16. காக்க காக்க காப்பீடு காக்க

காப்பீடு என்பது, நமக்குத் தேவையான நேரத்தில், அதாவது நமக்கு பொருள் இழப்பு அல்லது வேறு வகையான இழப்புகள் நேரிடுகின்ற தருணத்தில், அந்த இழப்பை ஈடு செய்வதற்கு உதவும் கருவி.

பொருளை ஆக்குவது கடினம் என்றால், அதனைவிடக் கடினம் ஆக்கிய பொருளை அழியாமல் காப்பது. தோன்றும் பொருள் எல்லாம் மறையும் என்பது இயற்கையின் விதி. அதற்கு எதுவும் தப்பமுடியாது. உலகில் உயிருக்கே உத்தரவாதம் இல்லை எனும்போது, பொருள்களுக்கு எப்படி அழியாத்தன்மை என்ற உத்தரவாதத்தைத் தர முடியும். பொருளை ஆக்கும்போது படுகின்ற துயரங்களைவிட, பொருளை இழக்கும்போது அடைகின்ற துயரங்களே அதிகம்.

ஆகையால், செல்வத்தைப் படைப்பதைப்போல அதனை அழியாமல் காப்பதற்கான செயல்பாடுகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதனையும் மீறி அழிவு, இழப்பு ஏறப்படத்தான் செய்யும். பொருளாதாரச் சிந்தனையில் பார்ப்போமானால், இதுபோன்ற தருணங்களில் அழிவில் இருந்து பொருள்களைக் காப்பாற்ற முடியாவிட்டாலும், அதனால் ஏற்படுகின்ற இழப்புகளை ஏறக்குறைய ஈடுசெய்துவிட முடியும். இவ்வாறாக இழப்புகளை ஈடுசெய்வதற்கான முன்னேற்பாட்டுக்குப் பெயர்தான் காப்பீடு.

நாம் வாங்குகின்ற அல்லது உருவாக்குகின்ற சொத்து முதலிய பொருள்களுக்கு மட்டுமின்றி மனித ஆயுளுக்கும் ஏற்படுகின்ற இழப்புகளை பொருளாதார ரீதியில் இந்தக் காப்பீடுகள் ஈடு செய்கின்றன. அதுமட்டுமல்ல, சில வகை காப்பீட்டுத் திட்டங்கள் நமது உடல்நலம் கெடும்போது அல்லது நமக்கு விபத்து போன்ற தீய பாதிப்புகள் ஏற்படும்போது, அத்தகைய நேரத்தில் தேவைப்படுகின்ற நிதித் தேவையையும் பூர்த்திசெய்து காக்கின்றன. ஆகையால், காப்பீடுகள் என்பவை, நம்மைப் பலவகையிலும் காப்பாற்றுகின்ற கவசங்கள்போல் திகழ்கின்றன.

காப்பீடு என்பது, நமக்குத் தேவையான நேரத்தில், அதாவது நமக்கு பொருள் இழப்பு அல்லது வேறு வகையான இழப்புகள் நேரிடுகின்ற தருணத்தில், அந்த இழப்பை ஈடு செய்வதற்கு உதவும் கருவி. இந்தக் கருவி நமக்குப் பயன்பட வேண்டுமானால், முன்கூட்டியே நமக்கு ஏற்பட வாய்ப்புள்ள இழப்புகளை கணித்து, அதற்கேற்ற வகையிலான திட்டங்களில் நாம் நமது சேமிப்புகளை இடவேண்டி உள்ளது. இவ்வாறு முன்கூட்டியே இட்டுவைத்த தொகைதான், வட்டியோடும் இதர வகையிலும் வளர்ந்து, பிற்காலத்தில் தேவையான தருணத்தில் நமக்கு ஏற்படும் இழப்புகளை ஈடு செய்கின்றன. ஆக, இட்டால்தான் ஈடு கிடைக்கும். இத்தகைய காப்பீடுகளின் அவசியம் குறித்து ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் தெள்ளத் தெளிவாகக் கூறியிருக்கிறார். ‘குற்றம் கடிதல்’ என்ற தலைப்பிலான அதிகாரத்தின் கீழ் அமைந்துள்ள அக்குறளைக் காண்போம் –

வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும். (435)

வைத்தூறு என்றால் வைக்கோல்போர். அதாவது, வைக்கோல்மூட்டை என்று பொருள். எரி என்றால் தீ. எரிகின்ற தீக்கு முன் நிற்கின்ற வைக்கோல்போர் ஆனது எவ்வாறு அந்தத் தீயால் முற்றிலும் எரிந்து நாசமாகுமோ, அதைப்போல, ஒரு தீங்கு வருவதற்கு முன்பேயே அதில் இருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்கான வழிமுறையைச் செய்துகொள்ளாதவனுடைய வாழ்க்கையும் மிச்சமின்றி அழிந்துபோகும் என்று மிகச் சரியாகவே எச்சரிக்கிறார் தெய்வப்புலவர்.

