் சான்றிதழும் தயாரிக்க முடியாது. பங்குப் பத்திரங்களை வங்கிப் பாதுகாப்புப் பெட்டகங்களில் (லாக்கர்களில்) வைத்துப் பாதுகாத்தால்கூட இத்தகைய அபாயங்களுக்கு வாய்ப்பு உண்டு. ஆனால், டீ-மேட் வடிவில் வைத்திருக்கும்போது இத்தகு இடர்கள் நெருங்குவதற்கே வழியில்லை. திருட்டு பயம், அழிவு ஆகிய பகைவர்களிடமிருந்து தக்க பாதுகாப்பு தந்து காப்பாற்றுகிறது டீ-மேட்.

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்

பகைவர்கண் பட்ட செருக்கு. (878)

‘பகைத்திறம் தெரிதல்’ என்ற தலைப்பிலான அதிகாரத்தின்கீழ் வள்ளுவர் கூறியுள்ள மேற்கண்ட குறள், டீ-மேட்டுக்கும் பொருந்தும். எதிரிகளின் சூழ்ச்சி வகைகளையும், தன்னுடைய செயல் வகையையும் நன்கு ஆராய்ந்து அறிந்துகொண்டு, அதற்கேற்ப தான் செயல்புரிந்து, தன்னை நன்கு தற்காத்துக்கொள்வதன் மூலம் நமது பகைவர்கள் கொண்டுள்ள ஆணவமாகிய செருக்கு அழிந்துபோகும் என்று இக்குறள் தெளிவுபடுத்துகிறது. ஆக, சரியான வழிமுறைகளை அறிந்துகொண்டு தன்னைத் தற்காத்துக்கொள்வதன் மூலம், நம்மை வென்றுவிடலாம் என்று கருதுகின்ற பகைவரிடமுள்ள திமிர் ஒழிக்கப்படுகிறது என்கிறார் திருவள்ளுவர். அதேபோல, டீ-மேட் கணக்குத் தொடங்கி செயல்படுபவர்களுக்கும், திருட்டு பயம், அழியுமோ என்ற பயம் ஆகிய பகைமைகள் முற்றிலும் ஒழிந்துபோகின்றன.

இதுதவிர, மேலும் பல நன்மைகளும் உண்டு. டீ-மேட் கணக்கு வைத்திருக்கும் முதலீட்டாளர்கள், தங்கள் வசமுள்ள பங்குகளைப் பிறருக்கு விற்பனை செய்யும்போது, காகிதப் பங்குப் பத்திர விற்பனையின்போது செலுத்தப்படும் முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. பரிவர்த்தனைக் கட்டணம் மிகவும் குறைவு. பதிவு வேலைகள் மிகவும் எளிதாகி, பரிவர்த்தனை நடவடிக்கை அதிகபட்சமாக இரு தினங்களில் முடிவடைந்துவிடுகிறது. காகித வடிவிலான பங்குப் பத்திர விற்பனை எனில், குறைந்தபட்சம் 10, 20 என்ற எண்ணிக்கையில்தான் பங்குகளை வாங்க முடியும், விற்க முடியும். ஆனால் டீ-மேட் மூலம் ஒற்றைப் பங்கைக்கூட வாங்கவோ, விற்கவோ இயலும். டீ-மேட் கணக்கு வைத்திருப்பவர் தனது முகவரி மாற்றத்தை தான் கணக்கு வைத்திருக்கும் பங்கு வைப்பகப் பங்கேற்பாளரிடம் (டீ-மேட் பார்டிசிபென்ட் – சுருக்கமாக டி.பி.) பதிவு செய்தாலே போதுமானது. தன் வசமுள்ள பங்குப் பத்திரங்களை வெளியிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் தனியாக முகவரி மாற்ற விவரத்தைத் தர வேண்டிய தேவையில்லை.

போனஸ் பங்குகள், ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்துடன் இணைவதால் உருவாகும் புதிய பங்குகள் போன்றவை தாமாகவே நமது டீ-மேட் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும். ஒரேயொரு டீ-மேட் கணக்கு வைத்துக்கொண்டு, அதன்மூலம் பங்குகள், கடன்பத்திரங்கள், இ-கோல்டு ஆகியவற்றை வாங்கலாம், விற்கலாம், மாற்றலாம். வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ அல்லது தான் எந்த இடத்தில் இருந்தாலும் அங்கிருந்தபடியே இணைய வழியில் பங்குப் பரிவர்த்தனை நடவடிக்கைகளை எளிதில் மேற்கொள்ளலாம்.

