ஸ்ரீவில்லிபுத்தூரில் சில பகுதிகளில் மின் விநியோகத்தில் பாரபட்சம் காட்டப்படுவதாக கூறி, ஒரு பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர். இதனால் அப் பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர், முதலியார்பட்டி தெரு பொது மக்கள் ஊர் தலைவர் முருகன் தலைமையில், ரயில்வே நிலையம் அருகேயுள்ள துணை மின்நிலையத்தை முற்றுகையிட்டனர். தங்கள் பகுதிக்கு மின் விநியோகத்தில் பாரபட்சம் காட்டப்படுவதாகக் கூறி அவர்கள் இந்த திடீர் முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர். நகரில் பகலில் 4 மணி நேரம் மின் விநியோகம் செய்தால், தங்கள் பகுதிக்கு 3 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.
அங்கிருந்த உதவி பொறியாளர் பாஸ்கரன் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, உங்களது கோரிக்கையை மேலிடத்திற்கு தெரியப்படுத்தி சீரான மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதியளித்தார். இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.