ஆகையால், இழப்புகள் அல்லது பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்பேயே அவற்றில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகளைச் செய்துகொள்ள வேண்டும். அதேபோல, தவிர்க்க முடியாத அந்தப் பாதிப்புகள் அல்லது இழப்புகள் நேர்ந்துவிடும் பட்சத்தில், அதிலிருந்து நாம் விரைவில் மீள்வதற்கு பொருளாதார ரீதியில் உதவுகின்ற காப்பீட்டுத் திட்டங்களையும் நாம் முன்கூட்டியே கைக்கொண்டிருக்க வேண்டும்.

இதுபோன்ற காப்பீடுகளில் நமக்குப் பயன்படத் தகுந்தவற்றை நாம் அவசியம் அறிந்துகொண்டு அவற்றை எடுத்தாக வேண்டும். சேமிப்பு, முதலீடுகள் மூலம் செல்வத்தை எதற்குச் சேர்க்கிறோம்? நமக்குத் தேவையானவற்றை வாங்குவதற்கும், அதன்மூலம் நம்மைக் காப்பாற்றிக்கொள்வதற்காகவும்தானே? ஆகையால், நம்மைக் காக்கும் பொருள்களை அழிவில் இருந்து காப்பாற்றிக்கொள்வதும், ஒருவேளை தவிர்க்க இயலாமல் அழிவு நேர்ந்துவிட்டால், அந்த இழப்பில் இருந்து நம்மை மீட்டு சரிபடுத்திக்கொள்வதும் அவசியம்தானே? அந்தவகையில், அனைவரும் காப்பீட்டுத் திட்டங்களில் அவசியம் இணைந்தாக வேண்டும். ‘தெரிந்து செயல்வகை’ அதிகாரத்தின் கீழ் வரும் குறள் இதனை உணர்த்துகிறது.

செய்தக்க அல்ல செயக்கெடும், செய்தக்க

செய்யாமை யானும் கெடும். (466)

வாழ்க்கையில் செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை என இரு வகைகள் உள்ளன. ஆங்கிலத்தில் இதனைத்தான் டூஸ் அண்ட் டோன்ட்ஸ் என்று கூறுகிறார்கள். எல்லா துறைகளிலும், எல்லா நிலைகளிலும் இந்த செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை என்ற வகைப்பாடு உண்டு. இதில் செய்யத் தகாதவற்றைச் செய்தோமானால், அதனால் நமக்கு அழிவு ஏற்படும். அதேபோல, செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டோமானாலும், அதன்மூலமும் நமக்கு கெடுதி ஏற்படும் என்கிறது இத் திருக்குறள். காப்பீடுகள் இதில் இரண்டாவது வகையைச் சேர்ந்தவை. நாம் கட்டாயம் செய்ய வேண்டிய செயல், உரிய காப்பீடுகளை எடுத்துக்கொள்ளுதல். அதைச் செய்யத் தவறினால், இழப்புகளில் இருந்து மீளமுடியாத அழிவு நிச்சயம்.

இந்தக் காப்பீட்டுத் திட்டங்கள் நமது தேவைக்கேற்ப பல்வேறு வகைப்படுகின்றன. ஆயுள் காப்பீடு, வாகனக் காப்பீடு, வீட்டுக் காப்பீடு ஆகியவற்றோடு மருத்துவக் காப்பீடு, பயணக் காப்பீடு ஆகியவையும் தற்போது மக்களுக்கு மிகவும் பயன் தருகின்றன.

ஆயுள் காப்பீடு

காப்பீடு என்றதும் உடனடியாக பலரது நினைவுக்கு வருவது இவ்வகைக் காப்பீடே. பொதுவாக பலரும் இணைகின்ற காப்பீட்டுத் திட்டமும் இதுதான். ஒரு குடும்பத்தைத் தாங்கி நிற்கும் குடும்பத் தலைவர் அல்லது குடும்பத் தலைவியின் ஆயுள், அக் குடும்பத்துக்கு மிகவும் அவசியம். அனைவரையும் ‘தீர்க்க ஆயுளுடன் வாழ்’ என்று வாழ்த்துவது நமது பாரம்பரியம். ஆயினும், எதிர்பாராத காரணங்களால் தீர்க்க ஆயுளுக்கு முன்னரே சிலரது ஆயுள் முடிந்துபோகக் கூடிய நிலைமை ஏற்பட்டுவிடுகிறது. அதுபோன்ற தருணங்களில், அந்த நபரையே நம்பியிருக்கும் குடும்பத்தின் நிலைமை என்னாவது? ஒருவரின் உயிரிழப்பை ஈடு செய்ய யாராலும் முடியாது. ஆயினும் அந்த நபரால் அவரது குடும்பத்துக்குக் கிடைக்கக்கூடிய பொருளாதார ஆதாயத்துக்கு ஏற்படுகின்ற இழப்பை ஈடு செய்வதுதான் ஆயுள் காப்பீடு.