முதலீ்ட்டாளர்களுக்கு மட்டுமின்றி, பங்குகளை வெளியிடும் நிறுவனங்கள், அவற்றின் விற்பனை நடவடிக்கையில் ஈடுபடும் பங்குத் தரகர்கள் ஆகியோருக்கும் டீ-மேட்டால் நன்மை விளைகிறது. நிறுவனங்களுக்கு, பங்குப் பத்திரங்களை காகித வடிவில் வெளியிடுவதற்காக ஆகும் அச்சுச் செலவு, விநியோகச் செலவு ஆகியவை அகலுகிறது அல்லது பெருமளவில் குறைகிறது. பரிவர்த்தனை நடவடிக்கை எளிதாகிறது. நிறுவன நிர்வாகத்தால், பங்கு உரிமையாளர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் விரைவாகவும் தெளிவாகவும் தகவல்களை அளிக்க முடிகிறது.

பங்குத் தரகர்களைப் பொருத்தவரை, பங்கு விற்பனை நடவடிக்கைக்கான பணம் கிடைப்பதில் ஏற்படும் தாமதம் தவிர்க்கப்படுகிறது. முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை அதிகரித்து, வர்த்தகத்தையும் டீ-மேட் பெருக்குவதால், தரகர்களுக்கு வர்த்தகம் அதிகரித்து, கூடுதல் லாபம் கிடைக்க வழியேற்படுகிறது. பரிவர்த்தனை செய்யப்படும் பங்குகள் முதலீட்டாளர்களிடம் போய்ச் சேராமல் வழியிலேயே தவறுதல், கையெழுத்து மோசடி, போலி விற்பனை போன்ற தீமைகள் முற்றிலும் நீங்குகின்றன.

ஆக, டீ-மேட் கணக்கு என்பது, தீமைகள் தீர்ந்துபோக வழிசெய்து, இதை வைத்திருப்பவர்களுக்கு எளிய முறையில் சிறந்த பயன்பாடுகளையும் அளிக்கிறது. ‘அரண்’ என்ற தலைப்பிலான அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள் ஒன்று, டீ-மேட் கணக்கின் நன்மைகளை விளக்குவதுபோல் அமைந்துள்ளது.

கொளற்கரியதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்

நிலைக்கெளிதாம் நீர தரண். (745)

கொளற்கு அரியதாய்க் கொண்ட கூழ்த்து ஆகி அகத்தார் நிலைக்கு எளிதாம் நீரது அரண் என்று பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். ஓர் அரணானது எப்படி இருக்க வேண்டும் என்பதன் இலக்கணம் இதில் சுட்டப்படுகிறது. நீரது என்றால் தன்மை பொருந்தியது என்று அர்த்தம். பகைவராலோ, பிறராலோ கைவசப்படுத்துவதற்கு மிகவும் அரியதாகவும் (அதாவது இயலாதததாகவும்), தேவையான உணவு உள்ளிட்ட பொருள்கள் இருப்பதால் நுகர்வதற்கு எளிதாகவும், உள்ளே இருந்து போர் புரிபவர்களின் நிலைமைக்கு மிகவும் எளிதாக, வசதியாக பல்வேறு ஆயுதங்கள், வசதிகள் நிறைந்ததாகவும் இருக்கின்ற தன்மை பொருந்தியதே அரண் என்று போற்றத்தகுந்தது என்பது இதன் முழுப் பொருள். டீ-மேட் கணக்கும் இதனைப் போலவே, பகைவரால் கொள்வதற்கு அரிதானது, பங்குகளை வாங்குதல் - விற்றல் ஆகிய நுகர்வுக்கு எளிதானது, இதனை வைத்திருப்பவர்களுக்குக் கூடுதல் பயன்பாடுகளையும் தருகின்ற தன்மை உடையது.

