பொன்னேரி, ஆக.18: பொன்னேரியில் போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக இருந்த அண்ணாசிலை அகற்றப்பட்டு மாற்று இடத்தில் அமைக்கப்பட்டது. பொன்னேரி பழைய பஸ் நிலையம் அருகில் செங்குன்றம்-திருவற்றியூர் சாலை இணையும் இடத்தில் இடத்தில் 30ஆண்டுகளுக்கு முன்பு பொன்னேரி நகர திமுக சார்பில் மார்பளவு அண்ணாசிலை அமைக்கப்பட்டது. அதனை திமுக தலைவர் கருணாநிதியால் அப்போது திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளி பகுதியில் அமைந்துள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலை, எண்ணூர் துறைமுகம், வடசென்னை அனல் மின் நிலையம், இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் கொண்டக்கரை, இடையஞ்சாவடி, திருவொற்றியூர் பகுதியில் அமைந்துள்ள 100-க்கும் மேற்பட்ட கண்டெய்னர் கிடங்குகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் இச்சாலை வழியேதான் சென்று வருகிறது. இதன் காரணமாக இப்பகுதியில் எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்து காணப்படும். போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக சாலையின் குறுக்கே அமைந்திருந்த அண்ணாசிலையை அகற்றி மாற்று இடத்தில் அமைக்க பொன்னேரி போலீஸôர் முடிவு செய்தனர். இதையடுத்து பொன்னேரி நகர திமுக நிர்வாகிகளை போலீஸôர் அழைத்து பேசினர். இதன் பின்னர் தற்போது அண்ணாசிலை இருக்கும் இடம் அருகே புதிதாக பீடம் ஒன்று அமைக்கப்பட்டது. இதன் பின்னர் பொன்னேரி டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் பொன்னேரி நகர திமுகவினர் முன்னிலையில் பழைய இடத்தில் இருந்த அண்ணாசிலை அகற்றப்பட்டு புதிதாக கட்டப்பட்ட பீடத்தில் நிலை நிறுத்தப்பட்டது. சீரானது போக்குவரத்து நெரிசல்.... போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து அண்ணாசிலை அகற்றப்பட்டு மாற்று இடத்தில் அமைக்கப்பட்டதை அடுத்து தற்போது அங்கு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் சென்று வருகின்றன. தானியங்கி சிக்னல் விளக்கு கம்பங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.... அண்ணாசிலை அருகே கடந்தாண்டு அமைக்கப்பட்டு இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ள தானியங்கி சிக்னல் விளக்குகளை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாகும்.