இத் திட்டத்தின் கீழ், காப்பீடு எடுத்துக்கொள்ளும் நபரின் உயிரிழப்பின்போது, அவரது குடும்பத்துக்கு ஏற்கெனவே உறுதியளிக்கப்பட்ட தொகை (ஸம் அஸ்யூர்டு) இழப்பீடாகத் தரப்படுகிறது. அதுமட்டுமல்ல, காப்பீடு எடுத்துக்கொள்ளும் நபர், நிரந்தர முடமாகிப்போனாலோ அல்லது திட்ட முதிர்வுக் காலத்தின்போதோ ஏற்கெனவே உறுதியளிக்கப்பட்ட முதிர்வுத் தொகையைப் பெறுவதற்கும் இதில் வாய்ப்பளிக்கப்படுகிறது. இந்த ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களிலும் சில வகைப்பாடுகள் உள்ளன. அவை –

காலக்கெடு ஆயுள் காப்பீடு (டெர்ம் லைஃப் இன்சூரன்ஸ்) – நமக்குத் தேவைப்படும் காலத்துக்கு, உதாரணமாக 20 அல்லது 30 ஆண்டுகள் என்பதைப்போல இதுபோன்ற காப்பீடுகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பிட்ட காலத்துக்கு ஆண்டுதோறும் நாம் காப்பீடுக்கான சந்தா தொகையை, அதாவது பிரீமியம் தொகையைச் செலுத்திவர வேண்டும். காப்பீடு எடுத்த காலகட்டத்துக்குள் (உதாரணத்துக்கு 30 ஆண்டு) காப்பீடு எடுத்தவருக்கு மரணம் சம்பவிக்கும் பட்சத்தில், ஏற்கெனவே உறுதியளிக்கப்பட்ட தொகை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். மற்றபடி இத்தொகை அளிக்கப்பட மாட்டாது. அத்துடன், ஆண்டுதோறும் கட்டப்படும் பிரீமியத் தொகையும் திருப்பி அளிக்கப்பட மாட்டாது. எனினும், சில ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், நாம் கட்டிய பிரீமியத் தொகையை மட்டும் முதிர்வுக் காலத்தில் திருப்பித் தரும் வகையிலான திட்டத்தைச் செயல்படுத்துகின்றன.

நிதி வழங்கும் ஆயுள் காப்பீடு (என்டோவ்மென்ட் இன்சூரன்ஸ்) – காலக்கெடு ஆயுள் காப்பீட்டைப் போலன்றி, முதிர்வுக் காலத்தின்போது நாம் செலுத்திய தொகைக்கு ஊக்கத் தொகையையும் சேர்த்து வழங்கும் திட்டம்தான் என்டோவ்மென்ட் பாலிஸி. முதிர்வுக் காலத்துக்கு முன்பு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால், ஏற்கெனவே உறுதியளிக்கப்பட்ட தொகையை குடும்பத்தாருக்கு இந் நிறுவனத்தார் வழங்கிவிடுவர். காலக்கெடு திட்டத்தைவிட நிதி வழங்கும் திட்டத்துக்கான சந்தாத் தொகை கூடுதலாக இருக்கும். ஒருவேளை மரணம் நேர்ந்தால், குடும்பத்தாருக்கு அதிக அளவில் தொகை கிடைக்க வேண்டும் என்று கருதுவோர், முன்கூறிய திட்டத்தையும், முதிர்வுக் காலத்தின்போது ஓரளவு தொகை கணிசமாகக் கையில் கிடைக்க வேண்டும் என்று கருதுவோர் பின்கூறிய திட்டத்தையும் எடுத்துக்கொள்வது நல்லது.

பங்குச் சந்தையுடன் தொடர்புடைய ஆயுள் காப்பீடு (யூலிப்) – ஆங்கிலத்தில் இதனை யூனிட் லிங்க்டு இன்சூரன்ஸ் பாலிஸி என்பார்கள். யூனிட் என்பது பரஸ்பர நிதித் திட்ட அலகைப் போன்றது. இத் திட்டத்தைச் செயல்படுத்தும் நிறுவனத்தார், காப்பீட்டுக்காக நாம் செலுத்துகின்ற சந்தாத் தொகையில் (பிரீமியம்) பெரும் பகுதியை பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வார்கள். இவ்வாறு பரஸ்பர நிதியமைப்புத் திட்டத்தைப்போல, நமது தொகை, பங்குச் சந்தையில் பரவலாக முதலீடு செய்யப்படும்போது ஆதாயம் மிகுதியாகக் கிடைக்கும். அதேநேரத்தில், பங்குச் சந்தை பாதிப்புகளால் இழப்பு ஏற்படக்கூடிய இடரும் இதில் உண்டு. அதனை நாம் தெரிந்துகொண்டு இத்திட்டத்தில் இணைய வேண்டும். அதே வேளையில், வழக்கமான என்டோவ்மென்ட் திட்டங்களில் செலுத்தப்படுகின்ற பிரீமியத்தைவிட இதற்கு அதிக அளவிலான பிரீமியம் செலுத்த நேரிடும். இதனையும் இத் திட்டத்தில் சேர விரும்புவோர் தெரிந்துகொண்டிருக்க வேண்டும்.