டீ-மேட் கணக்கைத் தொடங்குவது எளிது. பங்குப் பத்திர வைப்பகப் பங்கேற்பாளராக (டி.பி.) செயல்படும் வங்கிகளின் கிளைகள் அல்லது பங்குத் தரகு நிறுவனங்களை அணுகி, நமது மின்னணு பங்கு வைப்புக் கணக்கை தொடங்கிவிடலாம். வங்கியில் ஒரு சேமிப்புக் கணக்கையோ, நிரந்தர வைப்புக் கணக்கையோ தொடங்குவது போன்றதுதான் இது. இதற்கு வாடிக்கையாளரின் சுயவிவரக் குறிப்பு (கே.ஒய்.சி.) படிவத்தைப் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். பங்குத் தரகு நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட வேண்டும். பொதுவாக கே.ஒய்.சி. படிவத்துடன் முதலீட்டாளரின் வருமான வரிக் கணக்கு நிரந்தர எண் (பான் எண்) கண்டிப்பாகக் குறிப்பிடப்பட வேண்டும். அதற்குரிய நகலும் இணைக்கப்பட வேண்டும். அத்துடன், நாம் வைத்துள்ள வங்கிக் கணக்கின் கடந்த 3 மாத கால அறிக்கை, முகவரிச் சான்று, வருமான வரி செலுத்திய சான்று, 2 வண்ணப் புகைப்படங்கள் ஆகியவற்றையும் இணைக்க வேண்டும். தற்போது ஆதார் நகலையும் இணைக்கவேண்டி உள்ளது.

டீ-மேட் கணக்கு வைத்திருப்பது இலவசமல்ல. அதற்குரிய கட்டணங்களைச் செலுத்தவேண்டி உள்ளது. பொதுவாக, நான்குவித கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. முதலில் டீ-மேட் கணக்குத் தொடக்கக் கட்டணத்தை டி.பி-யிடம் செலுத்த வேண்டும். சில டி.பி-க்கள், கணக்குத் தொடக்கக் கட்டணம் வசூலிப்பதில்லை. அடுத்ததாக, குறிப்பிட்ட தொகை, ஆண்டுப் பராமரிப்புக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது டி.பி-க்கு டி.பி. மாறுபடும். மூன்றாவதாக, என்.எஸ்.டி.எல். அல்லது சி.டி.எஸ்.எல். ஆகிய பங்குப் பத்திர வைப்பகங்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை கஸ்டடியன் ஃபீ எனப்படும் பாதுகாப்பு சேவைக் கட்டணம் செலுத்தவேண்டி உள்ளது. நான்காவதாக, பங்குகளை வாங்கும்போது அல்லது விற்கும்போது பரிவர்த்தனைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த டீ-மேட் கணக்கு மூலம் நிறுவனப் பங்குகளை மட்டுமல்ல, நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் என்ற பண்டகச் சந்தை நிறுவனத்திடமிருந்து, இ-கோல்டு எனப்படும் இணையவழி தங்கத்தையும் வாங்கலாம், விற்கலாம். தேவைப்பட்டால், இணைய வழி தங்கத்தை நேரடித் தங்கமாகவும் வாங்கிக்கொள்ளலாம். தங்கம் மட்டுமின்றி இணைய வழியில் வெள்ளி, பிளாட்டினம் ஆகிய உலோகங்களையும் இதுபோல் வாங்கலாம், விற்கலாம்.

இ-கோல்டு, கோல்டு இ.டி.எஃப் ஆகிய இரண்டுமே நேரடியாக வைத்திருக்கத் தேவையில்லாத இணையவழி அல்லது டீ-மேட் தங்கம்தான் என்றபோதிலும் முக்கிய வேறுபாடுகள் உண்டு. இ-கோல்டு - பண்டகச் சந்தை மூலம் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. தங்கத்தின் அன்றைய விலை மதிப்பின் அடிப்படையிலேயே இதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது. மாறாக, கோல்டு இ.டி.எஃப். என்பது தங்கத்தை வாங்கி, விற்கும் பரஸ்பர நிதியமைப்புகள் வெளியிடுகின்ற யூனிட் பத்திரங்களாகும். இதன் விலை, நேரடியாகத் தங்கத்தின் விலை அடிப்படையில் அன்றி, இந்த யூனிட்டுகளின் நிகர சொத்து மதிப்பு (என்.ஏ.வி.) அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. இ-கோல்டு முறையில் தேவைப்பட்டால் தங்கத்தை அது ஒரு கிராமாக இருந்தால்கூட, உலோகத் தங்கமாகப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், கோல்டு இ.டி.எஃப்.-ல் இவ்வாறு பெற முடியாது. எனினும், சில பரஸ்பர நிதியமைப்புகள் 500 கிராம் இ.டி.எஃப். என கணிசமான அளவு சேர்த்த பிறகு, உலோகத் தங்கமாகப் பெறுகின்ற வாய்ப்பைத் தருகின்றன.