சில ஆயுள் காப்பீட்டு முகவர்கள், அவர்களுக்கு கழிவுத்தொகை (கமிஷன்) கூடுதலாகக் கிடைக்கும் என்ற காரணத்தால், யூலிப் திட்டங்களை வாடிக்கையாளர் தலையில் கட்டிவிடுவதாகப் பரவலாகப் புகார் உண்டு. அதில் ஓரளவு உண்மையும் உள்ளது. அதேபோல், இந்த யூலிப் திட்டங்களில், மூன்றாண்டுகள் அல்லது 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து சந்தா தொகை கட்ட வேண்டும். அதன்பிறகு தேவைப்பட்டால் நிறுத்திக்கொள்ளலாம். திட்டக் காலம் 20 ஆண்டுகள் என்றால் அதன்பிறகு நமது முதலீட்டுக்கு ஏற்ப யூனிட்டுகளில் இடப்பட்ட முதலீடுகளின் வளர்ச்சிக்கு ஏற்ப கூடுதல் தொகை சேர்த்து திரும்ப வழங்கப்படும். ஆனால், 20 ஆண்டுகள் தொடர்ந்து அத்திட்டத்தில் இருப்பதனால் கிடைக்கும் பயனைவிட, இடையில் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி முதலீடு செய்வதை நிறுத்தியதால் கிடைக்கும் பயன் குறைவாகவே இருக்கும். சிலர், முகவர்கள் கூறினார்கள் என்பதாலோ அல்லது நுணுக்கமாக ஆய்ந்தறிய வேண்டிய இவ்விஷயத்தை மேம்போக்காக அறிந்துகொண்டதாலோ 20 ஆண்டுகளுக்குப் பிறகு வர வேண்டிய கூடுதல் தொகை இடையில் நிறுத்தினாலும் வரும் என நினைத்து பிறகு ஏமாந்துபோவார்கள்.

நமது முதலீடுகளுக்கு நாம்தான் எஜமானர்கள், நாம் சிந்தித்துப் பார்த்து முடிவெடுக்காமல் பிறரைக் குறை கூறுவதால் நமக்குப் பயனில்லை, இழப்பு இழப்புதான். யூலிப் திட்டங்கள் மோசமான திட்டங்கள் அல்ல. ஆனால், இடர்களுக்கும் வாய்ப்புள்ள திட்டங்கள் அவ்வளவே. அவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டியது முதலீட்டாளரின் கடமை.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு. (424)

‘அறிவுடைமை’ என்ற அதிகாரத்தின் கீழ் வரும் குறள் இது. எந்தவொரு விஷயத்தை யார், யார் கூறக் கேட்டாலும் அதனுடைய உண்மையான பொருள் என்ன என்பதை ஆராய்ந்து அறிந்துகொள்வதே அறிவாகும் என்பது இதன் பொருள். ‘யூலிப்’ திட்டங்களில் இணைவோர் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய குறள் இது.

முழு ஆயுள் காப்பீடு (ஹோல் லைஃப் இன்சூரன்ஸ்) – டெர்ம் பாலிஸி, என்டோவ்மென்ட் பாலிஸிகளைப்போல குறிப்பிட்ட காலத்துக்கு மேற்கொள்ளப்படாமல் ஆயுள் முழுமைக்கும் எடுத்துக்கொள்ளப்படும் காப்பீட்டுத் திட்டம் இவ்வகையைச் சார்ந்தது. இந்த வகைத் திட்டத்தின் கீழ், ஒருவர் தனது முழு ஆயுளுக்கும், அதாவது மரணம் அடைகின்ற வரையில் சந்தா தொகை செலுத்தி வர வேண்டும். காப்பீட்டின் பயன்கள் முழுவதும், தான் இல்லாத நிலையில் தமது குடும்பத்தாருக்குக் கிடைக்க வேண்டும் என்று கருதுவோர் இவ்வகைக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம்.

இடையே பணம் வழங்கும் ஆயுள் காப்பீடு (மணிபேக் இன்சூரன்ஸ்) – வழக்கமான ஆயுள் காப்பீடுகள், இறப்பின்போதோ அல்லது முதிர்வுக் காலத்தின்போதோதான் காப்பீட்டுத் தொகையை பயனாளிகளுக்குக் கொடுக்கும். ஆனால், காப்பீடு எடுத்துக்கொள்ளப்பட்ட காலத்துக்கு இடையிலேயே அவ்வப்போது குறிப்பிட்ட தொகையைத் திரும்ப வழங்கும் வகையிலான திட்டங்களே ‘மணிபேக்’ பாலிஸிகள் ஆகும். உதாரணத்துக்கு, ஒருவர் 20 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தின் கீழ் இணைகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் தொடர்ந்து இத்திட்டத்தின் கீழ் பிரீமியம் தொகை செலுத்தி இணைந்திருக்கும் பட்சத்தில், 5-ஆவது ஆண்டில் ஒரு தொகை, 10-ஆவது ஆண்டில் ஒரு தொகை, 15-ஆவது ஆண்டில் ஒரு தொகை, இறுதியில் திட்ட முதிர்வின்போது மீதித் தொகை என பிரித்து வழங்கப்படுகிறது. இவ்வாறு பணம் வழங்கும் காலம், திட்டத்துக்கு திட்டம் வேறுபடும். குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற எதிர்காலத் தேவைகளைக் கருதுவோர் இத்திட்டத்தில் இணையலாம்.

ஆயுள் காப்பீடு தவிர, இதர வகைக் காப்பீடுகள் பொதுக் காப்பீடு (ஜெனரல் இன்சூரன்ஸ்) என்ற வகைப்பாட்டில் குறிப்பிடப்படுகின்றன. அவற்றில் மெடி க்ளைம் என்று அழைக்கப்படும் மருத்துவக் காப்பீடு (ஹெல்த் இன்சூரன்ஸ்) குறிப்பிடத்தக்கது.

மருத்துவக் காப்பீடு - ஒருவருக்கு ஏற்படும் நோய்க்கான சிகிச்சை, அறுவை சிகிச்சை, மருத்துவமனைச் செலவுகள் ஆகியவற்றை ஈடு செய்ய இத்தகைய மருத்துவக் காப்பீடு உதவுகிறது. இவ்வகைத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையை சந்தாவாகச் செலுத்த வேண்டும். இந்தப் பணம் திருப்பி அளிக்கப்பட மாட்டாது. மாறாக, நமக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும்போது, ஏற்கெனவே உறுதியளிக்கப்பட்ட தொகையின் அடிப்படையில் நமக்குக் காப்பீட்டுத் தொகையை இந்நிறுவனத்தார் வழங்குவர். நாம் கட்டுகின்ற சந்தா தொகையின் அளவுக்கு ஏற்பவும், குறி்ப்பிட்ட சிகிச்சைக்குத் தேவைப்படும் நிதி, மருத்துவமனைச் செலவுகளின் அடிப்படையிலும் இந்தக் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

மருத்துவச் செலவுகளை முதலில் நாம் செய்துவிட்டு, பிறகு அதற்குரிய ரசீதுகளின் அடிப்படையில் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து உரிய காப்பீட்டுத் தொகையைப் பெறலாம். அல்லது காப்பீட்டு நிறுவனம் வழங்கும் அட்டையை மருத்துவமனையில் காண்பித்து, அங்கே சேர்ந்து உரிய சிகிச்சையைப் பெற்ற நிலையில், நேரடியாக மருத்துவர்கள் அல்லது மருத்துவமனை நிர்வாகத்தினருக்கு காப்பீட்டு நிறுவனமே பணம் செலுத்திவிடுகின்ற வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இதில் பிந்தைய வாய்ப்பையே பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கின்றனர்.

மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொண்ட உடனேயே இத்திட்டத்தின் பயன்கள் கிடைத்துவிடும் என்று கருதிவிட வேண்டாம். சில வகை நோய்கள் அல்லது சிகிச்சைகளுக்கு குறி்ப்பிட்ட காலம் சென்ற பிறகுதான் திட்டத்தின் பயனைப் பெற முடியும். இதுகுறித்து மருத்துவக் காப்பீடு தொடர்பான விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை ஊன்றிப் படிக்க வேண்டும். இந்த மருத்துவக் காப்பீட்டிலும் வகைப்பாடுகள் உண்டு. அவற்றைப் பொதுவாக மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

மருத்துவ சிகிச்சைக் காப்பீடு (ஹாஸ்பிடலிசேஷன் பிளான்) – காப்பீடுதாரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பட்சத்தில், ஏற்கெனவே உறுதியளிக்கப்பட்ட தொகைக்கு உட்பட்டு மருத்துவச் சிகிச்சைகளுக்கான காப்பீட்டுத் தொகையைப் பெறலாம். உதாரணத்துக்கு ரூ. ஒரு லட்சத்துக்கு ஒருவர் காப்பீடு எடுத்திருக்கிறார், ஆனால் அவருக்கு குறிப்பிட்ட சிகிச்சைக்கு ரூ.40 ஆயிரம் தேவைப்படுகிறது எனும்போது, ரூ.40 மட்டுமே காப்பீடாக வழங்கப்படும். அதேநேரத்தில், ரூ. ஒரு லட்சத்துக்கு மேல் செலவானால், ஏற்கெனவே உறுதி அளிக்கப்பட்டுள்ள ரூ. ஒரு லட்சமும் திருப்பி அளிக்கப்படும். தனிநபருக்கு மட்டுமின்றி, குடும்ப உறுப்பினர்களின் பெயரில் மொத்தமாகவும் இவ்வகைக் காப்பீடுகளை எடுக்க முடியும். இதில் குடும்பத்தின் பேரில் ஒட்டுமொத்தமாக எடுக்கப்படும் திட்டம் (ஃபேமிலி ஃபுளோட்டிங் பாலிஸி) கூடுதல் பயன்தரக் கூடியது.

உதாரணத்துக்கு, ஒரு குடும்பத்தில் 4 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களது பெயரில் தனித்தனியாக தலா ரூ. ஒரு லட்சத்துக்கு மருத்துவக் காப்பீடு எடுக்கப்படும் பட்சத்தில், அதிகபட்சம் அத்தொகை அளவுக்குத்தான் அவருக்குக் காப்பீட்டுத் தொகை பெற வாய்ப்புண்டு. அதேநேரத்தில் குடும்பத்தின் பெயரில் ஒட்டுமொத்தமாக காப்பீடு எடுத்திருக்கும் பட்சத்தில், அதில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ரூ. 4 லட்சம் தொகையை, ஒரு நபருக்கே தேவைப்படும் பட்சத்தில் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தினசரி மருத்துவச் செலவு பயன் காப்பீடு (ஹாஸ்பிடல் டெய்லி கேஷ் பெனிஃபிட் பிளான்) – மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது தினசரி செலவுகளுக்கான தேவையைக் கருதி இத் திட்டத்தில் சேரலாம். இத்திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு ஏற்கெனவே உறுதியளிக்கப்பட்ட தொகையின் அடிப்படையில், தினசரி செலவுக்கான தொகையை காப்பீட்டு நிறுவனம் வழங்கும். தினசரி செலவாகும் தொகை உறுதியளிக்கப்பட்ட தொகையைவிடக் கூடுதலாக இருந்தாலும் சரி, குறைவாக இருந்தாலும் சரி அதனைக் கருத்தில் கொள்ளாமல் உறுதியளிக்கப்பட்ட தொகை முழுவதும் வழங்கப்படும்.