காகிதம் கடந்த டீ-மேட் வடிவில் இத்தனை சாதகங்கள் இருந்தாலும்கூட, சில பாதகங்களும் இருக்கவே செய்கின்றன. அவற்றையும் முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். டீ-மேட் கணக்கில் எளிதாக பரிவர்த்தனை நடைபெறுகின்ற அதேவேளையில், எண்ணற்ற கணக்குகளைக் கண்காணிப்பது செபி போன்ற நெறிகாட்டி அமைப்புகளுக்கு மிகவும் கடினமான செயலாகவே உள்ளது. டீ-மேட் வடிவில் பங்குத் தரகர்களின் செயல்பாட்டைக் கண்காணிப்பது மேலும் பலப்படுத்தப்படவேண்டி உள்ளது.

மிக முக்கியமான குறைபாடு, டீ-மேட் கணக்கு மூலம் நாம் வாங்கியுள்ள பங்குகள் விற்பனையாகாத நிலை ஏற்படும்போது, டீ-மேட் கணக்கை முடித்துக்கொள்வதற்கு எவ்வித வழியும் இல்லை. இதனால், டி.பி. ஆகச் செயல்படும் பங்குத் தரகு நிறுவனம் அல்லது வங்கிக்கு, ஆண்டுப் பராமரிப்புத் தொகை போன்றவற்றை டீ-மேட் கணக்கு வைத்திருப்போர் தொடர்ந்து தேவையின்றி செலுத்திக்கொண்டே இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அத்துடன், தமது டீ-மேட்டில் வைத்திருக்கும் பங்குகள் அனைத்தையும் விற்ற பிறகு, முறைப்படி டீ-மேட் கணக்கை பலர் முடித்துக்கொள்வதில்லை. பங்குகள் அல்லது இ-கோல்டு ஆகியவை அனைத்தையும் விற்றுவிட்டால் டீ-மேட் கணக்கு தானாகவே முடிவுக்கு வந்துவிடும் என்று அவர்கள் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். இதனால், அவர்களால் கொடுபட வேண்டிய ஆண்டுப் பராமரிப்புத் தொகை ஆகியவை வளர்ந்துகொண்டே சென்று, பிற்காலத்தில் பிரச்னைக்கு வழிவகுக்கும். செயல்படாத டீ-மேட் கணக்குக்கூட ஆண்டுப் பராமரிப்புத் தொகை வசூலிக்கப்படுவதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

டீ-மேட் கணக்கைத் தொடங்குவதற்கு மட்டுமல்ல, அதில் இருந்து விலகுவதற்குக்கூட அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை அறிந்து செயல்பட வேண்டும். இவற்றை அறியாமல் இருந்துவிட்டு, பிறகு அலட்டிக்கொள்வதால் பயனில்லை. காகிதமற்ற டீ-மேட் முறை காலத்தின் கட்டாயம், அதனை முறையாக அணுகாதிருப்பது நம்முடைய மதியீனம்.

***

துணைத் தகவல்

ரொக்கமில்லாப் பரிமாற்றம்

‘ஒப்பில்லாத சமுதாயம் உலகத்துக்கோர் புதுமை’ என்று அக்காலத்தில் பாடினார் மகாகவி பாரதியார். அதனை சற்றே மாற்றி, ‘ரொக்கமில்லாத சமுதாயம் உலகத்துக்கோர் புதுமை’ என்று இக்காலத்தில் நாம் பாடலாம். ஏனெனில், நேரடியாகப் பணம் கொடுக்கும், வாங்கும் ரொக்கப் பரிவர்த்தனைக்கு மாற்றாக, காசைக் கண்ணில் காட்டாமலேயே, வங்கி அட்டைகள் வாயிலாகவோ, இணைய வழியிலோ, இன்னபிற முறைகளிலோ பணத்தைப் பரிமாற்றம் செய்யும் ரொக்கமில்லாப் பரிமாற்றம் தற்போது வளர்ச்சி அடைந்துவருகிறது. பணத்தைக் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லாத ‘கேஷ்லெஸ் சொசைட்டி’ அதாவது ‘ரொக்கமில்லாத சமுதாயம்’ என்பதே நவீன யுகத்தின் நயத்தகு லட்சியமாக உள்ளது.