அபாய நோய் சிகிச்சைக் காப்பீடு (கிரிட்டிகல் இல்னெஸ் பிளான்) – சாதாரண நோய், விபத்துகளுக்கு ஆகும் மருத்துவ சிகிச்சையைவிட இதயநோய், மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை, பக்கவாத சிகிச்சை ஆகியவற்றுக்கு அதிக அளவில் பணம் தேவைப்படும். இதுபோன்ற தேவைகளுக்காக முன்ஜாக்கிரதையாக எடுத்துக்கொள்ளப்படும் மருத்துவக் காப்பீடே, கிரிட்டிகள் இல்னெஸ் பிளான்.

நவீன முறையிலான மருத்துவக் காப்பீட்டுக்கும் பொருத்தமான குறள், உலகப் பொதுமறையான திருக்குறளில் இடம்பெற்றுள்ளது. ‘பெரியாரைத் துணைகோடல்’ என்ற அதிகாரத்தின் கீழ் வரும் அக் குறளை இனி காண்போம் -

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்

பெற்றியார்ப் பேணிக் கொளல். (442)

பெரியோர்களின் அறிவுரையாகிய துணையின் அவசியத்தை வலியுறுத்துகின்ற குறள் இது. இதன் பொருள் – நமக்கு வந்திருக்கின்ற துன்பத்தை நீக்குவதற்கும், இதுபோன்ற துன்பங்கள் வராமலேயே நம்மைத் தற்காத்துக்கொள்வதற்கும் துணைபுரிகின்ற பெருமையுடைய பெரியோர்களை நாம் மகிழ்ச்சியோடு அரவணைத்து நட்பு பாராட்ட வேண்டும். மருத்துவக் காப்பீடுகளுக்கும் இக்குறள் நன்கு பொருந்தி வருகிறது. ஒருவருக்கு ஏதேனும் நோய் வந்தால், அதனை நீக்குவதற்கான சிகிச்சையை மேற்கொள்வதற்குத் தேவைப்படும் பணத்தை உடனடியாகத் தந்து நோயை நீக்க மருத்துவக் காப்பீடு உதவுகிறது. அத்துடன், இதுபோன்ற இக்கட்டான தருணங்களில் நாம் பணத்துக்காக படுகின்ற துன்பத்தை உறாமல் முன்கூட்டியே காப்பாற்றுவதாகவும் மருத்துவக் காப்பீடு அமைகிறது. ஆகையால், காலத்தே உதவும் மருத்துவக் காப்பீட்டை அனைவரும் கைக்கொள்வது அவசியம்.

வாகனக் காப்பீடு (மோட்டார் இன்சூரன்ஸ்) – இரு சக்கர மோட்டார் வாகனங்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு விபத்துகளால் ஏற்படும் இழப்புகளை ஈடு செய்வதற்கு இந்தக் காப்பீடு உதவுகிறது. இந்தக் காப்பீட்டை எடுக்கும்போது, ஒருவேளை விபத்து நேரிடும்பட்சத்தில், காப்பீடுதாரரின் வாகனத்துக்கு ஏற்படும் சேதம், அவருக்கு ஏற்படும் காயம் போன்றவற்றுக்காக காப்பீட்டு நிறுவனமானது, உறுதியளிக்கப்பட்ட தொகை மற்றும் சேதத்தின் மதிப்பீடு அடிப்படையில் காப்பீட்டுத் தொகையை வழங்கும். காப்பீடுதாரர் முதல் தரப்பு எனவும், காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தும் நிறுவனம் இரண்டாம் தரப்பு எனவும் அழைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் விபத்து நேரும்போது நமது வாகனத்தால் வேறு ஒருவருக்கு – அதாவது எதிரே வரும் வாகனவோட்டி அல்லது பாதசாரியாகச் செல்லும் மனிதர் என பாதிப்பு ஏற்படும் மற்ற மனிதர் – மூன்றாம் தரப்பு எனச் சுட்டப்படுகிறார். தற்போதைய வாகனக் காப்பீடுகளில் முதல் தரப்பினருக்கு மட்டுமின்றி, மூன்றாம் தரப்பினருக்கும் சேர்த்து வாகன உரிமையாளர்கள் காப்பீடு எடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வீட்டுக் காப்பீடு (ஹோம் இன்சூரன்ஸ்) – சொந்த வீடுகளின் பேரில் இவ்வகைக் காப்பீடு எடுக்கப்படுகிறது. மழை, வெள்ளம், புயல், தீவிபத்து போன்றவற்றால் வீடுகளுக்கு ஏற்படும் இழப்புகளை இது ஈடுசெய்கிறது. திருட்டுகளால் ஏற்படும் இழப்புகளைச் சமாளிக்க ஹோம் பர்க்ளரி இன்சூரன்ஸ் உதவுகிறது. வீட்டில் குடியிருக்கும் வாடகைதாரர்களால் ஏற்படும் இழப்புகளைச் சமாளிக்க ஹோம் லேண்டுலார்டு இன்சூரன்ஸ் பயன்படுகிறது.