அதிகபட்சமாக சிங்கப்பூர் நாட்டில்தான், 61 சதவீதப் பணப் பரிவர்த்தனைகள், ரொக்கமில்லாப் பரிமாற்றத்தின் கீழ் நிகழ்கின்றன. இதற்கு அடுத்தபடியாக, நெதர்லாந்து (ஹாலந்து) நாட்டில் 60 சதவீதம், பிரான்ஸ், ஸ்வீடன் ஆகிய நாடுகளில் தலா 59 சதவீதம், கனடாவில் 57 சதவீதம், பெல்ஜியத்தில் 56 சதவீதம், பிரிட்டனில் 52 சதவீதம், அமெரிக்காவில் 45 சதவீதம், ஆஸ்திரேலியாவில் 35 சதவீதம், ஜெர்மனியில் 33 சதவீத அளவுக்கு ரொக்கமில்லாப் பரிமாற்றங்கள் நிகழ்கின்றன. ரொக்கமில்லாப் பரிமாற்றம் நடைபெறும் நாடுகளில் தென் கொரியா (29 சதவீதம்), ஸ்பெயின் (16), பிரேஸில் (15), ஜப்பான் (14), சீனா (10), ஐக்கிய அரபு அமீரகம்-யு.ஏ.இ (8), இத்தாலி, தென்னாப்பிரிக்கா (தலா 6 சதவீதம்) ஆகிய நாடுகளும் குறிப்பிடத் தகுந்தவை.

இந்தியாவில் சுமார் 2 சதவீத பணப் பரிவர்த்தனைகள், ரொக்கமில்லாப் பரிமாற்ற வடிவில் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் கடந்த ஆண்டு (2016) கொண்டு வரப்பட்ட உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் ரத்து (டீமானிட்டிசேஷன்) நடவடிக்கையின்போதும், அதற்குப் பின்னரும் ரொக்கமில்லாப் பரிமாற்றம் சற்று வளர்ச்சியடைந்து, தற்போது சுமார் 5 சதவீத அளவுக்கு நடைபெற்று வருகிறது.

பணத்தைக் கையாளுவதில் உள்ள சிரமம், திருட்டு பயம் ஆகியவற்றைத் தவிர்ப்பதுடன், எளிதாகவும், விரைவாகவும் பணப் பரிமாற்றம் நடைபெற உதவும் ரொக்கமில்லாப் பரிமாற்றத்தை ஊக்குவிக்க, மத்திய அரசு தற்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அத்துடன் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையிலும் இந்த ரொக்கமில்லாப் பரிமாற்றம் மிகவும் உதவிகரமாக அமைந்துள்ளது.

ரொக்கமில்லாப் பரிமாற்றம் பல்வேறு வழிமுறைகளில் நடைபெறுகிறது. அவற்றில் முக்கியமானவற்றைப் பார்ப்போம். வங்கிகள் வழங்கும் பற்று அட்டைகள் (டெபிட் கார்டு), கடன் அட்டைகள் (கிரெடிட் கார்டு) போன்ற வங்கி அட்டைகள் மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிமாற்றம், ரொக்கமில்லாப் பரிமாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதேபோல் இணைய வழியிலான பணப் பரிமாற்றமும் (நெட் பேங்கிங்), இந்த வகையில் குறிப்பிடத்தகுந்தது. இதற்கு நாம் கணக்கு வைத்துள்ள வங்கியிடம் பதிவு செய்து, உரிய அடையாளக் குறியீடு (ஐடி), கடவுச்சொல் (பாஸ்வேர்டு) ஆகியவற்றைப் பெற வேண்டும்.

சேமிப்பு அல்லது நடப்புக் கணக்குடன் இணைந்த பற்று அட்டை, கடன் அட்டை அல்லாமல், வங்கிகளில் குறிப்பிட்ட பணத்தை இருப்பில் வைத்து அதற்குரிய அட்டைகள் (பேங்க் ப்ரீபெய்டு கார்டு – வங்கி முன்செலுத்துகை அட்டை) மூலமாகவும் ரொக்கமில்லாப் பரிமாற்றம் செய்யலாம். இதுபோன்ற வங்கி அட்டைகள் அனைத்தின் பயன்பாட்டுக்கும் உதவுவதற்காகவும், ரொக்கமில்லாப் பரிமாற்றத்தைச் செயல்படுத்துவதற்காகவும் வர்த்தகர்கள், ரொக்கமில்லா விற்பனை (பாய்ன்ட் ஆஃப் சேல்ஸ் – சுருக்கமாக பி.ஓ.எஸ்.) இயந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். இந்த இயந்திரத்தில் அட்டையைத் தேய்த்து வர்த்தகரின் சங்கேத எண், நமது வங்கிக் கணக்கு சங்கேத எண் (பின்) ஆகியவற்றை இயக்குவதன் மூலம் குறி்ப்பிட்ட வர்த்தகருக்குச் சேர வேண்டிய பணம் உடனடியாக நமது வங்கிக் கணக்கில் இருந்து போய்ச் சேருகிறது.

ஸ்மார்ட் ஃபோன் எனப்படும் திறன்மிகு செல்பேசியின் வருகை, ரொக்கமில்லாப் பரிமாற்றத்துக்கு மிகுந்த உத்வேகத்தை அளித்துள்ளது. இந்த ஸ்மார்ட் ஃபோன்கள் மூலம், இணையத் தொடர்பு பெற்று அதன் வழியில் ரொக்கமில்லாப் பரிமாற்றம் செய்யலாம். இல்லையேல் குறிப்பிட்ட செயலிகளை (ஆப்ஸ்) பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். நெட் பேங்கிங் போலவே, செல்பேசிகளில் இருந்தும் நாம் கணக்கு வைத்துள்ள வங்கியின் குறிப்பிட்ட செயலியைப் பதிவிறக்கம் செய்து அதன் வாயிலாக செல்பேசி வங்கிச் சேவை (மொபைல் பேங்கிங்) வாயிலாக, ரொக்கமில்லாப் பரிமாற்றம் செய்யலாம்.

தற்போது பல வங்கிகளும், தனியார் அமைப்புகளும் செல்பேசி பணப்பை (மொபைல் வாலட்) அல்லது மின்னணு பணப்பை (இ-வாலட்) என்ற வசதியை அளிக்கின்றன. அவற்றில் குறிப்பிட்ட பணத்தை இருப்பில் வைத்து (இந்தப் பணப் பரிமாற்றத்தைக்கூட இணைய வழியிலேயே மேற்கொள்ளலாம்), அவ்வப்போது பொருட்களை வாங்கும்போது அல்லது கட்டணங்களைச் செலுத்தும்போது செல்பேசி பணப்பையில் இருந்து ரொக்கமில்லாப் பரிமாற்றம் செய்யலாம். பேடிஎம், ஜியோ மணி, ஏர்டெல் மணி, எஸ்பிஐ பட்டீ, ஸ்பீடுபே, ஐசிஐசிஐ பாக்கெட்ஸ் போன்றவை இந்த இ-வாலட்டுக்கு ஒருசில உதாரணங்கள்.

செல்பேசி வழியில் ரொக்கமில்லாப் பரிமாற்றம் செய்ய யு.பி.ஐ. எனப்படும் யூனிஃபைடு பேமென்ட் இன்டர்ஃபேஸ் (ஒருங்கிணைந்த பணம் செலுத்துகை இணைப்பான்) அல்லது யு.எஸ்.எஸ்.டி. எனப்படும் அன்ஸ்ட்ரக்சர்டு சப்ளிமென்டரி சர்வீஸ் டேட்டா (கட்டமைப்பற்ற துணைச் சேவை நிரல்) ஆகிய மென்பொருள்களின் (சாஃப்ட்வேர்) துணை தேவைப்படுகிறது. பொதுவாக யு.பி.ஐ. முறை, இணையத் தொடர்புடன் கூடிய ஸ்மார்ட்ஃபோன்களில் பயன்படுத்தப்படுகிறது. ஸ்மார்ட்ஃபோன் அல்லாத அடிப்படை (பேசிக்) செல்பேசிகளில் யு.எஸ்.எஸ்.டி. முறை பயன்படுத்தப்படுகிறது.