பயணக் காப்பீடு (டிராவல் இன்சூரன்ஸ்) – நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள், தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அடிக்கடி வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்வது தவிர்க்க இயலாததாகிவிட்டது. இவ்வாறு பயணம் செல்லும்போது, சில சமயங்களில் நாம் செல்ல வேண்டிய விமானம் அல்லது ரயில் ரத்தாகிவிடலாம். வேறு சில சந்தர்ப்பங்களில் விபத்து நிகழலாம். இல்லையேல், நமது உடைமைகள் திருடுபோகவோ, தவறிப்போகவா நேரிடலாம். இதுபோன்ற தருணங்களில், பயணம் செல்வோருக்கு ஏற்படுகின்ற இழப்பை ஈடுசெய்ய பயணக் காப்பீட்டுத் திட்டங்கள் உதவுகின்றன. தனிநபர் பயணக் காப்பீடு, குடும்பப் பயணக் காப்பீடு, மாணவர் பயணக் காப்பீடு ஆகிய திட்டங்கள் உள்ளன. அத்துடன் பயணங்களின்போது முதியோர்களுக்கு ஏற்படும் உடல்நலக் குறைவால் ஏற்படும் பிரச்னைகளையும், செலவுகளையும் சமாளிக்க மூத்த குடிமக்கள் பயண மருத்துவக் காப்பீடு உதவுகிறது.

இவைபோக வர்த்தக நிறுவனங்களுக்கான வர்த்தகக் காப்பீடு (கமர்ஷியல் இன்சூரன்ஸ்), சரக்குப் போக்குவரத்தில் ஏற்படும் இழப்புகளைச் சமாளிக்க உதவும் சரக்குப் போக்குவரத்துக் காப்பீடு (கார்கோ இன்சூரன்ஸ்) ஆகியவையும் நடைமுறையில் உள்ளன.

வாழ்க்கையின் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அனைவரும் தங்களுக்குத் தேவையான காப்பீட்டுத் திட்டங்களில் சேர்வது காலத்தின் கட்டாயம். ஏனெனில் காப்பீட்டுத் திட்டங்கள், காலத்தில் உதவுபவை.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு. (788)

‘நட்பு’ என்ற அதிகாரத்தின் கீழ் வருகின்ற இந்தக் குறள் காப்பீட்டுத் திட்டங்களுக்கு மிகவும் பொருத்தமானது. உடுக்கை என்றால் இடுப்பில் கட்டியுள்ள வேட்டி என்று பொருள். ஒருவனுக்கு இடுப்பில் கட்டியுள்ள வேட்டி அவிழும்போது, உடனடியாக அவனது கை விரைந்து சென்று அவிழ்ந்த வேட்டியைச் சரிசெய்து, பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. அதனைப்போல, ஒருவனுக்குத் துன்பம் வந்தபோது விரைந்து சென்று, அவனுக்குப் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்து உதவுவதே நல்ல நண்பனின் அடையாளம் என்று இக் குறள் எடுத்தியம்புகிறது.

இவ்விதம் ஓர் உற்ற நண்பனைப்போல, நாம் துன்பம் உறுகின்ற வேளையில், விரைந்து வந்து அதனால் ஏற்படும் இழப்புகளில் இருந்து நம்மைக் காப்பாறுவதே காப்பீடு ஆகும்.

***

துணைத் தகவல்

சிறிய செலவு, பெரிய பலன்

காப்பீடு என்பது ஒரு முழு அளவிலான முதலீடு அல்ல. நமக்கு ஏதேனும் இழப்புகள் நேரிட்டால் அதில் இருந்து மீள்வதற்கான முன்னேற்பாடுதான் காப்பீடு. ஆகையால் காப்பீடுகளை, லாப ஆதாயம் கருதி மேற்கொள்ளக்கூடாது. மாறாக, நமக்கு ஏற்படும் நஷ்டத்தி்ல் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான கருவியாகப் பயன்படுத்த வேண்டும்.

ஆகையால், எந்தவகைக் காப்பீட்டையும், ஒரு விஷயத்தில் நமக்கு ஏற்படக்கூடிய இழப்பு என்ன, அதனைச் சமாளிக்க இந்தத் திட்டம் எந்தவகையில் பயன்படுகிறது என்பதைக் கணக்கிட்டே காப்பீட்டுத் திட்டத்தில் சேர வேண்டும். குறிப்பாக, ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் சேருவோர் இதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். நமது குடும்பத்தின் தேவைகளுக்கு ஒருவேளை நாம் இல்லாவிடில் எவ்வளவு தொகை தேவைப்படுமோ அதற்கு வழிவகுப்பதுதான் ஆயுள் காப்பீட்டின் முக்கிய நோக்கம்.

அந்தவகையில், நமது தற்போதைய சம்பளம், அன்றாடச் செலவுகளுக்குத் தேவைப்படும் நிதி, நம்மால் மாதந்தோறும் அல்லது வருடந்தோறும் கட்டுவதற்கு இயலக்கூடிய சந்தாத் தொகை (பிரீமியம்), நமது குடும்பத்துக்குத் தேவைப்படும் நிதி ஆகிய அனைத்தையும் கருத்தில்கொண்டு அதற்கேற்ற திட்டத்தில் இணைய வேண்டும். பொதுவாக, இளம் வயதில் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்வதே கூடுதல் பயன் தருவது. ஏனெனில், எவ்வளவு இளமையில் ஆயுள் காப்பீடு எடுக்கிறோமோ அந்த அளவுக்குக் குறைந்த அளவே பிரீமியம் செலுத்தவேண்டி இருக்கும். வயது ஏற ஏற பிரீமியம் தொகையும் ஏறிவிடும்.

இளவயதில் எடுத்த ஒரு காப்பீடே ஆயுளுக்கும் போதும் என்று நினைத்துவிடக் கூடாது. வயது ஏற ஏற, குடும்பமும் பெரிதாகி, தேவைகளும் அதிகரிக்கும். அத் தேவைகளுக்கு ஏற்ப அவ்வப்போது கூடுதல் தொகைக்கான காப்பீட்டுத் திட்டங்களில் சேர வேண்டும். உதாரணத்துக்கு, கடனுதவி பெற்று வீடு வாங்குவோர் அந்தக் கடன்தொகைக்கு நிகரான தொகையைத் திரும்பத் தரும் காப்பீட்டுத் திட்டத்தில் சேர வேண்டியது அவசியம்.

இதேபோல மருத்துவக் காப்பீடு எடுக்கும்போது அதில் ஆண்டுதோறும் பயன் கிடைக்காது. திடீரென நமக்கு ஏற்படும் இன்னலின்போது ஆபத்பாந்தவனாகக் கைகொடுக்கும். ஆகையால் இதுபோன்ற காப்பீடுகளை உடனடி லாபம் கருதாமல், அத்தியாவசியத் தேவை கருதி எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு போன்றவற்றுக்கு வருமான வரிச் சலுகைகளும் உண்டு. டெர்ம் பாலிஸி தவிர இதர வகை காப்பீட்டுத் திட்டங்கள், ஊக்கத் தொகை அல்லது வளர்ச்சித் தொகையுடன் முதிர்வுத் தொகையைத் தருவதால், எதிர்காலத்தில் பயன்படும் சேமிப்பாகவும் காப்பீட்டுத் திட்டங்கள் பயனளிக்கின்றன.

இழப்பை ஈடு செய்வதுதான் காப்பீட்டின் முதல் நோக்கம், முதிர்வுத் தொகையாகப் பயன் தருவது இரண்டாவது நோக்கம்தான். இதனைக் காப்பீடுதாரர்கள் நினைவில் நிறுத்த வேண்டும். இந்நிலையில், ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் கூடுதலாக சிறு அளவு தொகையைச் செலவு செய்தால், பெரிய அளவில் கூடுதல் பலன்களைத் தரக்கூடிய இணைப்புகள் உள்ளன. இதுபோன்ற இணைப்புகளுக்கு இன்சூரன்ஸ் வட்டாரத்தில் ‘ரைடர்ஸ்’ என்று பெயர்.

மனைவி அல்லது கணவருக்கும் சேர்த்து காப்பீடு வழங்க வழிவகுக்கும் வாழ்க்கைத்துணைக் காப்பீடு இணைப்பு (ஸ்பௌஸ் இன்சூரன்ஸ் ரைடர்), ஆயுள் காப்பீடுதாரர் விபத்தில் உயிரிழக்க நேரிட்டால் கூடுதல் தொகை அளிக்கும் விபத்து மரணக் காப்பீடு இணைப்பு (ஆக்ஸிடென்டல் டெத் ரைடர்), குழந்தைகளின் பேரில் கூடுதலாகக் காப்பீடு எடுக்க உதவும் குழந்தைக் காப்பீடு இணைப்பு (சைல்டு டெர்ம் ரைடர்), காப்பீடுதாரருக்கு விபத்தினாலோ அல்லது வேறு விதத்திலோ நிரந்தர ஊனம் ஏற்பட்டு முடங்கிப்போகும்போது அவர் மேற்கொண்டு கட்ட வேண்டிய பிரீமியத் தொகைகளைத் தள்ளுபடி செய்ய உதவும் சந்தா தள்ளுபடி இணைப்பு (வைவர் ஆஃப் பிரீமியம் ரைடர்) போன்ற இணைப்புகள் உள்ளன. இவற்றுக்குக் கட்ட வேண்டிய கூடுதல் தொகை எவ்வளவு, அதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் எத்தகையவை, நமக்கு எது தேவைப்படும் என்பதை அறிந்துகொண்டு அதற்கேற்ப இந்த இணைப்புகளிலும் இணைந்து பயன் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com