ஆதார் எண்ணுடன் இணைந்த பணம் செலுத்துகை வழிமுறையும் தற்போது ரொக்கமில்லாப் பரிமாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனை ஆங்கிலத்தில் ஆதார் எனபில்டு பேமென்ட் சிஸ்டம் – சுருக்கமாக ஏ.இ.பி.எஸ். என்று கூறுவர். சமையல் எரிவாயுவுக்கான மானியம், உர மானியம் போன்றவற்றை நமது வங்கிக் கணக்கில் மத்திய அரசு நேரடியாகச் செலுத்துவது இந்த வகையைச் சார்ந்ததே. இதன்மூலம் போலியான நபர்களுக்கும், இடைத்தரகர்களுக்கும் மானியத் தொகை வீணாகச் செல்வது தடுக்கப்பட்டு, உரிய நபர்களுக்கு மானியம் நேரடியாகவும், எளிதாகவும் சென்றுசேர வழி ஏற்பட்டுள்ளது.

செல்பேசி வழியான பணப்பட்டுவாடாவில் பல்வேறு வங்கிகளும் பல்வேறு இணைப்பான்களை (இன்டர்ஃபேஸ்) பயன்படுத்துவது நடைமுறைச் சிக்கலை உருவாக்கி வந்தது. இந்தக் குறைபாட்டைப் போக்க, யு.பி.ஐ. அடிப்படையில் பல்வேறு வங்கிச் சேவைகள் இணைந்த பீம் என்ற செல்பேசி செயலியை, பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு (2016) டிசம்பர் 30-ஆம் தேதி அறிமுகப்படுத்தினார். பாரத் இன்டர்ஃபேஸ் ஃபார் மணி என்பதன் சுருக்கமே பி.ஹெச்.ஐ.எம். என்ற எழுத்துகளால் ஆன பீம். அதேநேரத்தில், மறைந்த சட்ட மேதை பீமாராவ் அம்பேத்கரின் நினைவைப் போற்றும் வகையிலும் இந்தச் சேவைக்கு பீம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சிங்கப்பூர், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இணையாக இந்தியாவிலும் ரொக்கமில்லாப் பரிமாற்றம் நடைபெற பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில், முழுவதும் ரொக்கமில்லாப் பரிமாற்றம் நடைபெறும் இந்தியாவின் முதல் கிராமம் என்ற பெருமையை, பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள அகோத்ரா கிராமம், கடந்த ஆண்டு (2016) நவம்பர் 21-ஆம் தேதி பெற்றது. இதேபோல் முழுவதும் ரொக்கமில்லாப் பரிமாற்றம் நடைபெறும், நாட்டின் முதலாவது பழங்குடியினர் குடியிருப்பு என்ற பெருமையை, கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நெடுங்காயம் என்ற ஊர், 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி பெற்றது.

இதேபோன்று, முழுவதும் ரொக்கமில்லாப் பரிமாற்றம் நடைபெறும் முதல் நகரம் சண்டீகர் (05.12.2016), முதல் தீவு மணிப்பூர் மாநிலத்தில் உள்ள கரங்க், முதல் மாவட்டம் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ஹலியாகண்டி (05.12.2016), முதல் மாநிலம் கோவா (31.12.2016) என்று பெருமை பெற்றுள்ளன. இவற்றில் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளுக்கும் செல்பேசி செயலிகளைப் பொதுமக்கள் பயன்படுத்த முடியும் என்பதுடன், அரசின் பணப் பட்டுவாடாக்களும் ரொக்கமில்லாப் பரிமாற்றம் மூலமே செயல்படுத்தப்படுகின்றன.

புதுமையிலும் சில இடர்பாடுகள் இருக்கத்தான் செய்யும். ஆயினும் அவற்றைச் சமாளித்து புதுமையைக் கைக்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனி்ல், பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவில கால வகையிலானே என்கிறது தமிழ் இலக்கண நூலான நன்னூல். காலச் சூழல் மாறுவதற்கு ஏற்ப, பழையவை அகற்றப்பட்டு, புதியன புகுவது குற்றமாகாது என்பது இதன் பொருள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com